-கவியரசு கண்ணதாசன்
கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களில் முரணான பாலுறவுகள் குறித்த சர்ச்சை இருக்கும். 1975-ல் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படமும் ஆண்- பெண் இடையிலான உறவுகளின் முரண் தொடர்பானதே. இந்தப் படத்தின் அனைத்து (நான்கு) பாடல்களையும் கவியரசரே எழுதினார்; அனைத்தும் காலத்தை வென்று நிற்கும் கற்பகத் தருக்கள். குறிப்பாக, கதையோட்டத்துக்கு ஏற்றவாறு, இனிய சொற்களால் சமுதாயத்தை முரண்களிலிருருந்து காக்க நினைக்கும் கவியரசரின் பரந்த உள்ளம் இப்பாடல்களில் ஒளிர்கிறது. இங்கு வெளியாகும் பாடலும், படத்தின் கதாநாயகியின் பெண்ணின் தாபமாக, முரண்களை மறுக்கும் ஞானக்குரலாக ஒலிப்பதைக் காணலாம்.

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி?
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் – வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்!
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி – அது
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி!
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் – மனிதன்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்!
எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்…
நீ எனக்காக உணவு உண்டு எப்படி நடக்கும்?
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று!
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை – என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை…
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்!
நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க – அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க!
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க – எந்த
வேதனையும் மாறும் மேகத்தைப் போல!
திரைப்படம்: அபூர்வ ராகங்கள் (1975) இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடகர்: வாணி ஜெயராம்
$$$