-திருநின்றவூர் ரவிகுமார்

அமெரிக்க அதிபர் முதல் அனைவரும் மேற்கு வங்க மாநில தேர்தல் நிகழ்வுகளை பரபரப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாஜகவை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் பல ஆண்டுகளாக மம்தா பானர்ஜி கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தங்கள் கட்சி அலுவலகங்களை மீட்டெடுத்துக் கொண்டாடினார்கள் . பாஜகவின் வெற்றி காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளுக்கும் விடுதலை உணர்வை ஏற்படுத்தி உள்ளது. மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வரும் முன்பு அதிகாரத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் இதையே காங்கிரசுக்கு செய்திருந்தனர். இன்று இரண்டு கட்சியினருக்கும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது.
காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் கட்சிகள் (அ முதல் ஔ வரையிலான அனைத்துப் பிரிவுகளும்) வீர சாவர்க்கரை இன்றும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. வீர சாவர்க்கர் பெரும் புரட்சியாளர். ஆங்கிலேயரை எதிர்த்து வன்முறை வழியில், வெடிகுண்டுப் பாதையில் பயணித்தவர்.
கம்யூனிஸ்டுகள் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த பிறகு கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் வன்முறை வெறியாட்டத்தின் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டனர். மம்தா பானர்ஜி அதே வழியில் பயணித்து மேற்கு வங்கத்தில் அவர்களை வீழ்த்தினார். அதே வழியில் தொடர்ந்தார். ஆனால் சாவர்க்கரைப் போற்றும் பாஜக வன்முறை இல்லாமல் ஜனநாயக வழியில் மம்தா பானர்ஜியை வென்று ஆட்சியில் அமர்ந்துள்ளது.
சாவர்க்கரைத் தூற்றும் கம்யூனிஸ்டுகளும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையைப் பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரைப் போற்றும் பாஜக வன்முறை வழியைத் தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா? யார் சாவர்க்கரைப் பின்பற்றுகிறார்கள்?
வீர சாவர்க்கர் 1883 ஆம் ஆண்டு மே மாதம் 28 தேதி, மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் பாகூர் கிராமத்தில் பிறந்தார். தேசபக்தர்களான சாபேகர் சகோதரர்களை இளம் வயதிலேயே தூக்கிலிட்டது ஆங்கிலேய அரசு. அதனால் மனம் கொதித்த சாவர்க்கர் 1898 இல் தனது குலதெய்வத்தின் முன்பு, ஆயுதப் புரட்சி மூலம் ஆங்கிலேய அரசை அகற்ற சபதம் மேற்கொண்டார். 1900 ஜனவரி மாதம் ‘மித்ர மேளா’ என்ற அமைப்பை ஆரம்பித்து (17 வயதில்!) தன் சக மாணவர்களை அதில் இணைத்தார். மித்ர மேளா ரகசியப் புரட்சி அமைப்பு என்பது கவனிக்கத்தக்கது.
1904 மே மாதத்தில் ‘அபிநவ பாரத்’ என்ற புரட்சிகர இயக்கத்தை ஆரம்பித்தார். அதன் உறுப்பினர்கள் தங்கள் விரலைக் கீறி ரத்த அபிஷேகம் செய்து சபதம் ஏற்பார்கள். மேற்படிப்புக்காக லண்டனுக்குச் சென்றபோதும் அவரது புரட்சிகரச் செயல்பாடுகள் தீவிரமாக இருந்தன. அதனால் 1910 மார்ச் மாதம் ஆங்கிலேய அரசு அவரை லண்டனில் கைது செய்தது. அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும் வழியில் அவர் கப்பலில் இருந்து கடலில் குதித்து தப்பிய சாகசம், உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவரை பிரான்ஸ் கடற்கரையில் கைது செய்த ஆங்கிலேய அரசு, 1910 டிசம்பர் மற்றும் 1911 ஜனவரியில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து , அந்தமான் சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. பிறகு 1921 முதல் 23 வரை இந்தியாவில் அலிப்பூர் , ரத்தினகிரி சிறையில் அடைத்தது. 1924 இல் ‘அரசியலில் ஈடுபடக் கூடாது’ என்ற நிபந்தனையுடன் எரவாட சிறையிலிருந்து விடுவித்தது.
1947 ஆகஸ்டு மாதம் ஆங்கிலேயே ஆட்சி அகன்று இந்தியா தன்னாட்சி பெற்றது. 1950 இல் அரசமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1952 இல் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. சாவர்க்கர் அப்போது ‘அபிநவ் பாரத்’ அமைப்பை கலைத்து விட்டார். நம் நாட்டு மக்கள் அனைவரும் இனி எதிர்மறையான செயல்பாடுகளையும் வன்முறையையும் தவிர்த்து விட்டு நேர்மறையான செயல்பாடுகள் மூலம் தேசத்தை உயர்த்த வேண்டுமெனக் கூறினார்.
“விடுதலைப் போர் நடந்து கொண்டிருந்த போது அரசு அதிகாரிகளைக் கொல்வது, அரசுப் பணத்தைக் கொள்ளையிடுவது, அரசு சொத்துக்களை நாசம் செய்வது போன்ற அரசுக்கு எதிரான பயங்கரவாத, வன்முறைச் செயல்கள் அனைத்தும் நியாயமாக இருந்தன. வன்முறை வழியே நம்முடைய மதமாக இருந்தது. ஆனால் இப்போது போர் முடிந்து விட்டது. நாம் வெற்றி பெற்று விட்டோம். இப்போது அந்த வன்முறைச் செயல்பாடுகள் தேவையில்லை. அவற்றை நம் நாட்டிலிருந்து அகற்ற வேண்டும். அவ்வாறு இல்லாமல் அது தொடருமானால் அதுவொரு நாள் நம்மையே திருப்பி தாக்கும். நமக்கு பெரும் பிரச்சினையாக ஆகிவிடும்.”
“எனவே விடுதலை பெற்ற பிறகு நம்முடைய முதல் கடமை, வன்முறை மற்றும் ஆயுதப் புரட்சி வழியைக் கைவிட்டு சட்டம், ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டும். விடுதலை கிடைத்த பிறகு நம் நோக்கம் மாறிவிட்டது. சுதந்திரத்தைப் பாதுகாப்பதும் தேசத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றுவதுமே நமது நோக்கம். இனி நாம் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடக் கூடாது. சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். அழிவுப் பாதையில் அல்ல, ஆக்கபூர்வமான நடத்தையை நாம் பின்பற்ற வேண்டும். இனி இதுவே நம்முடைய தேசிய மதமாகும்”.
ஆயுதப் புரட்சி என்ற புயல் வீசிய காலங்கள் போய்விட்டன. இனி சுதந்திர இந்தியா தனது உள்நாட்டு, வெளியுறவுகளை எப்படி கையாள வேண்டும் என்பதில் சாவர்க்கர் தெளிவாக இருந்தார்.
- உள்நாட்டில் அரசமைப்பு; வெளியே புரட்சி!
- உள்ளே சட்டம்; வெளியே வாள்!
- உள்ளே அமைதி; போர் வெளியே!
-என்று அவர் கூறினார்.
மகாத்மா காந்தியையும் நேரு காங்கிரஸையும் அவர் ஏற்கவில்லை. என்றாலும், விடுதலைக்குப் பிறகு மக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார். தேசபக்திக்கு புதிய வரைவை அவர் அளித்தார்.
“எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது குழப்பத்தையும் வறுமையையும் தான் சந்திக்க வேண்டி இருக்கும். ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே அவற்றை நீக்கக்கூடிய மந்திரக்கோல் இல்லை. இது போன்ற சூழலில் புதிய அரசு சூழ்நிலையைப் புரிந்து கொண்டு செயல்படும் வரை நாம் பொறுமையுடன் தான் இருக்க வேண்டும். இதுவே நம்முடைய தேசிய கடமை. மக்கள் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ளாமல், ‘இது என்ன சுதந்திரம்? இதற்கு பிரிட்டிஷ் அல்லது ரஷ்ய ஆட்சியே மேலாகும்’ என்று கூறுவதை நான் பார்க்கிறேன். இதைக் கேட்கும்போது என் முதுகெலும்பு சில்லிடுகிறது. ஏனெனில் இதுபோலப் பேசுவது துரோகச் சிந்தனையாகும். இது போன்ற சிந்தனையால் தான் கடந்த காலத்தில் நாம் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டோம்.”
“நம் சுதந்திரத்திற்கு இது போன்ற சட்டப் புறம்பான போக்கை விட மிகப்பெரிய எதிரி வேறு எதுவும் இல்லை. அந்நியரான ஆங்கிலேயர், ரஷ்யா அல்லது இறைத் தூதர் ஆட்சியை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக நம்மவர்களின் மோசமான ஆட்சியை ஏற்றுக் கொள்ளலாம். உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லாத சூழ்நிலையை விட பெரிய நோய் தேசத்திற்கு வேறு எதுவும் இல்லை. இது வலி மிகுந்ததாக இருக்கலாம், ஆனால் குணப்படுத்த முடியாததல்ல. அந்நியர் ஆட்சி என்பது தேசத்தின் மரணம். இது நம் மக்களின் இதயத்தில் பொறிக்கப்பட வேண்டும்; நாடி நரம்புகளில் ரத்தமென பாய வேண்டும்.”
விடுதலைக்குப் பிறகு மக்கள் சட்டம் , ஒழுங்கு , அமைதியைப் பராமரிக்க ஒத்துழைக்க வேண்டுமென சாவர்க்கர் சொன்னார் . ஆனால் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வருபவர்களே சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தால்..?
துடிப்பான, ஆரோக்கியமான ஜனநாயகத்தையே சாவர்க்கர் ஆதரித்தார். எந்த மாற்றமாக இருந்தாலும் அது ஜனநாயக வழியாக மட்டுமே வர வேண்டும் என்றார்.
“தேசத்திற்கு எது நல்லது என்பது குறித்து தனி நபர்கள், கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். அதில் தவறில்லை. அந்த வேறுபாடுகள் சுயநலம் இல்லாமலும் தேசத்தின் நன்மையையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். அதுவே நாட்டிற்கு லாபகரமானது, நன்மை செய்யக் கூடியது. ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு எந்த வேறுபாடாக இருந்தாலும் அது வாக்குப் பெட்டியின் வழியாக தான் வெளிப்பட வேண்டும். இதற்கான பொறுப்பு கட்சிகளிடமும் மக்களிடமும் மட்டுமே இருக்கிறது.”
இதனால்தான் நேரு காங்கிரசுடன் அவருக்கு கருத்து முரண்பாடு இருந்தாலும் , “இது காங்கிரஸ் அரசு அல்ல, நம்முடைய அரசு. அரசு நிர்வாகத்தை காங்கிரஸ் கையாளுகிறது. நாளை வேறொரு கட்சி பெரும்பான்மை பெற்று தேர்ந்தெடுக்கப்படலாம். இதுவே தேசத்தின் வழி” என்று அவர் கூறினார்.
அதேபோல ‘எதிர்க்கட்சி’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்தக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். “பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இருந்து பெற்ற ‘எதிர்க்கட்சி’ என்ற வார்த்தையை நாம் தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக சிறுபான்மை பலம் பெற்ற கட்சி (மைனாரிட்டி கட்சி – ஆளும் கட்சியை விட குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சி) என்ற பதத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்த அணுகுமுறையினால் ஆளும் கட்சி செய்யும் அனைத்துச் செயல்களையும் எதிர்க்க வேண்டும் என்ற மனநிலை வராமல் தடுக்கப்படுவதுடன், பரஸ்பரம் ஒத்துழைப்பு என்ற புரிதல் உண்டாகும். பெரும்பான்மை பலம் பெற்ற கட்சி நம் தேசத்துக்கு விரோதமாக எந்த ஒரு செயலையும் செய்யாமல் தடுக்கவும் தேசத்துக்கு நன்மை தரும் செயல்களைச் செய்யும் போது அதை முழு மனதுடன் ஆதரிக்கவும் கூடிய மனநிலை உருவாகும்” என்று சாவர்க்கர் கூறினார்.
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜகவை எதிரியாகப் பார்க்கின்றன. அந்த எதிர்ப்புணர்வினால் நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவது, சமுதாயத்தில் வன்முறை வெறியாட்டம், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தாமல் தடுப்பது, வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்துக்கொண்டு நம் நாட்டுக்கு விரோதமாகச் செயல்படுவது, சட்ட ஒழுங்கை மட்டுமின்றி அரசமைப்பையே உள்ளிருந்து சிதைப்பது ஆகிய செயல்களைச் செய்கின்றன. ஆனால், பாஜக மக்களைத் திரட்டி வாக்குப் பெட்டி மூலம் அந்தக் கட்சிகளை அதிகாரத்திலிருந்து வெற்றிகரமாக அகற்றி வருகிறது.
இந்த ஜனநாயக வழியையே தேச விடுதலைக்குப் பிறகு சாவர்க்கர் வலியுறுத்தினார்.
- (மே 28, வீர சாவர்க்கர் பிறந்த தினம்).
$$$