-மகாகவி பாரதி
அரசவைக்கு வர மறுத்த பாஞ்சாலி முன்வைத்த வாதத்தைக் கேட்டு சினம் கொண்ட துரியோதனன், பாகனை மீண்டும் சென்று அவளை அழைத்துவருமாறு ஏவுகிறான். அப்போது, “ஐவர் கூட்டு மனைவிக்கு நாணமேன்?- சினம் மூண்டு கடுஞ்செயல் செய்யுமுன்- அந்த மொய்குழ லாளைஇங் கிட்டுவா” என்று உத்தரவிடுகிறான்.

இரண்டாம் பாகம்
2.2. துகிலுரிதற் சருக்கம்
2.2.7. துரியோதனன் சொல்வது
வேறு
உள்ளந் துடித்துச் சுயோதனன் – சினம்
ஓங்கி வெறிகொண்டு சொல்லுவான்: – ‘அட ,
பிள்ளைக் கதைகள் விரிக்கிறாய். – என்றன்
பெற்றி யறிந்திலை போலும், நீ! – அந்தக்
கள்ளக் கரிய விழியினாள் – அவள்
கல்லிகள் கொண்டிங்கு வந்தனை! – அவள்
கிள்ளை மொழியின் நலத்தையே! – இங்கு
கேட்க விரும்புமென் னுள்ளமே. 49
‘வேண்டிய கேள்விகள் கேட்கலாம், – சொல்ல
வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம், – மன்னர்
நீண்ட பெருஞ்சபை தன்னிலே – அவள்
நேரிடவே வந்த பின்புதான். – சிறு
கூண்டிற் பறவையு மல்லளே? – ஐவர்
கூட்டு மனைவிக்கு நாணமேன்? – சினம்
மூண்டு கடுஞ்செயல் செய்யுமுன் – அந்த
மொய்குழ லாளைஇங் கிட்டுவா. 50
‘மன்னன் அழைத்தனன் என்றுநீ – சொல்ல
மாறியவ ளொன்று சொல்வதோ? – உன்னைச்
சின்னமுறச் செய்கு வேனடா! – கணஞ்
சென்றவளைக் கொணர்வாய்’என்றான். – அவன்
சொன்ன மொழியினைப் பாகன்போய் – அந்தத்
தோகைமுன் கூறி வணங்கினான். – அவள்
இன்னல் விளைந்திவை கூறுவாள் – ‘தம்பி,
என்றனை வீணில் அழைப்பதேன்? 51
$$$