குறிப்பிட்ட ஒரு துறையை மையமாகக் கொண்ட புதினம் எழுதுவது புதிய விஷயமல்ல. ஆனால் அந்தத் துறையில் மூழ்கி முத்தெடுப்பது என்பது ஒரு கலை. இதை மிக அற்புதமாகச் சாதித்திருக்கிறார் ஹிந்தி எழுத்தாளர் சுரேந்திர வர்மா.
வாழ்க்கையின் எதிர்பாராத சிக்கல்களையும், தான் சார்ந்த நாடகத் துறையின் பலம்- பலவீனங்கள், உள்ளரசியலையும், தனிமனித குணாதிசயங்களையும் ஒன்றாகக் கலக்கி, தெளிவான நீரோடை போன்ற கதையுடன் அவர் 1993-இல் படைத்த ‘முஜே சாந்த் சாஹியே’ புதினம், ஹிந்தி எழுத்துலகில் பெரும் பரபரப்பை உருவாக்கியதுடன் முன்னுதாரணமான புதினமாகவும் மாறியது. 1996-இல் இதற்கு சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது.
இப்புதினத்தை தடையற்ற தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் எம்.சுசீலா.
முத்ரா ராட்சஸஸும், மேகதூதமும், சாகுந்தலமும் இந்தியக் கலையுலகின் அடிப்படை என்பதை இப்புதினத்தில் உணர்கிறோம். இதேபோல, தமிழின் காப்பிய வர்ணனைகளுடன் இயல்பான ஒரு தமிழ்ப் புதினம் உருவாக முடியுமா என்ற ஏக்கம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.