-மகாகவி பாரதி

ஞானப் பாடல்கள்
23. பகைவனுக்கு அருள்வாய்
பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!
1. புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோமே.
பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான்.
(பகைவ)
2. சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ?- நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?- நன்னெஞ்சே!
(பகைவ)
3. உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ,- நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனோமோ? நன்னெஞ்சே!
(பகைவ)
4. வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?- நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாத்திரங் கேளாயோ?- நன்னெஞ்சே!
(பகைவ)
5. போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவந் தானுமவன்- நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோ?- நன்னெஞ்சே!
(பகைவ)
6. தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்- நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்- நன்னெஞ்சே!
(பகைவ)
$$$