பாரதியின் ‘கனவு’

-மகாகவி பாரதி

அறிமுகம்:

மகாகவி பாரதி புதுச்சேரியில் வாழ்ந்தபோது, தனது சுயசரிதையை எழுத முற்பட்டார். அப்போது அவர் எழுதியதே ‘கனவு’ என்னும் இக்கவிதை. இது அவரது சுயசரிதை தொகுப்பில் முதற்பகுதி. பாரதி –அறுபத்தாறு என்னும் இரண்டாம் பகுதியும் உண்டு.

 ‘கனவு’ கவிதை, முன்னுரை, முடிவுரை தவிர்த்து ஐந்து பகுதிகளைக் கொண்டது. தோல்வியில் முடிந்த பிள்ளைக் காதல்,  பயனில்லாத ஆங்கிலக் கல்வி, விருப்பத்துக்கு மாறான இளமைத் திருமணம், தந்தையின் வறுமை நிலை, பொருளின் பெருமை ஆகிய 5 பகுதிகள் கொண்டது இந்த நெடுங்கவிதை.

இதில் 49 செய்யுள்கள் உள்ளன. இவற்றில் 49ஆம் பாடல் மட்டும் 1910,  மார்ச்சில் ‘கர்மயோகி’ மாத இதழின் முதல் பக்கத்தில்  ‘மஹாசக்திக்கு விண்ணப்பம்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. பிறகு 1910, ஆகஸ்ட் மாதம் (ஆவணி) ‘கனவு’ என்ற சிறிய நூல் வெளிவந்தது. அதன் இறுதியில் இப்பாடலை இணைத்துள்ளார் பாரதி.

தனது நூலின் தொடக்கத்தில், “ பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்  மெல்லப் போனதுவே” என்ற பட்டினத்துப்பிள்ளையின் பாடலடிகளை மேற்கோள் காட்டித் தொடங்குகிறார். வாழ்வே மாயம் என்ற சித்தர்களின் த்வணி அதில் ஒலிக்கிறது.

தன்னுடைய இளம்வயதில் ஏற்பட்ட அனுபவங்களையும், தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்ததையும் கூறும் பாரதி, கனவில் கண்ட பெண்ணோடு பிள்ளைக்காதலில் மயங்குகிறார் (பாடல்: 10).

சிறுவயதிலேயே தாயை இழந்த பாரதி, தந்தையின் சொற்படி விருப்பம் இல்லாமல் ஆங்கிலக் கல்வியைக் கற்கச் செல்கிறார். அதனை அவர் மிகவும் வெறுத்தார். அதற்கு அவர் பயன்படுத்தும் உவமைநயங்கள்  சிறப்பானவை.   ஆங்கிலக் கல்வி கற்றோரின் அறியாமையைப் பற்றி இங்கு விரிவாகப் பாடுகிறார். பேடிக்கல்வி என்று அதை ஏசுகிறார் (பாடல்: 26).

அவருடைய தந்தையார் அவரை கணிதத்தை ஆங்கிலக் கல்வி வாயிலாகக் கற்க நெல்லையூர் விடுத்ததை வெறுக்கிறார். இக்கல்வி கற்கச் சென்றதன் விளைவாக, தந்தையாருக்குச் செலவு அதிகரித்தது என்றும் தனக்குத் தீது அதிகரித்தது என்றும் உரைக்கிறார். அக்கல்வியால் தனக்கு நலம் எதுவும் விழையவில்லை என்றும் (பாடல்: 29) என உரைக்கிறார்.

     அடுத்து மணம் பகுதியில், காதல் கொண்ட பெண்ணை விடுத்து, தந்தையின் விருப்பப்படி  வேறொரு பெண்ணை மணம் செய்யும் நிலையில் பாரதியின் மனக்குமுறல்கள் வெளிப்படுகிறது  (பாடல்: 34).

மனிதன் தன்நிலையில் தாழ்ந்தால் யாரும் அவனை மதிக்க மாட்டார்கள் என்பது பாரதி தன் தந்தையின் வாழ்க்கையிலிருந்து உணர்ந்துகொண்ட பாடம். செல்வத்தை இழந்து, நண்பர்களால் கைவிடப்பட்டு, உறவினர்களால் மதிக்கப்படாமல் இருப்பதை, தந்தை வறுமை எய்தல் என்னும் அடுத்த பகுதி காட்டுகிறது (பாடல்: 42).

செல்வத்தின் சிறப்பை உணரும் பாரதி, பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற வள்ளுவரின் வாக்கை நினைத்துப் புலம்பித். எனினும், பொருளின் மேன்மையை இவ்வுலகம் எவ்வாறு பார்க்கிறது என்பதைக் கூறுகிறார். அறம் ஒன்றே மெய்யின்பம் தரும் என்று இளையர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார் (பாடல்: 44).

வறுமையில் செம்மையே சான்றோர்க்கு அழகு. பாரதியின் மன உறுதி அவரை தாழ்த்தி விடவில்லை. மீண்டும் இந்த உலகை வென்றெடுக்க முயற்சிக்கிறார். நடந்ததை நினைத்து வருந்தி நிற்பதால் பயனில்லை எனவும், அன்னையின் அருளால் உலகை வெல்வேன் என்றும் உரைக்கிறார்.

நிறைவாக, “அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி…” என்று துவங்கும் அற்புதமான பிரார்த்தனைப் பாடலுடன் (பாடல்: 49) தனது கனவு – சுயசரிதையை நிறைவு செய்கிறார் மகாகவி.

வாழ்க்கை ஒரு கனவு போன்றது என்பதே மகாகவியின் உபதேசம். தனிப் பரம்பொருளை நாடிய பயணமே மானுட வாழ்க்கை. இதனையே மகாகவி பாரது நமக்குச் சுட்டுகிறார்.

சுயசரிதை

கனவு

"பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
மெல்லப் போனதுவே."  

             .-பட்டினத்துப்பிள்ளை

முன்னுரை

வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய
      மறைவ லோர்தம் உரைபிழை யன்றுகாண்;
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள்
      சரத மன்றெனல் யானும் அறிகுவேன்;
பாழ்க டந்த பரனிலை யென்றவர்
      பகரும் அந்நிலை பார்த்திலன் பார்மிசை;
ஊழ் கடந்து வருவதும் ஒண்றுண்டோ ?
      உண்மை தன்னிலொர் பாதி யுணர்ந்திட்டேன்       1

மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
      மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்; தன்னுடை
      அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
      செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்;
      சிறிது காலம் பொறுத்தினுங் காண்பமே.       2

உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே
      உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
      கனவி லுங்கன வாகும்; இதனிடை
சிலதி னங்கள் உயிர்க்கமு தாகியே
      செப்பு தற்கரி தாகம யக்குமால்;
திலத வாணுத லார்தரு மையலாந்
      தெய்வி கக்கன வன்னது வாழ்கவே.       3

ஆண்டோ ர் பத்தினில் ஆடியும் ஓடியும்
      ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்
ஈண்டு பன்மரத் தேறியி றங்கியும்
      என்னோ டொத்த சிறியர் இருப்பரால்;
வேண்டு தந்தை விதிப்பினுக் கஞ்சியான்
      வீதி யாட்டங்க ளேதினுங் கூடிலேன்,
தூண்டு நூற்கணத் தோடு தனியனாய்த்
      தோழ மைபிறி தின்றி வருந்தினேன்.       4

பிள்ளைக் காதல்

அன்ன போழ்தினி லுற்ற கனவினை
      அந்த மிழ்ச் சொலில் எவ்வண்ணம் சொல்லுகேன்?
சொன்ன தீங்கன வங்குத் துயிலிடைத்
      தோய்ந்த தன்று, நனவிடைத் தோய்ந்ததால்;
மென்ன டைக் கனி யின்சொற் கருவிழி:
      மேனி யெங்கும் நறுமலர் வீசிய
கன்னி யென்றுறு தெய்வத மொன்றனைக்
      கண்டு காதல் வெறியிற் கலந்தனன்.       5

‘ஒன்ப தாயபி ராயத்த ளென்விழிக்
      கோது காதைச் சகுந்தலை யொத்தனள்’
என்ப தார்க்கும் வியப்பினை நல்குமால்
      என்செய் கேன்? பழியென் மிசை யுண்டுகொல்?
அன்பெ னும்பெரு வெள்ளம் இழுக்குமேல்
      அதனை யாவர் பிழைத்திட வல்லரே?
முன்பு மாமுனி வோர்தமை வென்றவில்
      முன்ன ரேழைக் குழந்தையென் செய்வனே?       6

வயது முற்றிய பின்னுறு காதலே
      மாசு டைத்தது தெய்விக மன்றுகாண்;
இயலு புன்மை யுடலினுக் கின்பெனும்
      எண்ண முஞ்சிறி தேன்றதக் காதலாம்;
நயமி குந்தனி மாதை மாமணம்
      நண்ணு பாலர் தமக்குரித் தாமன்றோ?
கயல்வி ழிச்சிறு மானினைக் காணநான்
      காம னம்புகள் என்னுயிர் கண்டவே.       7

கனகன் மைந்தன் குமர குருபரன்
      கனியும் ஞானசம் பந்தன் துருவன்மற்
றெனையர் பாலர் கடவுளர் மீதுதாம்
      எண்ணில் பக்திகொண் டின்னுயிர் வாட்டினோர்
மனதி லேபிறந் தோன்மன முண்ணுவோன்
      மதன தேவனுக் கென்னுயிர் நல்கினன்,
முனமு ரைத்தவர் வான்புகழ் பெற்றனர்;
      மூட னேன்பெற்ற தோநுவன் பின்னரே.       8

நீரெ டுத்து வருவதற் கவள், மணி
      நித்தி லப்புன் நகைசுடர் வீசிடப்
போரெ டுத்து வருமதன் முன்செலப்
      போகும் வேளை யதற்குத் தினந்தொறும்
வேரெ டுத்துச் சுதந்திர நற்பயிர்
      வீந்திடச் செய்தல் வேண்டிய மன்னர்தம்
சீரெ டுத்த புலையியற் சாரர்கள்
      தேச பக்தர் வரவினைக் காத்தல்போல்.       9

காத்தி ருந்தவள் போம்வழி முற்றிலும்
      கண்கள் பின்னழ கார்ந்து களித்திட
யாத்த தேருரு ளைப்படு மேழைதான்
      யாண்டு தேர்செலு மாங்கிழுப் புற்றெனக்
கோத்த சிந்தையோ டேகி யதில்மகிழ்
      கொண்டு நாட்கள் பலகழித் திட்டனன்;
பூத்த ஜோதி வதனம் திரும்புமேல்
      புலன ழிந்தொரு புத்துயி ரெய்துவேன்.       10

புலங்க ளோடு கரணமும் ஆவியும்
      போந்து நின்ற விருப்புடன் மானிடன்
நலங்க ளேது விரும்புவன் அங்கவை
      நண்ணு றப்பெறல் திண்ணம் தாமென,
இலங்கு நூலுணர் ஞானியர் கூறுவர்;
      யானும் மற்றது மெய்யெனத் தேர்ந்துளேன்;
விலங்கி யற்கை யிலையெனில் யாமெலாம்
      விரும்பு மட்டினில் விண்ணுற லாகுமே.       11

சூழு மாய வுலகினிற் காணுறுந்
      தோற்றம் யாவையும் மானத மாகுமால்;
ஆழு நெஞ்சகத் தாசையின் றுள்ளதேல்,
      அதனு டைப்பொருள் நாளை விளைந்திடும்,
தாழு முள்ளத்தர்,சோர்வினர்,ஆடுபோல்
      தாவித் தாவிப் பலபொருள் நாடுவோர்,
வீழு மோரிடை யூற்றினுக் கஞ்சுவோர்,
      விரும்பும் யாவும் பெறாரிவர் தாமன்றே.       12

விதியை நோவர், தம் நண்பரைத் தூற்றுவர்.
      வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர்,
சதிகள் செய்வர், பொய்ச் சாத்திரம் பேசுவர்,
      சாத கங்கள் புரட்டுவர் பொய்மைசேர்
மதியி னிற்புலை நாத்திகங் கூறுவர்,
      மாய்ந்தி டாத நிறைந்த விருப்பமே
கதிகள் யாவும் தருமென லோர்ந்திடார்.
      கண்ணி லாதவர் போலத் திகைப்பர்காண். 13

கன்னி மீதுறு காதலின் ஏழையேன்
      கவலை யுற்றனன் கோடியென் சொல்லுகேன்?
பன்னி யாயிரங் கூறினும், பக்தியின்
      பான்மை நன்கு பகர்ந்திட லாகுமோ?
முன்னி வான்கொம்பிற் றேனுக் குழன்றதோர்
      முடவன் கால்கள் முழுமைகொண் டாலென
என்னி யன்றுமற் றெங்ஙனம் வாய்ந்ததோ?
      என்னி டத்தவள் இங்கிதம் பூண்டதே!       14

காதலென்பதும் ஓர்வயின் நிற்குமேல்,
      கடலின் வந்த கடுவினை யொக்குமால்;
ஏத மின்றி யிருபுடைத் தாமெனில்,
      இன்னமிர்தும் இணைசொல லாகுமோ?
ஓதொ ணாத பெருந்தவம் கூடினோர்
      உம்பர் வாழ்வினை யெள்ளிடும் வாழ்வினோர்,
மாத ரார்மிசை தாமுறுங் காதலை
      மற்ற வர்தரப் பெற்றிடும் மாந்தரே!       15

மொய்க்கும் மேகத்தின் வாடிய மாமதி,
      மூடு வெம்பனிக் கீழுறு மென்மலர்,
கைக்கும் வேம்பு கலந்திடு செய்யபால்,
      காட்சி யற்ற கவினுறு நீள்விழி,
பொய்க் கிளைத்து வருந்திய மெய்யரோ
      பொன்ன னாரருள் பூண்டில ராமெனில்,
கைக்கி ளைப்பெயர் கொண்ட பெருந்துயர்க்
      காத லஃது கருதவுந் தீயதால்.       16

தேவர் மன்னன் மிடிமையைப் பாடல்போல்
      தீய கைக்கிளை யானெவன் பாடுதல்?
ஆவல் கொண்ட அரும்பெறற் கன்னிதான்
      அன்பெ னக்கங் களித்திட லாயினள்;
பாவம் தீமை, பழியெதுந் தேர்ந்திடோம்!
      பண்டைத் தேவ யுகத்து மனிதர்போல்,
காவல் கட்டு விதிவழக் கென்றிடுங்
      கயவர் செய்திக ளேதும், அறிந்திலோம்.       17

கான கத்தில் இரண்டு பறவைகள்
      காத லுற்றது போலவும் ஆங்ஙனே
வான கத்தில் இயக்க ரியக்கியர்
      மையல் கொண்டு மயங்குதல் போலவும்;
ஊன கத்த துவட்டுறும் அன்புதான்
      ஒன்று மின்றி உயிர்களில் ஒன்றியே
தேனு கத்த மணிமொழி யாளொடு
      தெய்வ நாட்கள் சிலகழித் தேனரோ!       18

ஆதி ரைத்திரு நாளொன்றிற் சங்கரன்
      ஆலயத்தொரு மண்டபந் தன்னில்யாள்
சோதி மானொடு தன்னந் தனியனாய்ச்
      சொற்க ளாடி யிருப்ப, மற்றாங்கவள்
பாதி பேசி மறைந்துபின் தோன்றித்தன்
      பங்க யக்கையில் மைகொணர்ந்தே, ‘ஒரு
சேதி! நெற்றியில் பொட்டுவைப் பேன்’ என்றாள்
      திலத மிட்டனள்; செய்கை யழிந்தனன்.       19

என்னை யீன்றெனக் கைந்து பிராயத்தில்
      ஏங்க விட்டுவிண் ணெய்திய தாய்தனை
முன்னை யீன்றவன் செந்தமிழ்ச் செய்யுளால்
      மூன்று போழ்துஞ் சிவனடி யேத்துவோன்,
அன்ன வந்தவப் பூசனை தீர்ந்தபின்
      அருச்ச னைப்படு தேமலர் கொண்டுயான்
பொன்னை யென்னுயிர் தன்னை யணுகலும்,
      பூவை புன்னகை நன்மலர் பூப்பள் காண்.       20

ஆங்கிலப் பயிற்சி

நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்
      நேரு மாறெனை எந்தை பணித்தனன்;
புல்லை யுண்கென வாளரிச் சேயினைப்
      போக்கல் போலவும், ஊன்விலை வாணிகம்
நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை
      நாடு விப்பது போலவும், எந்தைதான்
அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை
      ஆரி யர்க்கிங் கருவருப் பாவதை,       21

நரியு யிர்ச்சிறு சேவகர், தாதர்கள்,
      நாயெ னத்திரி யொற்றர், உணவினைப்
பெரிதெ னக்கொடு தம்முயிர் விற்றிடும்
      பேடியர், பிறர்க் கிச்சகம் பேசுவோர்,
கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங்
      கலைப யில்கென என்னை விடுத்தனன்,
அருமை மிக்க மயிலைப் பிரிந்துமிவ்
      அற்பர் கல்வியின் நெஞ்சுபொ ருந்துமோ?      22

கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின்
      கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
      ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்;
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்;
      வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்;
துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்
      சொல்லு வாரெட் டுணைப்பயன் கண்டிலார்.       23

கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
      காளி தாசன் கவிதை புனைந்ததும்,
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
      ஓர்ந்த ளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்,
நம்ப ருந்திற லோடொரு பாணினி
      ஞால மீதில் இலக்கணங் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
      இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும்,       24

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,
      தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
      பார ளித்துத் தர்மம் வளர்த்ததும்,
பேர ருட்சுடர் வாள்கொண் டசோகனார்
      பிழை படாது புவித்தலங் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்
      வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்,       25

அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
      தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;
முன்ன நாடு திகழ்ந்த பெருமையும்
      மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்
      பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்,
என்ன கூறிமற் றெங்ஙன் உணர்த்துவேன்
      இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே!       26

சூதி லாத வுளத்தினன் எந்தைதான்
      சூழ்ந்தெ னக்கு நலஞ்செயல் நாடியே
ஏதி லாதருங் கல்விப் படுகுழி
      ஏறி யுய்தற் கரிய கொடும்பிலம்
தீதி யன்ற மயக்கமும் ஐயமும்
      செய்கை யாவினு மேயசி ரத்தையும்
வாதும் பொய்மையும் என்றவி லங்கினம்
      வாழும் வெங்குகைக் கென்னை வழங்கினன்.       27

ஐய ரென்றும் துரையென்றும் மற்றெனக்
      காங்கி லக்கலை யென்றொன் றுணர்த்திய
பொய்ய ருக்கிது கூறுவன், கேட்பீரேல்;
      பொழுதெ லாமுங்கள் பாடத்தில் போக்கிநான்
மெய்ய யர்ந்து விழிகுழி வெய்திட
      வீறி ழந்தென துள்ளநொய் தாகிட
ஐயம் விஞ்சிச் சுதந்திர நீங்கியென்
      அறிவு வாரித் துரும்பென் றலைந்ததால்.       28

செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது;
      தீதெ னக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன;
நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
      நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்!
சிலமுன் செய்நல் வினைப்பய னாலும்நந்
      தேவி பாரதத் தன்னை யருளினும்
அலைவு றுத்துநும் பேரிருள் வீழ்ந்துநான்
      அழிந்தி டாதொரு வாறுபி ழைத்ததே!       29

மணம்

நினைக்க நெஞ்ச முருகும்; பிறர்க்கிதை
      நிகழ்த்த நாநனி கூசு மதன்றியே
எனைத்திங் கெண்ணி வருந்தியும் இவ்விடர்
      யாங்ஙன் மாற்றுவ தென்பதும் ஓர்ந்திலம்;
அனைத்தொர் செய்திமற் றேதெனிற் கூறுவேன்;
      அம்ம! மாக்கள் மணமெனுஞ் செய்தியே.
வினைத்தொ டர்களில் மானுட வாழ்க்கையுள்
      மேவு மிம்மணம் போற்பிறி தின்றரோ!       30

வீடு றாவணம் யாப்பதை வீடென்பார்!
      மிகவி ழிந்த பொருளைப் பொருளென்பார்;
நாடுங் காலொர் மணமற்ற செய்கையை
      நல்ல தோர்மண மாமென நாட்டுவார்.
கூடு மாயிற் பிரம சரியங் கொள்;
      கூடு கின்றில தென்னிற் பிழைகள் செய்து
ஈட ழிந்து நரகவழிச் செல்வாய்;
      யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண்.       31

வசிட்ட ருக்கும் இராமருக்கும் பின்னொரு
      வள்ளு வர்க்கும்முன் வாய்த்திட்ட மாதர்போல்
பசித்தொ ராயிரம் ஆண்டு தவஞ்செய்து
      பார்க்கி நும்பெறல் சால வரிதுகாண்.
புசிப்ப தும்பரின் நல்லமு தென்றெணிப்
      புலையர் விற்றிடும் கள்ளுண லாகுமோ?
அசுத்தர் சொல்வது கேட்கலிர், காளையீர்;
      ஆண்மை வேண்டின் மணஞ்செய்தல் ஓம்புமின்.       32

வேறு தேயத் தெவரெது செய்யினும்
      வீழ்ச்சி பெற்றவிப் பாரத நாட்டினில்
ஊற ழிந்து பிணமென வாழுமிவ்
      வூனம் நீக்க விரும்பும் இளையர்தாம்
கூறு மெந்தத் துயர்கள் விளையினும்
      கோடி மக்கள் பழிவந்து சூழினும்
நீறு பட்டவிப் பாழ்ச்செயல் மட்டினும்
      நெஞ்சத் தாலும் நினைப்ப தொழிகவே.       33

பால ருந்து மதலையர் தம்மையே
      பாத கக்கொடும் பாதகப் பாதகர்
மூலத் தோடு குலங்கெடல் நாடிய
      மூட மூடநிர் மூடப் புலையர்தாம்,
கோல மாக மணத்திடைக் கூட்டுமிக்
      கொலையெ னுஞ்செய லொன்றினை யுள்ளவும்
சால வின்னுமோ ராயிரம் ஆண்டிவர்
      தாத ராகி அழிகெனத் தோன்றுமே!       34

ஆங்கொர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
      ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன்;
ஈங்கொர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள்
      எந்தை வந்து மணம்புரி வித்தனன்.
தீங்கு மற்றிதி லுண்டென் றறிந்தவன்
      செயலெ திர்க்குந் திறனில னாயினேன்.
ஓங்கு காதற் றழலெவ் வளவென்றன்
      உளமெ ரித்துள தென்பதுங் கண்டிலேன்.       35

மற்றொர் பெண்ணை மணஞ்செய்த போழ்துமுன்
      மாத ராளிடைக் கொண்டதொர் காதல்தான்
நிற்றல் வேண்டு மெனவுளத் தெண்ணிலேன்;
      நினைவை யேயிம் மணத்திற் செலுத்திலேன்;
முற்றொ டர்பினில் உண்மை யிருந்ததால்
      மூண்ட பின்னதொர் கேளியென் றெண்ணினேன்.
கற்றுங் கேட்டும் அறிவு முதிருமுன்
      காத லொன்று கடமையொன் றாயின!       36

மதனன் செய்யும் மயக்க மொருவயின்;
      மாக்கள் செய்யும் பிணிப்புமற் றோர்வயின்;
இதனிற் பன்னிரண் டாட்டை யிளைஞனுக்
      கென்னை வேண்டும் இடர்க்குறு சூழ்ச்சிதான்?
எதனி லேனுங் கடமை விளையுமேல்
      எத்து யர்கள் உழன்றுமற் றென்செய்தும்
அதனி லுண்மையோ டார்ந்திடல் சாலுமென்று
      அறம்வி திப்பதும் அப்பொழு தோர்ந்திலேன்.      37

சாத்தி ரங்கள் கிரியைகள் பூசைகள்
      சகுன மந்திரந் தாலி மணியெலாம்
யாத்தெ னைக்கொலை செய்தன ரல்லது
      யாது தர்ம முறையெனல் காட்டிலர்.
தீத்தி றன்கொள் அறிவற்ற பொய்ச்செயல்
      செய்து மற்றவை ஞான நெறியென்பர்;
மூத்த வர்வெறும் வேடத்தின் நிற்குங்கால்
      மூடப் பிள்ளை அறமெவண் ஓர்வதே?       38

தந்தை வறுமை எய்திடல்

ஈங்கி தற்கிடை யெந்தை பெருந்துயர்
      எய்தி நின்றனன், தீய வறுமையான்;
ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும்
      ஊணர் செய்த சதியில் இழந்தனன்;
பாங்கி நின்று புகழ்ச்சிகள் பேசிய
      பண்டை நண்பர்கள் கைநெகிழ்த் தேகினர்;
வாங்கி யுய்ந்த கிளைஞரும் தாதரும்
      வாழ்வு தேய்ந்தபின் யாது மதிப்பரோ?       39

பார்ப்ப னக்குலங் கெட்டழி வெய்திய
      பாழ டைந்த கலியுக மாதலால்,
வேர்ப்ப வேர்ப்பப் பொருள் செய்வ தொன்றையே
      மேன்மை கொண்ட தொழிலெனக் கொண்டனன்;
ஆர்ப்பு மிஞ்சப் பலபல வாணிகம்
      ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன்;
நீர்ப்ப டுஞ்சிறு புற்புத மாமது
      நீங்க வேயுளங் குன்றித் தளர்ந்தனன்;       40

தீய மாய வுலகிடை யொன்றினில்
      சிந்தை செய்து விடாயுறுங் காலதை
வாய டங்க மென்மேலும் பருகினும்
      மாயத் தாகம் தவிர்வது கண்டிலம்;
நேய முற்றது வந்து மிகமிக
      நித்த லும்மதற் காசை வளருமால்.
காய முள்ள வரையுங் கிடைப்பினும்
      கயவர் மாய்வது காய்ந்த உளங்கொண்டே.       41

‘ஆசைக் கோரள வில்லை விடயத்துள்
      ஆழ்ந்த பின்னங் கமைதியுண் டாமென
மோசம் போகலிர்’ என்றிடித் தோதிய
      மோனி தாளிணை முப்பொழு தேத்துவாம்;
தேசத் தார்புகழ் நுண்ணறி வோடுதான்
      திண்மை விஞ்சிய நெஞ்சின னாயினும்
நாசக் காசினில் ஆசையை நாட்டினன்
      நல்லன் எந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன். 42

பொருட் பெருமை

“பொருளி லார்க்கிலை யிவ்வுல” கென்றநம்
      புலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்றுகாண்,
பொருளி லார்க்கின மில்லை துணையிலை,
      பொழுதெ லாமிடர் வெள்ளம்வந் தெற்றுமால்.
பொருளி லார்பொருள் செய்தல் முதற்கடன்;
      போற்றிக் காசினுக் கேங்கி யுயிர்விடும்
மருளர் தம்மிசை யேபழி கூறுவன்;
      மாமகட் கிங்கொர் ஊன முரைத்திலன்.       43

அறமொன் றேதரும் மெய்யின்பம் என்றநல்
      லறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்.
பிறவி ரும்பி உலகினில் யான்பட்ட
      பீழை எத்தனை கோடி! நினைக்கவும்
திறன ழிந்தென் மனமுடை வெய்துமால்.
      தேசத் துள்ள இளைஞர் அறிமினோ!
அறமொன் றேதரும் மெய்யின்பம்; ஆதலால்
      அறனை யேதுணை யென்றுகொண் டுய்திரால்.       44

வெய்ய கர்மப் பயன்களின் நொந்துதான்
      மெய்யு ணர்ந்திட லாகு மென்றாக்கிய
தெய்வ மேயிது நீதி யெனினும்நின்
      திருவ ருட்குப் பொருந்திய தாகுமோ?
ஐய கோ! சிறி துண்மை விளங்குமுன்,
      ஆவி நையத் துயருறல் வேண்டுமே!
பையப் பையவோர் ஆமைகுன் றேறல்போல்
      பாருளோர் உண்மை கண்டிவண் உய்வரால்.       45

தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்தது;
      தரணிமீதினில் அஞ்சலென் பாரிலர்;
சிந்தை யில்தெளி வில்லை; உடலினில்
      திறனு மில்லை; உரனுளத் தில்லையால்;
மந்தர் பாற்பொருள் போக்கிப் பயின்றதாம்
      மடமைக் கல்வியால் மண்ணும் பயனிலை,
எந்த மார்க்கமும் தோற்றில தென்செய்கேன்?
      ஏன்பி றந்தனன் இத்துயர் நாட்டிலே?       46

முடிவுரை

உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே
      உண்டு றங்கி இடர்செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
      கனவி னுங்கன வாகும்; இதற்குநான்
பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்?
      பண்டு போனதை எண்ணி யென்னாவது?
சிலதி னங்கள் இருந்து மறைவதில்
      சிந்தை செய்தெவன் செத்திடு வானடா!       47

ஞான் முந்துற வும்பெற் றிலாதவர்
      நானி லத்துத் துயரன்றிக் காண்கிலர்;
போன தற்கு வருந்திலன் மெய்த்தவப்
      புலமை யோனது வானத் தொளிருமோர்
மீனை நாடி வளைத்திடத் தூண்டிலை
      வீச லொக்கு மெனலை மறக்கிலேன்;
ஆன தாவ தனைத்தையுஞ் செய்ததோர்
      அன்னை யே!இனி யேனும் அருள்வையால்,       48

வேறு

அறிவிலே தெளிவு,நெஞ்சிலே உறுதி,
      அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின்மீது தனியர சாணை,
      பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம்,கரும யோகத்தில்
      நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
      குலவிடு தனிப்பரம் பொருளே!       49

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s