பாஞ்சாலி சபதம் – 1.1.2

-மகாகவி பாரதி

முதல் பாகம்

1.1. அழைப்புச் சருக்கம்

1.1.2. சரஸ்வதி வணக்கம்

வெள்ளைக் கமலத் திலே- அவள்
      வீற்றிருப் பாள், புக ழேற்றிருப் பாள்,
கொள்ளைக் கனியிசை தான்- நன்கு
      கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,
கள்ளைக் கடலமு தை- நிகர்
      கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொல வே
பிள்ளைப் பருவத் திலே- எனைப்
      பேணவந் தாளருள் பூணவந்தாள்.       3

வேதத் திருவிழி யாள்,- அதில்
      மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
சீதக் கதிர்மதி யே- நுதல்
      சிந்தனையே குழ லென்றுடை யாள்,
வாதத் தருக்க மெனுஞ்- செவி
      வாய்ந்ததற் றுணிவெனுந் தோடணிந் தாள்,
போதமென் நாசியி னாள்,- நலம்
      பொங்கு பல்சாத்திர வாயுடை யாள்.       4

கற்பனைத் தேனித ழாள்- சுவைக்
      காவிய மெனுமணிக் கொங்கையி னாள்,
சிற்ப முதற்கலை கள்- பல
      தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்,
சொற்படு நயமறி வார்- இசை
      தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்
விற்பனத் தமிழ்ப்புல வோர்- அந்த
      மேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள்.       5

வாணியைச் சரண்புகுந் தேன்;- அருள்
      வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;
பேணிய பெருந்தவத் தாள்;- நிலம்
      பெயரள வும்பெயர் பெயரா தாள்,
பூணியல் மார்பகத் தாள்- ஐவர்
      பூவை,திரௌபதி புகழ்க் கதையை
மாணியல் தமிழ்ப்பாட்டால்- நான்
      வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே!       6

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s