-மகாகவி பாரதி

பக்திப் பாடல்கள்
7. வள்ளிப்பாட்டு – 1
பல்லவி
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
குறவள்ளீ, சிறு கள்ளி!
சரணங்கள்
(இந்த) நேரத்தி லேமலை வாரத்தி லேநதி
யோரத்தி லேயுனைக் கூடி -நின்றன்
வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்தி லேமனம்
மிக்க மகிழ்ச்சிகொண் டாடி – குழல்
பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை
யோரத்திலே அன்பு சூடி – நெஞ்சம்
ஆரத் தழுவி அமர நிலை பெற்றதன்
பயனை யின்று காண்பேன். (எந்த நேரமும்)
வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி
விரிந்து மொழிவது கண்டாய் – ஒளிக்
கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்
குறிப்பிணி லேயொன்று பட்டு – நின்றன்
பிள்ளைக் கிளிமென் குதலியி லேமனம்
பின்ன மறச் செல்லவிட்டு – அடி
தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வ மே! நினைச்
சேர விரும்பினன் கண்டாய். (எந்த நேரமும்)
வட்டங்க ளிட்டுங் குளமக லாத
மனீப்பெருந் தெப்பத்தைப் போல – நினை
விட்டு விட்டுப்பல லீலைகள் செய்து நின்
மேனி தனைவிட லின்றி – அடி
எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை
இரவியைப் போன்ற முகத்தாய்! – முத்தம்
இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம்
இட்டுனைச் சேர்ந்திட வந்தேன். (எந்த நேரமும்)
$$$
8. வள்ளிப் பாட்டு – 2
ராகம் -கரஹரப்ரியை தாளம்-ஆதி
பல்லவி
உனையே மயல் கொண்டேன் -வள்ளீ!
உவமையில் அரியாய், உயிரினும் இனியாய்! (உனையே)
சரணம்
எனை யாள்வாய், வள்ளீ! வள்ளீ
இளமயி லே! என் இதயமலர் வாழ்வே!
கனியே! சுவையுறு தேனே
கலவியி லேஅமு தனையாய், – (கலவியிலே)
தனியே, ஞான விழியாய்! – நிலவினில்
நினமருவி, வள்ளீ, வள்ளீ!
நீயா கிடவே வந்தேன். (உனையே)
$$$