-மகாகவி பாரதி

முதல் பாகம்
1.1. அழைப்புச் சருக்கம்
1.1.2. சரஸ்வதி வணக்கம்
வெள்ளைக் கமலத் திலே- அவள்
வீற்றிருப் பாள், புக ழேற்றிருப் பாள்,
கொள்ளைக் கனியிசை தான்- நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,
கள்ளைக் கடலமு தை- நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொல வே
பிள்ளைப் பருவத் திலே- எனைப்
பேணவந் தாளருள் பூணவந்தாள். 3
வேதத் திருவிழி யாள்,- அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
சீதக் கதிர்மதி யே- நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,
வாதத் தருக்க மெனுஞ்- செவி
வாய்ந்ததற் றுணிவெனுந் தோடணிந் தாள்,
போதமென் நாசியி னாள்,- நலம்
பொங்கு பல்சாத்திர வாயுடை யாள். 4
கற்பனைத் தேனித ழாள்- சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்,
சிற்ப முதற்கலை கள்- பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்,
சொற்படு நயமறி வார்- இசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்
விற்பனத் தமிழ்ப்புல வோர்- அந்த
மேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள். 5
வாணியைச் சரண்புகுந் தேன்;- அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;
பேணிய பெருந்தவத் தாள்;- நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்,
பூணியல் மார்பகத் தாள்- ஐவர்
பூவை,திரௌபதி புகழ்க் கதையை
மாணியல் தமிழ்ப்பாட்டால்- நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே! 6
$$$