கண்ணன் பாட்டு- 2

-மகாகவி பாரதி

2. கண்ணன் – என் தாய்

(நொண்டிச் சிந்து)

உண்ண உண்ணத் தெவிட்டாதே – அம்மை
      உயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்;
வண்ணமுற வைத்தெனக் கே – என்றன்
      வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,
கண்ணனெனும் பெயருடையாள், – என்னை
      கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில்வைத்தே – பல
      மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள்.       1

இன்பமெனச் சிலகதைகள் – எனக்
      கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் – கெட்ட
      தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்
என்பருவம் என்றன் விருப்பம் – எனும்
      இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவரு வாள்; – அதில்
      அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன்.       2

விந்தைவிந்தை யாக எனக்கே – பல
      விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்;
சந்திரனென் றொரு பொம்மை – அதில்
      தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்;
மந்தை மந்தையா மேகம் – பல
      வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்;
முந்தஒரு சூரியனுண்டு – அதன்
      முகத் தொளி கூறுதற்கொர் மொழியிலை யே.       3

வானத்து மீன்க ளுண்டு – சிறு
      மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்;
நானத்தைக் கணக்கிடவே – மனம்
      நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை;
கானத்து மலைக ளுண்டு – எந்தக்
      காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை;
மோனத்தி லேயிருக்கும் – ஒரு
      மொழியுலை யாதுவிளை யாடவருங் காண்.       4

நல்லநல்ல நதிகளுண்டு – அவை
      நாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்;
மெல்ல மெல்லப் போயவை தாம் – விழும்
      விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்;
எல்லையதிற் காணுவ தில்லை; – அலை
      எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்;
ஒல்லெனுமப் பாட்டினிலே – அம்மை
      ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண்.       5

சோலைகள் காவினங் கள் – அங்கு
      சூழ்தரும் பலநிற மணிமலர் கள்
சாலவும் இனியன வாய் – அங்கு
      தருக்களில் தூங்கிடும் கனிவகை கள்
ஞாலமுற்றிலும் நிறைந் தே – மிக
      நயந்தரு பொம்மைகள் எனக்கென வே;
கோலமுஞ் சுவையு முற – அவள்
      கோடிபல கோடிகள் குவித்துவைத் தாள்.       6

தின்றிடப் பண்டங்களும் – செவி
      தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக்க ளும்,
ஒன்றுறப் பழகுதற் கே – அறி
      வுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்;
கொன்றிடு மெனஇனி தாய் – இன்பக்
      கொடுநெருப் பாய் அனற் சுவையமு தாய்,
நன்றியல் காதலுக் கே – இந்த
      நாரியர் தமையெனைச் சூழவைத் தாள்.       7

இறகுடைப் பறவைக ளும் – நிலந்
      திரிந்திடும் விலங்குகள் ஊர்வனங்கள்
அறைகடல் நிறைந்திட வே – எண்ணில்
      அமைத்திடற் கரியபல் வகைப்பட வே
சுறவுகள் மீன்வகை கள் – எனத்
      தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்;
நிறைவுற இன்பம்வைத் தாள்; – அதை
      நினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை.       8

சாத்திரம் கோடி வைத்தாள்; – அவை
      தம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் பொழுதினி லே – நான்
      வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே
கோத்தபொய் வேதங்களும் – மதக்
      கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்
மூத்தவர் பொய்ந்நடை யும் – இள
      மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்;       9

வேண்டிய கொடுத்திடு வாள்; – அவை
      விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்;
ஆண்டருள் புரிந்திடு வாள்; – அண்ணன்
      அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்;
யாண்டுமெக் காலத்தி னும் – அவள்
      இன்னருள் பாடுநற் றெழில்புரி வேன்;
நீண்டதொர் புகழ்வாழ் வும் – பிற
      நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள்.       10

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s