மாணவர்கள் பெயரில் ஜனநாயக விரோத சக்திகளின் சூழ்ச்சி

-பேரா. ப.கனகசபாபதி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்று சொல்லி, தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடங்கி, பின்னர் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவிய போராட்டங்களின் நோக்கம் மாணவர்களின் நலன்களைப் பற்றியதல்ல. போராட்டங்கள் முழுவதும் மாணவர்களால் நடத்தப்பட்டவையும் அல்ல. அவற்றில் பங்கேற்றவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு மேல் மாணவர்கள் அல்ல. அவர்களிலும் நீட் தேர்வு மற்றும் மருத்துவக் கல்வி சம்பந்தப்பட்டவர்கள் இருந்தனரா என்பதே கேள்விக்குறி.

அண்மையில்  ‘கரப்பான் பூச்சி கட்சி’  (CJP) என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பின் பெயரில் போராட்டங்கள் நடந்தன. அந்தக் கட்சியில் முக்கியமாக இருக்கும் மூன்று பேரில் இருவர் முன்பு  ஆம்ஆத்மி கட்சியில் பணியாற்றியவர்கள். முக்கிய புள்ளியான அபிஜித் தீப்கே, ஜூலை மத்தியில்தான் அமெரிக்காவிலிருந்து வந்து நேராக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

தில்லிப் போராட்டத்தில் மாணவர்களை ஒருங்கிணைப்பதில் இடதுசாரி, தீவிர இடதுசாரி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் மாணவர் அமைப்பினர்களைச் சேர்ந்தவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். அவர்களுடன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மாணவர் அமைப்பினரும் இருந்துள்ளனர்.

மானவர்களுடன், இடதுசாரி, ஆம் ஆத்மி, காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற எதிர்க்கட்சிகள், மதவாத, பிரிவினைவாத அமைப்பினர் மற்றும் வெளி நாட்டினர் எனப் பலரும் பங்கு பெற்றுள்ளனர். கலந்து கொண்டவர்களில் சுமார் 2,800 பேருக்கு மேல் குற்றப்பின்னணி கொண்டவர்கள் எனச் சொல்லப்படுகிறது. அவர்களில் கொலையாளிகள், கற்பழிப்பு குற்ரம் சாட்டப்பட்டவர்கள் எனப் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை தில்லி காவல்துறை பட்டியலிட்டுள்ளது.

அந்தப் போராட்டத்தை உண்மையென நம்பி அதில் கலந்துகொள்ள பிற மாநிலங்களிலிருந்து தில்லி சென்ற சிலர் அங்கு நேரில் போய்ப் பார்த்த பின்னர் ஏமாற்றமடைந்து ஊருக்கே திரும்பினர். அதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர்  “அங்கு நடப்பது மாணவர்களுக்கான போராட்டமல்ல; அரசியல் சூழ்ச்சி; எனவே மாணவர்கள் அதில் கலந்து கொள்ள வேண்டாம்” என்று வேண்டுகோளே விடுத்திருந்தார்.

தில்லிப் போராட்டம் ஜூன் மாதம் தொடங்கியது. ஆரம்பத்தில் சிலர் மட்டுமே கலந்து கொண்டிருந்த நிலை மாறி, நாடாளுமன்றம் தொடங்கிய நாளான ஜூலை 20 -இல் வேகம் பிடித்தது. இதில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கான உணவு வெளிநாடுகளிலிருந்து கொடுக்கப்பட்ட ஆர்டர்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் நீட் தேர்வு சம்பந்தப்பட்டவை தானா? அப்படி அவர்கள் சொல்லியிருந்தாலும், அங்கு கலந்து கொண்ட பெரும்பான்மையினர் போட்ட கோஷங்களும், வைத்த கோரிக்கைகளும், நீட் தேர்வுக்கும், மருத்துவக் கல்விக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாதவையாக இருந்தன. அவர்களின் கைகளில் வைத்திருந்த பதாதைகளில்  ‘ஜம்மு- காஷ்மீர் சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவு 370 மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்; இந்திய ராணுவம் ஒழிக; இந்துத்துவம் ஒழிக்கப்பட வேண்டும்; வங்கதேசத்தில் நடந்தது போன்ற மாணவர் புரட்சி மூலம் இங்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்’ என வெவ்வேறு விஷமமான விஷயங்கள் இருந்தன. 2020 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற CAA எதிர்ப்புக் கலவரங்களைத் தூண்டியதற்காக சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு  சிறையில் இருக்கும் ஷர்ஜில் இமாம் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் அங்கு ஒரு முன்னாள் காங்கிரஸ் தலைவர் பேசினார்.

பகவான் ராமரை இகழ்ந்தும், பிரதமர் மோடியைக் கொல்ல வேண்டும் எனவும், காலம் சென்ற அவரது தாயைப் பற்றிக் கேவலமாகவும் பேசப்பட்டது. உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் எனக் கோரப்பட்டது. அநாகரிகமான ஆபாசச் செயல்கள் அனைவரின் கண்முன்னாலும் நடந்தேறின. சிலர் வாள்களை வைத்துக் கொண்டு அதில் கலந்து கொண்டனர்.

ஒரு சமயம் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிக பாதுகாப்பு மிக்க நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி, எல்லைகளை மீறிக் கும்பலாக உள்ளே நுழைய முயற்சித்தனர். அப்போது அவர்களைத் தடுக்க முயன்ற நூற்றுக்கு மேற்பட்ட காவல் துறையினர் தாக்கப்பட்டனர். கர்ப்பமாக இருந்த ஒரு பெண் காவல் அதிகாரியின் வயிற்றில் பலமான தாக்குதல் ஏற்பட்டது. பெண் பத்திரிகையாளர் அநாகரிகமாக நடத்தப்பட்டார். பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்தன. நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பித்த நாள் முதல் அவற்றின் உறுப்பினர்கள் அவைக்கு முன்னர் கூடி தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அழைத்தும், கூட்டத் தொடரின் முதல் வாரம் முழுவதும் அவைகளை நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடந்த ஜந்தர் மந்தர் பகுதிக்குச் செல்லாமல், ராகுல் காந்தி தலைமையில் பிரதமர் வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

லடாக் பகுதியைச் சேர்ந்த சோனம் வாங்சுக் மாணவர்களின் கோரிக்கைளுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். பின்னர் 26 நாட்கள் கழித்து மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அப்போது போராட்டத்தில் வன்முறை பரவியது குறித்து அவர் கவலை தெரிவித்தார். அவரது மனைவி கீதாஞ்சலி, ராகுல் காந்தி நேர்மையற்றவராகச் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

2026 ஆம் வருடத்துக்கான நீட் தேர்வு மே மாதம் நடைபெற்று, சில நாட்களிலேயே வினாத்தாள் கசிந்த விஷயம் தெரிய வந்தது. உடனே மத்திய அரசு தலையிட்டு குற்றவாளிகளைக் கைது செய்தது; அதில் சம்பந்தப்பட்ட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகின்றனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை வேகமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஜூன் மாதம் மறு தேர்வு நடத்தப்பட்டு, ஜூலையில் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. தற்போது மாணவர்கள் படிப்பில் சேர்வதற்குத் தயாராகி வருகின்றனர்.

ஜூலை 27 அன்று போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, சமூக விரோதிகள் போராட்டக் களத்தில் பரவுவதைத் தடுக்க, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை விட்டு விலகினார். தேர்வு முறைகளைகளைச் சீரமைக்க மத்திய அரசு, தகவல் தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நீலேகனி தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு தேர்வுகளின் போது உண்டாகும் கசிவுகளைத் தடுக்கவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்வுகளை நடத்தவும் ஆலோசனைகள் வழங்கும். அதன் அடிப்படையில் தேவையான மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

மேலும் மோடி அரசு எதிர்க்கட்சிகளின் பல்வேறு குழப்பங்ளையும் மீறி  ‘பொதுத் தேர்வு முறைகேடுகள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா’வை நாடாளுமன்ற இரு அவைகளில் நிறைவேற்றியுள்ளது. ஆக. 3ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த சட்டப்படி,  தவறு செய்பவர்களுக்கு அதிக பட்சமாக பத்து வருட சிறைத் தண்டனையும், பத்து கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும் சிறப்பு விரைவு நீதி மன்றங்கள் மூலம் வேகமாக வழக்குகள் முடிக்கப்படும். அதனால் தவறிழைப்பது தடுக்கப்படும்.

மே மாதம் நடந்த தேர்வில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஜூன் மாதமே மறு தேர்வும் நடத்தப்பட்ட பின்னர், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தை நடத்தக் காரணம் என்ன? அவர்களுக்கு ஆதரவும், பின்புலமும் யார் என்பதைப் பார்க்கும் போது அதிர்ச்சியளிக்கும் செய்திகள் தெரிய வருகின்றன.

தில்லியில் ஆரம்பித்த போராட்டத்தைத் தொடர்ந்து வேறு மாநிலங்களிலும் சிறிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அங்கெல்லாம் கரப்பான் பூச்சி கட்சி இல்லை. ஆனால் அவற்றை இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் வழி நடத்தியுள்ளனர். தமிழகத்தில் சென்னையிலுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் கரப்பான் பூச்சி கட்சி என்று ஒரு பேனரை மட்டும் தொங்க விட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிகள் மற்றும் வழக்கமான மோடி எதிர்ப்பு திரைத்துறை செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். எனவே இந்தப் போராட்டத்தின் நோக்கம் தான் என்ன என்ற சந்தேகம் எழுகிறது.

இந்தியா பிரதமர் மோடியின் தலைமையில் உலக அளவில் வேகமாக முன்னேறிச் சென்று வருகிறது. வெவ்வேறு துறைகளிலும் புதிய உச்சங்களைத் தொட்டு வேகமாக வளர்ந்து வருகிறது. தீவிரவாத, பிரிவினைவாத, தேச விரோத, மதவாத சக்திகளைக் கட்டுப்படுத்தி கடிவாளம் போடும் நடவடிக்கைகள் வேகமாகச் செயல்படுத்தப்பட்டு வெற்றியடைந்து வருகின்றன. ஆகையால் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவின் முன்னேற்றத்தை விரும்பவில்லை.

எனவே இந்தியாவைச் சீர்குலைக்க வேண்டும்; நியாயமான முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி அரசு செயல்படாமல் தடுக்க வேண்டும்; நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்ட மசோதாக்களைச் சட்டமாக்கி விடக் கூடாது. அரசு மீதுள்ள நம்பகத்தன்மையைக் குறைத்து, மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்ய வேண்டும் என்பவை தான் போராட்டத்தின் நோக்கம். அதனால் தான் அமெரிக்காவும், அவர்களை எதிர்க்கும் இடதுசாரிகளும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

அதனால்தான் போராட்டத்தின் பல இடங்களிலும் நீட் எதிர்ப்பை விட மோடி எதிர்ப்பே  பிரதானமாக இருந்துள்ளது. இது ஏதோ மோடி என்கின்ற தனி நபர் மேல் இருக்கும் எதிர்ப்பல்ல. நமது தேசத்தின் ஜனநாயகத்தின் மேல் நிலவும் எதிர்ப்பு. அதனால் தான் போராட்டவாதிகளிடம் நெருக்கமாகவுள்ள யோகேந்திர யாதவ்  “இனிமேல் இந்தியாவின் எதிர்காலம் தெருக்களில் தான் முடிவு செய்யப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவேதான் நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும் ஒரு பிரச்சினையை எடுத்துப் பெரிதாக்கி பின்னர் தொடரை நடத்த விடாமல் முடக்குவது என்பது நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக போன்ற குடும்பக் கட்சிகள், மற்றும் இடதுசாரிகள் ஆகியோர் இணைந்து செயல்படுகின்றனர். அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அவை ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பில்லை..

எனவே புதிதாக சில இளைஞர்கள் உருவாக்கிய, அமைப்பே இல்லாத கரப்பான் பூச்சி கட்சியின் பின்னால் தங்களின் குறுகிய காலப் பலன்களுக்காக ஒளிந்து கொண்டு எதிர்ப்பைக் காட்டுகின்றனர்.

அந்த இளைஞர்களை யார் வேண்டுமானாலும் இயக்க முடியும். அது நாட்டுக்குப் பேராபத்து. பிரச்சினைகளைப் பேச சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் உள்ளன. அவற்றின் மூலம் தீர்வு காண்பதே சரியான வழிமுறை. அப்போதுதான் உலகின் பெரிய ஜனநாயகமாக விளங்கும் நமது நாட்டைக் காப்பாற்ற முடியும்.

$$$

Leave a comment