பரமசிவனின் திருவடிகளை, மனதே நீ பக்தியினால் பற்றிக் கொள்வாயாக. அப்படிப் பற்றிக்கொண்டால், வேறு என்னதான் வேண்டுவதற்கு இருக்கிறது? என்று வினவுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
Day: July 27, 2022
மகாவித்துவான் சரித்திரம் – 1 (2)
அக்காலத்தில் நூல்கள் பெரும்பாலும் அச்சிற் பதிப்பிக்கப்படாமையாற் படிப்பவர்கள் அவற்றைப் பிரதிசெய்து படித்தல் இன்றியமையாத வழக்கமாக இருந்தது; ஆதலால் இவர் தந்தையார் நன்றாக ஏட்டில் எழுதவும் இவரைப் பழக்குவித்தார். அதனால் இவர், தாம் படிக்கப் புகுந்த நூல்களை, எழுதி எழுதித் தனியே வைத்துக்கொள்வார். அன்றியும் தம் தந்தையார் கட்டளையின்படி தாம் படிக்கும் நூல்களிலுள்ள இனிய செய்யுட்களைச் சமயோசிதமாகப் பிறர்க்குச் சொல்லிக் காட்டுவதற்குத் தொகுத்துத் தனியே எழுதி வைத்துக்கொண்டு மனனம் செய்வதும், தமக்கு மனனமான பாடல்களின் அடிவரையறையைத் தனியே குறித்து வைத்துக்கொள்வதும் உண்டு. இங்ஙனம் செய்வது அக்கால வழக்கம். தம் தந்தையார் கற்பித்தவற்றையெல்லாம் பேரவாவுடன் இவர் கற்று விரைவில் அந்நூல்களிற் சிறந்த பயிற்சியை அடைந்தார்.