-ராம் மாதவ்

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என்ஜிஓக்களின் (அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறைப்படுத்துவது அதன் நோக்கம்.
“வெளிநாட்டு நன்கொடைகளைப் பயன்படுத்தி மதம் சார்ந்த கட்டடங்களை (சர்ச் , மசூதி) கட்டலாம், பராமரிக்கலாம், புனித நூல்களை அச்சிடலாம், எண்ம (டிஜிட்டல்) மயமாக்கலாம், யாத்ரீகர் விடுதிகளைக் கட்டலாம், சமூக உணவுக் கூடங்களை நடத்தலாம், பழங்குடியினரின் உள்ளூர் பாரம்பரிய மரபுகளை வளர்க்கலாம். ஆனால் மதமாற்றம் செய்யக் கூடாது” என்கிறது FCRA சட்டத் திருத்தம்.
அந்தத் திருத்தங்கள் அரசாணையாக வெளியிடப்படுவதற்கு முன்பே இந்தியா முழுவதிலும் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த சட்டத் திருத்தங்கள் அண்மையில் நடந்த கேரளா மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல்களில் முக்கிய விஷயமானது. அதிர்வலைகள் வாஷிங்டனில் உள்ள அதிபர் மாளிகையையும் எட்டியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை கமிட்டியின் தலைவராக உள்ள ஜேம்ஸ் ரிஸ்ச், ‘கிறிஸ்தவர்களின் மனித உரிமைகளை மதிக்காத நாடுகளை அம்பலப் படுத்துவோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயங்காது’ என்று அச்சுறுத்தி உள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மத மாற்றம் குறித்து விவாதம் எழுந்தது. விடுதலைக்குப் பிறகு ஒரிசா (1967) , மத்திய பிரதேசம் (1968), அருணாசல பிரதேசம் (1978) போன்ற சில மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக சத்திஸ்கர் (2000), குஜராத் (2003), இமாசல பிரதேசம் (2016), ஜார்கண்ட் (2017), உத்தரகண்ட் (2018), உத்தரப்பிரதேசம் (2021), ஹரியாணா (2022), ராஜஸ்தான் (2025), மகாராஷ்டிரா (2026) ஆகிய மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டம் இயற்றப்பட்டன.
‘ மத பிரசாரம் செய்யும் உரிமை’ என்றால் ‘மதமாற்றம் செய்யும் உரிமை’யும் சேர்த்ததுதான் என்று பல கிறிஸ்தவப் பிரிவுகள்/ குழுக்கள் வலியுறுத்துகின்றன.
ஆனால் 1977இல் மத்திய பிரதேச அரசு (எதிர்) ரெவெரென்ட் ஸ்டான்ஸ்லாஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம், “அரசமைப்பு சட்டப்பிரிவு 25 ஒருவருக்கு தாம் எந்த மதத்தை பின்பற்றுவது என்பதை தீர்மானிக்கும் உரிமையை அளித்துள்ளதே தவிர, மற்றவர்களை தம் மதத்திற்கு மாற்றும் உரிமையை வழங்கவில்லை” என்று கூறியுள்ளது. மத்திய அரசு இந்தத் தீர்ப்பை ஒட்டியே இப்போது செயல்பட்டுள்ளது.
தேச விடுதலைக்கு முன்பு ராஜா ராம் மோகன் ராய், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி போன்ற சீர்திருத்தவாதிகளும் தலைவர்களும் மத மாற்றம் குறித்து கூர்மையான கேள்விகளை எழுப்பியுள்ளனர். 1
1931 மார்ச் மாதத்தில் ஒரு செய்தியாளர், “சுதந்திரத்திற்குப் பிறகு வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷனரிகள் இந்தியாவில் செயல்படுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?” என்று காந்தியிடம் கேட்டார். அதற்கு அவர், “ஏழ்மையில் இருப்பவர்களுக்கு பொதுநல சேவைகளை மனிதாபிமான நோக்கில் செய்யாமல் மதம் மாற்றும் நோக்கத்துடன் கல்வி, மருத்துவ சேவை ஆகியவற்றை செய்வதாக இருந்தால் நான் அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்வேன்” என்று பதிலளித்தார்.
1935 மே மாதம் ‘ஹரிஜன்’ பத்திரிகையில் வெளியான ஒரு நேர்காணலில், “எனக்கு அதிகாரம் இருக்குமானால் மதமாற்றம் அனைத்தையும் தடை செய்யும் சட்டத்தை இயற்றுவேன். மதமாற்றம் பல கலவரங்களுக்குக் காரணமாக இருக்கிறது அது தவிர்க்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஆனால் ஜவஹர்லால் நேரு 1946 இல் ‘கிறிஸ்தவர்கள் இந்த நாட்டில் மூன்றாவது பெரிய சமுதாயம். அவர்களது மத உரிமைகளும் இதர உரிமைகளும் நசுக்கப்படும் என்று யாராவது நினைத்தால் அது அர்த்தமற்றது’ என்று கூறியுள்ளார். இந்திய அரசமைப்பு சபையில் ‘மதப் பிரசாரம்’ அல்லது ‘மதத்தைப் பரப்புதல்’ மற்றும் ‘மத மாற்றம்’ போன்ற விஷயங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது. மதத்தை ‘பிரசாரம்’ செய்யவும் ‘பின்பற்றவும்’ சுதந்திரம் வழங்கப்படும் என்று ஏற்கனவே காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் மிஷனரிகள் ‘மதம் பரப்பும் உரிமை’ என்பது ‘மதம் மாற்றம் செய்யும் உரிமை’யை உள்ளடக்கியதுதான் என்றனர்.
கே.எம்.முன்ஷி , அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், சி. ராஜகோபாலாச்சாரி போன்ற உறுப்பினர்கள் மதமாற்றம் குறித்து மாறுபட்ட கருத்து கொண்டிருந்தனர். சர்தார் படேலும் மௌலானா ஆசாத்தும் கூட மிஷனரிகள் திரள் மதமாற்றத்தை செய்யக் கூடாது என்றனர். ஆனால் இது போன்ற கருத்துக்களுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் ‘மதம் பரப்புதல்’ என்ற வார்த்தை அரசமைப்பு பிரிவு 19 இல் சேர்க்கப்பட்டு சட்டமானது.
மிஷனரிகளின் செயல்பாடுகள் பற்றி தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. மத்திய பிரதேச அரசு 1954 இல் அம்மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் பகுதிகளில் மிஷனரிகளின் செயல்பாடுகளை ஆராய நியோகி கமிட்டியை நியமித்தது. நியோகி கமிட்டி, “மதமாற்றத்தை தனது முக்கிய நோக்கமாகக் கொண்ட மிஷனரிகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். வெளிநாட்டு மிஷனரிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட வேண்டும். வெளிநாட்டினர் மூலம் செய்யப்படும் மதம் பரப்புதல் மற்றும் தவறான வழிமுறைகளைப் பின்பற்றி செய்யப்படும் மதமாற்றத்தைத் தடை செய்ய வேண்டும். அதற்காக தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். தவறான வழிகளில் செய்யப்படும் மத மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று மிஷனரிகளுக்கு எதிராக பல பரிந்துரைகளைக் கூறியது.
நேரு அரசு அந்த கமிட்டியின் அறிக்கையையும் பரிந்துரைகளையும் புறந்தள்ளியது. ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு மோடி அரசு அந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
- நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (27.06.2026) – New FCRA Rules and the Historical Debate on Religious Conversion in India
- தமிழில் : திருநின்றவூர் ரவிகுமார்
- கட்டுரையாளர் தில்லியில் உள்ள இந்தியா ஃபவுண்டேஷனின் தலைவராக இருக்கிறார்.
$$$