
2. குயிலின் பாட்டு
ராகம் – சங்கராபரணம் தாளம் – ஏக தாளம்)
ஸ்வரம்: ”ஸகா – ரிமா – காரீ
பாபாபாபா – மாமாமாமா
ரீகா – ரிகமா – மாமா”
சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்க.
காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்…. (காதல்)
1.
அருளே யாநல் லொளியே;
ஒளிபோ மாயின், ஒளிபோ மாயின்,
இருளே, இருளே, இருளே. … (காதல்)
2.
இன்பம், இன்பம், இன்பம்;
இன்பத் திற்கோ ரெல்லை காணில்,
துன்பம், துன்பம், துன்பம். … (காதல்)
3.
நாதம், நாதம், நாதம்;
நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
சேதம், சேதம், சேதம். … (காதல்)
4.
தாளம், தாளம், தாளம்;
தாளத் திற்கோர் தடையுண் டாயின்,
கூளம், கூளம், கூளம். … (காதல்)
5.
பண்ணே, பண்ணே, பண்ணே;
பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்.
மண்ணே, மண்ணே, மண்ணே. … (காதல்)
6.
புகழே, புகழே, புகழே;
புகழுக் கேயோர் புரையுண் டாயின்,
இகழே, இகழே, இகழே. … (காதல்)
7.
உறுதி, உறுதி, உறுதி;
உறுதிக் கேயோர் உடைவுண் டாயின்,
இறுதி, இறுதி, இறுதி. … (காதல்)
8.
கூடல், கூடல், கூடல்
கூடிப் பின்னே குமரன் போயின்,
வாடல், வாடல், வாடல். … (காதல்)
9.
குழலே, குழலே, குழலே;
குழலிற் கீறல் கூடுங்காலை,
விழலே, விழலே, விழலே. … (காதல்)
$$$