பாரதி- அறுபத்தாறு (15-18)

-மகாகவி பாரதி

பாரதி அறுபத்தாறு (15-18)

கடவுள் எங்கே இருக்கிறார்?


”சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
      சொல்” லென்று ஹிரணியந்தான் உறுமிக் கேட்க,
நல்லதொரு மகன் சொல்வான்:- ‘தூணி லுள்ளான்
      நாரா யணந்துரும்பி லுள்ளான்’ என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை.
      மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை;
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை;
      அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ ?       15

கேளப்பா, சீடனே! கழுதை யொன்றைக்
      “கீழான” பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
      சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
      கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
      விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.       16

சுத்த அறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்;
      சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குருசிவமென் றுரைத்தார் மேலோர்,
      வித்தை யிலாப் புலையனு மஃதென்னும் வேதம்;
பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
      பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
நித்தநும தருகினிலே குழந்தை யென்றும்
      நிற்பனவுந் தெய்வமன்றொ நிகழ்த்து வீரே?       17

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை;
      ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
      பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
      மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
      எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்!       18

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s