கொன்றைவேந்தன் (6-10)

-பத்மன்

கொன்றைவேந்தன் – மூலம்

கொன்றைவேந்தன் (1-5)

கொன்றைவேந்தன்- 6

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்


விளக்கம்:

ஊரில் உள்ள அனைவரையும் நாம் பகைத்துக்கொள்ள நேரிட்டால் அடியோ டுஅழிந்து போவோம்.

ஒருசிலரோடு பகை ஏற்படுவது இயல்பு. நம்மீது எத்தவறு இல்லாதபோதிலும் தவறான கண்ணோட்டத்தால் நம்மீது சிலர் பகைமை பாராட்டக்கூடும். அதுவேறு. ஆயின் ஊரே நம்மீது பகை என்றால், தவறுகளில் பெரும்பகுதி நம்மீதே இருக்கும். ஆகையால்தான் ஊருடன் பகைக்கின் என்று நேரடியாக நம்மைப் பார்த்து எச்சரிக்கிறார் ஔவையார்.

வேறு வகையில் சிந்தித்தால், ஊரில் பலரோடு நமக்குப் பகை ஏற்படும் பட்சத்தில் நட்புவேர், உறவுவேர், அன்புவேர், அந்த ஊருடனான பாசப்பிணைப்பு வேர் உடனடியாகக் கெட்டுப்போகத் தொடங்கிவிடும் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆகையால் பகை கூடாது, அதிலும் ஊரிலே ஒட்டுமொத்தப் பகை, பெரும்பகை ஏற்படாதவகையில் நமது எண்ணமும் செயல்பாடும் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் ஔவையார்.

$$$

கொன்றைவேந்தன்-7

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்


விளக்கம்:

எண்கள் எனப்படும் கணிதமும், எழுத்து எனப்படும் இலக்கண, இலக்கியங்களும் கண்களைப்போல முக்கியமானவை; நமது அறிவுக்கண்களாக விளங்குபவை.

மேலும், அறிவியலுக்கு ஆதாரமான எண்களும், அறிந்துகொண்டவற்றைப் பிறர் அறியப் பயன்படும் எழுத்துகளும் கண்களைப்போல மதிக்கவும் காப்பாற்றவும் தகுந்தவை என்றும் கொள்ளலாம்.

நம் வாழ்வின் ஒவ்வோர் அசைவிலும் எண் உள்ளது. இந்த உலகமே எண்களின் விளையாட்டுத்தான். பூஜ்யத்தில் தொடங்கி ஒன்றாய், பலவாய்க் கிளைத்து, பின் மீண்டும் பூஜ்யத்துக்குள் நிறைவு பெறுகிறது பிரபஞ்சம். இந்த விளையாட்டில் அறிவியிலின்படி பிரபஞ்சக்கூறுகளான ஒவ்வொரு தனிமத்துக்கும் சேர்மத்துக்கும் நிறைஎண் உண்டு. அவை எழுதுகின்ற வேதியியல் விளைவுகளே வாழ்க்கை. வானியலிலும் எண்கள் உண்டு. வானியல் சார்ந்த ஜோதிடத்திலும் எண்கள் உண்டு. கோள்களின் சாரத்தால், சஞ்சாரத்தால் பொதுவாக உலகுக்கும் குறிப்பாக தனிமனிதருக்கும் ஏற்படும் சாதக பாதக விளைவுகளும் எண்களின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகின்றன.

இந்த உலகவாழ்க்கையை ஐயன் கையெழுத்து என்கிறோம். அவை கர்மவினைகளின் எண்ணிக்கையைப் பொருத்து இறைவனால் வடிக்கப்படுகின்றன. அவ்வாறு விதிக்கப்படுவது விதி ஆகிறது. விதி என்ற எழுத்து, எவ்வித நெறிமுறைகளையும் வகுத்துப் பரிபாலிக்கும் சட்டமாகவும் எழுகிறது. இலக்கியங்களும் அறிவியல், வரலாறு உள்ளிட்ட இன்ன பிற தகவல்களும் எழுத்துகளால் வாழ்வு பெறுகின்றன.

சாங்கிய தத்துவத்தின்படி 25 எண்கள் அதாவது தத்துவங்களே உலகின் அடிப்படை. பிரகிருதி, புருஷன், மஹத் முதலியவையே அவை. இவற்றை எண்ணிச் சிந்தித்து, பகுத்தறிந்து எழுவதன்மூலம் முக்தி சித்திக்கிறது.

பக்திவழி ஆன்மிகத்திலே எண்ணும் எழுத்தும் போற்றப்படுகின்றன. நமசிவாய -ஐந்தெழுத்து (பஞ்சாக்ஷரம்), சரவணபவ – ஆறெழுத்து (ஷடாக்ஷரம்), ஓம்நமோநாராயணாய – எட்டெழுத்து (அஷ்டாக்ஷரம்) என எண்ணும் எழுத்தும் இணைந்து மதிக்கப்படுகின்றன; துதிக்கப்படுகின்றன. (ஓம் என்பது ஏகாக்ஷரமாகவே ஒற்றை எழுத்தாகவே கருதப்படுகிறது).

இந்தப் புனித எழுத்துகளைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உச்சரிப்பது, தியானிப்பது பாராயணம் ஆகிறது.

வேதத்துக்கு ‘ஸ்ருதி’ எனப் பெயர். அது பிற்காலத்தில் வியாசரால் தொகுக்கப்பட்டு எழுதப்பட்டாலும் முற்காலத்தில் மனனமாகவே இவை நினைவில் வைக்கப்பட்டு வாய்மொழியாக போதிக்கப்பட்டன; கற்றுக்கொள்ளப்பட்டன. ஸ்ருதியின் உச்சரிப்பிலும் அக்ஷரங்களின் ஒலியளவாகிய எண்ணிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. ஸ்ருதி இவ்விதம் எண்ணை அடிப்படையாகக் கொண்டது. ஸ்ருதியை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்டவையே ஸ்மிருதிகளும் இதிகாச, புராணங்களுமாகும். இவை எழுத்துகளாகும்.

ஆக, எண்ணம் என்பது எண்ணிக்கையை மாத்திரமல்ல, எண்ணுகின்ற சிந்தனையையும் குறிக்கிறது. இந்தச் சிந்தனையே நம் வாழ்க்கையை எழுதச் செய்கிறது. ஆகையால் நம் வாழ்வின் அடிப்படையாகவும் இலக்குகளாகவும் திகழ்கின்ற எண்ணும் எழுத்தும் கண் எனப் போற்றத் தகுந்தவை என்கிறார் ஔவையார்.

$$$

கொன்றைவேந்தன்- 8

ஏவா மக்கள் மூவா மருந்து


விளக்கம்:  

ஒன்றைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளாமலே குறிப்பறிந்து வேண்டியவற்றைச் செய்யும் நன்மக்கள்பேறு அமிருதம் போன்றதாகும்.

மூவா என்றால் மூப்படையச் செய்யாத என்று பொருள். இயற்கையான மரணம் நரை, திரை, மூப்புக்குப் பின்னேதான் வருகிறது. மூப்படையாமல் இளமையோடு இருந்தால் நீண்டகாலம் வாழலாம். அதற்கான மருந்து அமிருதம் ஆகும். மிருதம் என்றால் இறக்கக்கூடியது. அமிருதம் என்றால் இறவாமல் இருக்கச்செய்வது எனப் பொருள். ஆக மூவாமருந்து என்பது அமுதம் எனப்படும் அமிருதமாகும்.

நமது குறிப்பறிந்து வேண்டுவன செய்யும் பிள்ளைகள் இருந்துவிட்டால் மனஆரோக்கியத்தால் உடல்ஆரோக்கியமும் நீடிக்கும்.ஆகையால் வயது அதிகரித்தாலும் மூப்புத் தெரியாது. அதுவே அமிருதமாக நம்மை வாழச்செய்கிறது. பிள்ளைகளின் அலட்சியமே பெற்றோர்களுக்கும் பெரியோர்களுக்கும் மூப்பை அதிகரிக்கச் செய்கிறது. ஆகையால் ஏவாமலேயே சேவையாற்றும் பிள்ளைகள் இருந்துவிட்டால் அதுவே அமுதமாகும் என்கிறார் ஔவையார்.

மக்கள் என்பது தமக்குப் பிறந்த பிள்ளைகளையும் குறிக்கும், பொதுமக்களையும் குறிக்கும். நாம் வாழுகின்ற இடத்தில் உள்ள மக்கள் யாவரும் பிறர் ஏவாமலேயே தங்கள் செயல்களை, கடமைகளை நிறைவேற்றினார்கள் என்றால் அந்த இடம் சொர்க்கமாகி விடுமே! அந்த வாழ்க்கை, அமரர்கள் பெற்ற மூவாமருந்தாகிய அமுதத்துக்குச் சமானமாகுமே!

சொல்லாமல் செய்வார் மேலோர் (உத்தமர்), சொல்லிச் செய்வார் இடையோர் (மத்திமர்), சொல்லியும் செய்யார் கீழோர் (அதமர்) என்றொரு சொல்வழக்கு உண்டு. நல்லதை எடுத்துச்சொல்லி இவ்வாறு செய் என்று கட்டளை இடாமலேயே அவற்றைத் தானே உவந்து செய்யக் கூடியவர்கள் மேலோர். அத்தகைய உத்தமர்கள் இருந்துவிட்டால் அதுவே அமிருதமாகும் என்பதை ஔவையார் குறிப்பால் உணர்த்துகிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.

$$$

கொன்றைவேந்தன்- 9

ஐயம் புகினும் செய்வன செய்


விளக்கம்: 

பிச்சை எடுக்க நேரிட்டாலும் செய்ய வேண்டிய செயல்களைச் செய் என்கிறார் ஔவையார்.

இதற்குப் பலபொருள் கொள்ளலாம்.முதலாவதாக, பிச்சை எடுத்து வாழ நேரிடும் சூழ்நிலை ஏற்பட்டாலும் நீ செய்ய வேண்டிய கடமைகளைச் செம்மையாகச் செய் என அறியலாம். ஏறத்தாழ இதேபொருளில் பிச்சைபுகினும் கற்கைநன்றே என்கிறது அதிவீரராமபாண்டியனின் வெற்றிவேற்கை (நறுந்தொகை). எனவே, கல்வி கற்றல், தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தார் உயிரைக் காப்பாற்றுதல் போன்ற கடமைகளை ஆற்ற பிச்சையேற்பதும் தவறில்லை.

இரண்டாவது பொருள்: பலரிடம் யாசகம், தானம் பெற்றாவது செய்வதற்குரிய அரிய நற்செயல்களைச் செய்.

பல அறக்கட்டளை, தரும காரிய அமைப்புகளை இதற்கு உதாரணங்களாக எடுத்துக்கொள்ளலாம். இங்கே பிச்சை ஏற்பது பெருமைக்குரிய செயலாகிறது.

மூன்றாவது பொருள்: பிச்சை ஏற்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும்கூட செய்யக்கூடாத இழிசெயல்களை, தீயசெயல்களை, பாவச்செயல்களைச் செய்யாதே என எடுத்துக்கொள்ளலாம். பிச்சை எடுத்தாலும் நெறிபிறழாமல் வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.

ஆக பொருளாதாரத்தில் நம் நிலை தாழ்ந்தாலும்கூட அறம் பிறழாமல், வாழ்க்கைத்தரம் குறைந்தாலும்கூட வாழ்வின்தரம் குறையாமல்வாழ் என்கிறார் ஔவையார்.

$$$

கொன்றைவேந்தன்- 10

ஒருவனைப் பற்றி ஓரகத்திரு


விளக்கம்:

எல்லாம்வல்ல ஒருவனாகிய இறைவன் திருவடியைப் பற்றி, அந்த இறைவனை உன் அகத்திலே அதாவது உள்ளத்திலே இருத்திக்கொள் என்கிறார் ஔவையார்.

இதற்கு ஒருவனைக் கைப்பிடித்து அவனது வீடாகிய புக்ககத்திலேயே இரு என ஔவையார் சொன்னதாக சிலரால் பொருள் கூறப்படுகிறது. இது தவறான விளக்கம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இது இடைக்கால ஔவையார் பாடியதாகக் கூறப்படுகிறது. அவரதுகாலம் 12ஆம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. அக்காலத்திலும்கூட பெண்களுக்கு இத்தகைய அறிவுரை கூறத் தேவை இருந்திருக்காது. இக்காலத்தில் மணமுறிவு அதிகமாகிவிட்டதே இப்போது பொருந்துமாஎனில், ஒருவரைப் பற்றி ஓரகத்தில் இருப்பது இருபாலருக்கும் தானே தேவை? அதுதானே சமூகஆரோக்கியம்!

ஆகையால் இங்கே ஒருவன் என்பதை இறைவனாகவும் ஓரகம் என்பதை நம் உள்ளமாகவும் பொருள் கொள்வதே எக்காலத்துக்கும், எப்பாலருக்கும் பொருந்தும்.

இருப்பினும் பெண்களுக்குத்தான் இந்த அறிவுரையை ஔவையார் கூறினார் என்பதில் யாரேனும் பிடிவாதமாக இருந்தால், அதை இவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்:

பெண்ணே, நல்லஆடவன் ஒருவனைக் கரம்பிடித்து, உனது உயர்ந்த குணங்களால், செயல்களால் அவனது உள்ளத்தில் எப்போதும் குடியிரு. என்ன, சரிதானே!

$$$

2 thoughts on “கொன்றைவேந்தன் (6-10)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s