கண்ணன் பாட்டு – (16-21)

-மகாகவி பாரதி

16. கண்ணம்மா – என் காதலி – 1
(காட்சி வியப்பு)

செஞ்சுருட்டி – ஏகதாளம்
ரசங்கள் : சிருங்காரம், அற்புதம்

சுட்டும் விழிச்சுடர் தான், – கண்ணம்மா!
      சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, – கண்ணம்மா!
      வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் – புடவை
      பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் – தெரியும்
      நக்ஷத் திரங்க ளடீ!       1

சோலை மல ரொளியோ – உனது
      சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே – உனது
      நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை – உனது
      குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ, – கண்ணம்மா!
      மருவக் காதல் கொண்டேன்.       2

சாத்திரம் பேசுகிறாய், – கண்ணம்மா!
      சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே, – கண்ணம்மா!
      சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் – வதுவை
      முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ? – இதுபார்,
      கன்னத்து முத்த மொன்று!       3

$$$

17. கண்ணம்மா – என் காதலி – 2
(பின் வந்து நின்று கண் மறைத்தல்)

நாதநாமக்கிரியை – ஆதிதாளம்
சிருங்கார ரசம்

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
      வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
      முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
      நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபல நற் பகற்கனவில்
      தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.       1

ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
      ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்.
      பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்,
ஓங்கிவரு முவகை யூற்றி லறிந்தேன்;
      ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
”வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
      மாய மெவரிடத்தில்?” என்று மொழிந்தேன். .       2

சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே
      திருமித் தழுவி ”என்ன செய்தி சொல்” என்றேன்;
”நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
      நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
      சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
      பெற்ற நலங்கள் என்ன? பேசுதி” என்றாள்.       3

”நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
      நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
      சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
      பெற்றுதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே,
      திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்”.       4

$$$

18. கண்ணம்மா – என் காதலி – 3
(முகத்திரை களைத்தல்)

நாதநாமக்கிரியை – ஆதிதாளம்
சிருங்கார ரசம்

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! – பெண்கள்
      திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் – இந்த
      மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும் – துணி
      மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை – முகச்
      சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ ?       1

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் – பண்டை
      ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் – வெறும்
      ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் – வலு
      வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ப சப்பிலே – கனி
      கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பேனோ?       2

$$$

19. கண்ணம்மா – என் காதலி – 4
(நாணிக் கண் புதைத்தல்)

நாதநாமக்கிரியை – ஆதிதாளம்
சிருங்கார ரசம்

மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை – இவன்
      மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?
சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ? – இங்கு
      செய்யத் தகாதசெய்கை செய்தவ ருண்டோ ?
வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன் – நின்றன்
      மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன்.
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? – எனக்
      கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா!       1

கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? – கன்னங்
      கன்றிச் சிவக்கமுத்த மிட்ட தில்லையோ!
அன்னிய மாகநம்முள் எண்ணுவதில்லை – இரண்
      டாவியுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? – துகில்
      பறித்தவன் கைப்பறிக்கப் பயங்கொள்வனோ?
என்னைப் புறமெனவுங் கருதுவதோ? – கண்கள்
      இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ?       2

நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும் – சுவை
      நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் – தம்முள்
      பன்னி உபசரணை பேசுவ துண்டோ ?
நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே – விண்ணை
      நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகிளையச் சோதி கவ்வுங்கால் – அவை
      முன்னுப சாரவகை மொழிந்திடுமோ?       3

சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திட்டேன்; – அவர்
      சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில் வந்த உறவன்றடீ! – மிக
      நெடும்பண்டைக் காலமுதற் சேர்ந்து வந்ததாம்.
போற்றுமி ராமனென முன்புதித்தனை, – அங்கு
      பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்; (கண்ணன்
ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோன்-
      உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்கு நான்.       4

முன்னை மிகப்பழமை இரணியனாம் – எந்தை
      மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ;
பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன் – ஒளிப்
      பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்.
சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர்காண்; – அவர்
      சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; – இதில்
      ஏதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே?       5

$$$

20. கண்ணம்மா – என் காதலி – 5
(குறிப்பிடம் தவறியது)

செஞ்சுருட்டி – ஆதி தாளம்
சிருங்கார ரசம்

தீர்த்தக் கரையினிலே – தெற்கு மூலையில்
      செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன் – வெண்ணிலாவிலே
      பாங்கியோ டென்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் – அடி கண்ணம்மா!
      மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம் – உன்னைப்போலவே
      பாவை தெரியு தடீ!       1

மேனி கொதிக்கு தடீ! – தலை சுற்றியே
      வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் – இந்த வெண்ணிலா
      வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! இந்த வையகம்
      மூழ்கித் துயிலினிலே,
நானொருவன் மட்டிலும் – பிரி வென்பதோர்
      நகரத் துழலுவதோ?       2

கடுமை யுடைய தடீ! – எந்த நேரமும்
      காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் – எண்ணும்போது நான்
      அங்கு வருவதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை – கட்டுங் காவலும்
      கூடிக் கிடக்கு தங்கே;
நடுமை யரசி யவள் – எதற்காகவோ
      நாணிக் குலைந்திடுவாள்.       3

கூடிப் பிரியாமலே – ஓரி ரவெலாம்
      கொஞ்சிக் குலவி யங்கே,
ஆடி விளை யாடியே, – உன்றன் மேனியை
      ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி மனக் – குறை தீர்ந்து நான்
      நல்ல களி யெய்தியே,
பாடிப் பரவசமாய் – நிற்கவே தவம்
      பண்ணிய தில்லை யடி!       4

$$$

21. கண்ணம்மா – என் காதலி – 6
யோகம்

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!       1

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!       2

வான மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா!       3

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!       4

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு, பேணு மொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!       5

காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா! .       6

நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!       7

தரையடி நீ யெனக்கு, தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைத்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!       8

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s