-மகாகவி பாரதி

16. கண்ணம்மா – என் காதலி – 1
(காட்சி வியப்பு)
செஞ்சுருட்டி – ஏகதாளம்
ரசங்கள் : சிருங்காரம், அற்புதம்
சுட்டும் விழிச்சுடர் தான், – கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, – கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் – புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் – தெரியும்
நக்ஷத் திரங்க ளடீ! 1
சோலை மல ரொளியோ – உனது
சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே – உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை – உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ, – கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன். 2
சாத்திரம் பேசுகிறாய், – கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே, – கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் – வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ? – இதுபார்,
கன்னத்து முத்த மொன்று! 3
$$$
17. கண்ணம்மா – என் காதலி – 2
(பின் வந்து நின்று கண் மறைத்தல்)
நாதநாமக்கிரியை – ஆதிதாளம்
சிருங்கார ரசம்
மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபல நற் பகற்கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். 1
ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்.
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்,
ஓங்கிவரு முவகை யூற்றி லறிந்தேன்;
ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
”வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
மாய மெவரிடத்தில்?” என்று மொழிந்தேன். . 2
சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே
திருமித் தழுவி ”என்ன செய்தி சொல்” என்றேன்;
”நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்ற நலங்கள் என்ன? பேசுதி” என்றாள். 3
”நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்றுதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்”. 4
$$$
18. கண்ணம்மா – என் காதலி – 3
(முகத்திரை களைத்தல்)
நாதநாமக்கிரியை – ஆதிதாளம்
சிருங்கார ரசம்
தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! – பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் – இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும் – துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை – முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ ? 1
ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் – பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் – வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் – வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ப சப்பிலே – கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பேனோ? 2
$$$
19. கண்ணம்மா – என் காதலி – 4
(நாணிக் கண் புதைத்தல்)
நாதநாமக்கிரியை – ஆதிதாளம்
சிருங்கார ரசம்
மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை – இவன்
மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?
சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ? – இங்கு
செய்யத் தகாதசெய்கை செய்தவ ருண்டோ ?
வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன் – நின்றன்
மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன்.
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? – எனக்
கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா! 1
கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? – கன்னங்
கன்றிச் சிவக்கமுத்த மிட்ட தில்லையோ!
அன்னிய மாகநம்முள் எண்ணுவதில்லை – இரண்
டாவியுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? – துகில்
பறித்தவன் கைப்பறிக்கப் பயங்கொள்வனோ?
என்னைப் புறமெனவுங் கருதுவதோ? – கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ? 2
நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும் – சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் – தம்முள்
பன்னி உபசரணை பேசுவ துண்டோ ?
நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே – விண்ணை
நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகிளையச் சோதி கவ்வுங்கால் – அவை
முன்னுப சாரவகை மொழிந்திடுமோ? 3
சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திட்டேன்; – அவர்
சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில் வந்த உறவன்றடீ! – மிக
நெடும்பண்டைக் காலமுதற் சேர்ந்து வந்ததாம்.
போற்றுமி ராமனென முன்புதித்தனை, – அங்கு
பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்; (கண்ணன்
ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோன்-
உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்கு நான். 4
முன்னை மிகப்பழமை இரணியனாம் – எந்தை
மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ;
பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன் – ஒளிப்
பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்.
சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர்காண்; – அவர்
சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; – இதில்
ஏதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே? 5
$$$
20. கண்ணம்மா – என் காதலி – 5
(குறிப்பிடம் தவறியது)
செஞ்சுருட்டி – ஆதி தாளம்
சிருங்கார ரசம்
தீர்த்தக் கரையினிலே – தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன் – வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் – அடி கண்ணம்மா!
மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம் – உன்னைப்போலவே
பாவை தெரியு தடீ! 1
மேனி கொதிக்கு தடீ! – தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் – இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே,
நானொருவன் மட்டிலும் – பிரி வென்பதோர்
நகரத் துழலுவதோ? 2
கடுமை யுடைய தடீ! – எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் – எண்ணும்போது நான்
அங்கு வருவதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை – கட்டுங் காவலும்
கூடிக் கிடக்கு தங்கே;
நடுமை யரசி யவள் – எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள். 3
கூடிப் பிரியாமலே – ஓரி ரவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே,
ஆடி விளை யாடியே, – உன்றன் மேனியை
ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி மனக் – குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே,
பாடிப் பரவசமாய் – நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி! 4
$$$
21. கண்ணம்மா – என் காதலி – 6
யோகம்
பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 1
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! 2
வான மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா! 3
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! 4
வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு, பேணு மொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! 5
காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா! . 6
நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! 7
தரையடி நீ யெனக்கு, தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைத்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! 8
$$$