-மகாகவி பாரதி
பீமனும் பார்த்தனும் சபதம் செய்தவுடன், காப்பிய நாயகி பாஞ்சாலி சபதம் செய்கிறாள். அவைக்களத்தே தனது பெண்மையை அவமதிக்கத் துடித்த கயவர்களைத் தண்டிக்க வெஞ்சினம் கூறுகிறாள், மாகாளி வடிவில் நின்ற பாஞ்சாலி. “பாவிதுச் சாதனன் செந்நீர், - அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம், மேவி இரண்டுங் கலந்து - குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல்முடிப் பேன்யான் - இது செய்யுமுன்னே முடியேன்” என்று ஆணையிடுகிறாள். இதுகேட்டு ‘ஓம் ஓம்’ என்று உறுமியது வானம். பூமியில் நடுக்கம் நிகழ்ந்தது. புயல் வீசியது. தருமன் பக்கமே தர்மம் என்பதை ஐம்பூதங்கள் சாட்சியாக உரைத்தன. “நாமும் கதையை முடித்தோம் - நானிலம் முற்றும் நல்லின்பத்தில் வாழ்க!” என்று நிறைவு செய்கிறார் மகாகவி பாரதி...

இரண்டாம் பாகம்
2.3. சபதச் சருக்கம்
2.3.13. பாஞ்சாலி சபதம்
தேவி திரௌபதி சொல்வாள் – ‘ஓம்,
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவிதுச் சாதனன் செந்நீர், – அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து – குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன்யான்; – இது
செய்யுமுன்னேமுடியே’னென் றுரைத்தாள். 103
ஓமென் றுரைத்தனர் தேவர்; – ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்.
பூமி யதிர்ச்சி உண்டாச்சு. – விண்ணைப்
பூழிப் படுத்திய தாஞ்சுழற் காற்று.
சாமி தருமன் புவிக்கே – என்று
சாட்சி யுரைத்தன பூதங்க ளைந்தும்.
நாமுங் கதையை முடித்தோம். – இந்த
நானில முற்றும்நல்லின்பத்தில் வாழ்க. 104
(பாஞ்சாலி சபதம் நிறைவு)
$$$