-மகாகவி பாரதி

பக்திப் பாடல்கள்
42. கோமதி மஹிமை
தாருக வனத்தினிலே – சிவன்
சரண நன் மலரிடை யுளம்பதித்துச்
சீருறத் தவம் புரிவார் – பர
சிவன்பு கழமுதினை அருந்திடுவார்;
பேருயர் முனிவர் முன்னே – கல்விப்
பெருங் கடல் பருகிய சூதனென்பான்
தேருமெய்ஞ் ஞானத்தினால் – உயர்
சிவனிகர் முனிவரன் செப்புகின்றான்: 1
வாழிய, முனிவர்களே! – புகழ்
வளர்த்திடுஞ் சங்கரன் கோயிலிலே,
ஊழியைச் சமைத்த பிரான், – இந்த
உலக மெலாமுருக் கொண்டபிரான்.
ஏழிரு புவனத்திலும் – என்றும்
இயல்பெரும் உயிர்களுக் குயிராவான்,
ஆழுநல் லறிவாவான், – ஒளி
யறிவினைக் கடந்தமெய்ப் பொருளாவான். 2
தேவர்க் கெலாந்தேவன், – உயர்
சிவபெரு மான்பண்டொர் காலத்திலே
காவலி னுலகளிக்கும் – அந்தக்
கண்ணனுந் தானுமிங் கோருருவாய்
ஆவலொ டருந்தவங்கள் – பல
ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே
மேவிநின் றருள் புரிந்தான், – அந்த
வியப்புறு சரிதையை விளம்புகின்றேன். 3
கேளீர், முனிவர்களே! இந்தக்
கீர்த்திகொள் சரிதையைக் கேட்டவர்க்கே
வேள்விகள் கோடி செய்தால் – சதுர்
வேதங்க ளாயிர முறைபடித்தால்,
மூளுநற் புண்ணியந்தான் – வந்து
மொய்த்திடும், சிவனியல் விளங்கிநிற்கும்;
நாளுநற் செல்வங்கள் – பல
நணுகிடும், சரதமெய் வாழ்வுண்டாம்! 4
இக்கதை உரைத்திடுவேன், – உளம்
இன்புறக் கேட்பீர், முனிவர்களே!
நக்க பிரானருளால் – இங்கு
நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்!
தொக்கன அண்டங்கள் – வளர்
தொகைபல கோடிபல் கோடிகளாம்!
இக்கணக் கெவரறிவார்? – புவி
எத்தனை யுளதென்ப தியார றிவார்? 5
நக்க பிரானறிவான், – மற்று
நானறி யேன்பிற நரரறியார்.
தொக்க பேரண்டங்கள் – கொண்ட
தொகைக்கில்லை யில்லையென்று சொல்லுகின்ற
தக்கபல் சாத்திரங்கள் ஒளி
தருகின்ற வானமோர் கடல்போலாம்;
அக்கட லதனுக்கே – எங்கும்
அக்கரை இக்கரை யொன்றில்லையாம். 6
இக்கட லதனகத்தே- அங்கங்
கிடையிடைத் தோன்றும்புன் குமிழிகள்போல்
தொக்கன உலகங்கள், – திசைத்
தூவெளி யதனிடை விரைந்தோடும்,
மிக்கதொர் வியப்புடைத்தாம் – இந்த
வியன்பெரு வையத்தின் காட்சி கண்டீர்!
மெய்க்கலை முனிவர்களே! – இதன்
மெய்ப்பொருள் பரசிவன்சக்தி, கண்டீர்! 7
எல்லை யுண்டோ இலையோ? – இங்கு
யாவர் கண்டார் திசை வெளியினுக்கே?
சொல்லிமொர் வரம்பிட்டால் – அதை
. . . . . .
(இது முற்றுப் பெறவில்லை)
$$$
43. சாகா வரம்
பல்லவி
சாகவர மருள்வாய், ராமா!
சதுர்மறை நாதா! சரோஜ பாதா!
சரணங்கள்
ஆகாசந் தீகால் நீர்மண்
அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்,
ஏகாமிர்த மாகிய நின்தாள்
இணைசர ணென்றால் இதுமுடி யாதா? (சாகா) 1
வாகார்தோள் வீரா, தீரா
மன்மத ரூபா, வானவர் பூபா,
பாகார்மொழி சீதையின் மென்றோள்
பழகிய மார்பா! பதமலர் சார்பா! (சாகா) 2
நித்யா, நிர்மலா, ராமா
நிஷ்க ளங்கா, சர்வா, தாரா,
சத்யா, சநாதநா, ராமா,
சரணம், சரணம், சரண முதாரா! (சாகா) 3
$$$
44. கோவிந்தன் பாட்டு
கண்ணிரண்டும் இமையால் செந்நிறத்து
மெல்லி தழ்ப்பூங் கமலத் தெய்வப்
பெண்ணிரண்டு விழிகளையும் நோக்கிடுவாய்
கோவிந்தா! பேணி னோர்க்கு
நண்ணிரண்டு பொற்பாத மளித்தருள்வாய்
சராசரத்து நாதா! நாளும்
எண்ணிரண்டு கோடியினும், மிகப் பலவாம்
வீண்கவலை எளிய னேற்கே. 1
எளியனேன் யானெனலை எப்போது
போக்கிடுவாய், இறைவனே! இவ்
வளியிலே பறவையிலே மரத்தினிலே
முகிலினிலே, வரம்பில் வான
வெளியிலே, கடலிடையே, மண்ணகத்தே
வீதியிலே வீட்டி லெல்லாம்
களியிலே, கோவிந்தா! நினைக்கண்டு
நின்னொடுநான் கலப்ப தென்றோ? 2
என்கண்ணை மறந்துனிரு கண்களையே
என்னகத்தில் இசைத்துக் கொண்டு
நின்கண்ணாற் புவியெல்லாம் நீயெனவே
நான்கண்டு நிறைவு கொண்டு
வன்கண்மை மறதியுடன் சோம்பர்முதற்
பாவமெலாம் மடிந்து, நெஞ்சிற்
புன்கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா,
எனக்கமுதம் புகட்டு வாயே.
$$$