-திருநின்றவூர் ரவிகுமார்
ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் வட இந்திய மாநிலங்கள் குறித்த ஞானம் பிற மாநில மக்களுக்கு குறைவாகவே உள்ளது. சவாலான பண்பாட்டுச் சூழலில் தவித்த இம்மாநிலங்களை ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகள் மீட்டெடுத்த வரலாற்றின் நான்காம் பகுதி இது…

அருணாச்சல பிரதேசம்
அருணாச்சல பிரதேசத்திற்கு கிடைத்த வரம் ஆர்எஸ்எஸ் என்கிறார் மைசி. இவர் அருணாச்சல பிரதேச வனக்கழகத்தின் தலைவராக இருக்கிறார். பனிப்பொழிவு காணும் இந்த சீன எல்லையோர சிறிய மாநிலத்தில் 26 பழங்குடியினர்கள் உள்ளார்கள் என்கிறார் சேத்ர பிரசார் பிரமுக்கான முனைவர் சுனில் மொஹந்தி. 1925 இல் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டாலும் அது அருணாச்சல பிரதேசத்திற்கு அறிமுகமானது 1990 இல் தான்.
சுனில் கிட்காரூ , பிரசாத் பார்வே, வினய் தாரே, ராகேஷ் தேஷ்கர் என்ற சங்க பிரசாரகர்கள் வேறு மாநிலங்களில் இருந்து இங்கு சங்கப் பணி செய்ய வந்தனர். 1992 இல் லித்தோம் நோசி, பிடி தயோம் என்ற இருவர் தலைமையில் இரண்டு குழுக்கள் அயோத்தியில் நடந்த கர சேவைக்குச் சென்றனர்.
அருணாச்சல பிரதேசம் மட்டுமல்ல, மிஜோராம், மேகாலயா, நாகாலாந்து மாநிலங்கள் கிறிஸ்தவப் பெரும்பான்மை கொண்ட மாநிலங்களாக மாறிவிட்டன; தங்கள் தொன்மையான அடையாளத்தை இழந்து விட்டன. தேச ஒற்றுமை, சமூக ஒற்றுமை, தேச பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் மீட்கும் பணியில் அக்கறை கொண்டு செயல்படும் ஆர்எஸ்எஸ்.ஸுக்கு இந்த மாநில மக்களின் பண்பாட்டை மீட்கும் பணி முக்கியமானதாகப் பட்டது.
இப்பழங்குடியினரின் பாரம்பரிய தெய்வமான ரங்பரா என்ற தெய்வ உருவமே மக்கள் மத்தியில் இருந்து மறைந்து விட்டது. காரணம் கிறிஸ்தவ மிஷனரிகள். ராஜேஷ் தேஷ்கர் நல்ல ஓவியர் . அவர் பழங்குடியின மக்களில் மூத்தவர்களிடம் அத்தெய்வத்தின் உருவத்தைப் பற்றி கேட்டறிந்தார். பல்வேறு பழங்குடியினர் கூறிய விபரங்களை மனதில் கொண்டு அதற்கு ஏற்ப அந்த தெய்வ உருவை படமாக வரைந்தார். பல்வேறு பழங்குடியினரும் அதைப் பார்த்து ஏற்றுக் கொண்டனர்.
பிறகு அந்த தெய்வ உரு ராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூருக்கு வந்தது. அங்கு சிலா விக்கிரகமாக வடிக்கப்பட்டது. முதல் விக்ரகம் அருணாச்சல பிரதேசத்திற்கு வந்தபோது பலர் அதைக் கண்டவுடன் முகத்தை கையால் மூடிக்கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டனர். பலர் அதை வியப்புடன் பார்த்தனர். பழங்குடித் தலைவர்கள் ஒன்றுகூடி அதைப் பார்த்து, ‘நாங்கள் கிறிஸ்தவர்களாவதற்கு முன்னால் இதுவே எங்கள் தெய்வம்’ என்று ஏற்று கொண்டாடினர். இன்று நூற்றுக்கும் அதிகமான ரங்பரா கோயில்கள் உருவாகி, வழிபாடு நடத்துகின்றனர் அம்மக்கள்.
கு.சீ.சுதர்சன் அவர்கள் தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 இல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார். 2011 இல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.
ஆர்எஸ்எஸ்.ஸின் கிளை 1990 இல் அங்கு தொடங்கினாலும், அதற்கும் முன்னதாக, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரா மூலம் வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அருணாச்சலப் பிரதேசத்தில் 1977 முதல் கல்விப் பணியும் மருத்துவ சேவைகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தன.
இன்று இம் மாநிலத்தில் 44 பள்ளிக்கூடங்கள், ஒரு ஆசிரியர் பயிற்சி கல்லூரியை நடத்தி வருகிறது விவேகானந்தா கேந்திரா. சுமார் 15,000 மாணவர்கள் அவற்றில் படிக்கின்றனர். அதில் சுமார் 4,000 பேர் கேந்திரா நடத்தும் மாணவர் விடுதியில் தங்கி படிக்கின்றனர்.
ஆர்எஸ்எஸ் கருத்தியலின் அடிப்படையில் உருவான அமைப்பு ‘அருணாச்சல் விகாஷ் பரிஷத்’. இது 2000 கிராமங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. 29 பள்ளிக்கூடங்களையும் பால்வாடிகளையும் நடத்தி வருகிறது. இதனுடைய மாணவர் விடுதிகளில் சுமார் 5,000 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இது தவிர மருத்துவ முகாம்கள், விளையாட்டுப் போட்டிகள், விடுமுறை கால தொழில் பயிற்சிகளை இந்த அமைப்பு நடத்தி வருகிறது.
‘ஒரே பாரதம் உன்னத பாரதம் ‘ என்ற கோஷத்தை பிரதமர் மோடி எழுப்புவதற்கு முன்பாகவே ஆர்எஸ்எஸ் அந்த திசையில் பயணித்திருந்தது. மலைகள், மழை, பனி, காடுகளை மட்டுமே பார்த்த இம்மாநிலத்தின் மாணவர்களும் ஆசிரியர்களும் முதன்முதலாக ரயில் ஏறி, நீண்ட தூரம் பயணித்து மும்பை சென்று ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தனர். அது அம்மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளங்களில் மட்டுமல்ல, அவர்கள் கிராமத்திலும் பரந்து விரிந்த இந்தியா பற்றிய உயர்ந்த உணர்வை ஏற்படுத்தியது.
அதுபோல நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்களையும் காரிய கர்த்தர்களையும் ‘தேச எல்லையை தரிசித்தல்’ என்ற நிகழ்ச்சி மூலம் காஷ்மீர், அஸ்ஸாம், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று வர ஆர்எஸ்எஸ் ஊக்கமளித்தது.
தேச ஒருமைப்பாட்டைப் பற்றி உதட்டளவில் பேசிக்கொண்டே தேச விரோதமாகச் செயல்படும் சக்திகளுக்கு இடையே, அவப்பெயரைத் தாங்கிக் கொண்டு தேச ஒற்றுமைக்காகப் பாடுபடும் ஆர்எஸ்எஸ் வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வரப்பிரசாதம் தான்.
(நிறைவு)
$$$