-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் எழுதியுள்ள உருவகக் கவிதை இது. சுடரொளி தொடர இறைவனைப் பிரார்த்திப்போம்! சிறு சுடரொளி மட்டுமல்ல, அக்கினிக்குஞ்சு இது.
.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான போரில்
எந்தப் பக்கம் நிற்க என்பதில்
எந்தக் குழப்பமும் வந்ததில்லை தெய்வங்களுக்கு.
.
தேவர்களுக்கு இடையிலான சகோதர யுத்தத்திலும்
யாரை ஆதரித்தாலும்
தர்மமே வெல்லும் என்பதால்
எந்தக் குழப்பமும் வந்ததில்லை.
.
அசுரர்களுக்கு இடையிலான போரிலும்
யாரை அழித்தாலும்
அதர்மமே அழியும் என்பதால்
எந்தக் குழப்பமும் வந்ததில்லை.
.
யுகங்களின் வரலாற்றில் முதல்முறையாக
அசுரன்களுக்கும்
அசுரனாக மாறிக் கொண்டிருக்கும் தேவர்களுக்கும்
இடையில் நடக்கிறது குருக்ஷேத்ரப் போர்.
.
இதில் அசுரன்களை அழிக்கத் துணை போனாலும்
வெல்லப் போவது தேவர்கள் அல்ல;
அரை அசுரன்களே.
.
அந்த அரை அசுரக் கும்பலை அழிக்கலாம் என்றால்
இருக்கும் அரை குறை தர்மமும் அழிந்துவிடும்.
ஏனென்றால்,
அவர்கள்தான் அரை தேவராகவும் இருக்கிறார்கள்.
.
பாற்கடல் தெய்வம் படு குழப்பத்தில்
பாம்பணையில் படுத்திருக்கிறது.
.
கால் மாட்டில் அமர்ந்திருப்பவனைக் கண் திறந்து பார்ப்பதா,
தலைமாட்டில் அமர்ந்திருப்பவனைக் கண் திறந்து பார்ப்பதா?
.
தன் படைகளை யாருக்கு அனுப்ப?
ஆயுதமேந்தாமல் யார் பக்கம் நின்று வழிகாட்ட?
.
அடுத்த அவதாரம் வந்து பார்த்துக் கொள்ளட்டும் என்று
அனந்த சயனத்திலேயே முடிவற்று ஆழ்ந்துவிடலாமா?
.
அதர்மம் தலை தூக்கும்போது
தர்மத்தை நிலைநாட்ட அவதரிக்கலாம்.
.
அதர்மத்தின் இடத்தில்
அரை அதர்மத்தைக் கொண்டுவர
அவதரிக்கலாமா?
.
தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று
தலையைப் பிய்த்துக்கொண்டு யோசிக்கிறார்.
.
அவருடைய கஷ்டம் அவருக்கு,
நம் கஷ்டம் நமக்கு.
.
பாரம்பரிய அரக்கர்களைக் கொல்லத் தெரிந்த தெய்வத்தால்
நவீன அரக்கர்களை அழிக்க முடியுமா?
.
ஓர் அவதார வலிமையினால்
இன்னோர் அவதாரக் கடமையை நிறைவேற்ற முடியுமா?
.
பூதகியைக் கொல்ல வாமனரால் முடியுமா?
பத்து தலை ராவணைனைக் கொல்ல
பலராமரால் முடியுமா?
.
தவறான தெய்வத்தை நோக்கித் தவம் செய்தால்
கிடைக்கும் வரம் என்னவாக இருக்கும்?
.
யாரைக் காக்க அவதரிக்க என்று தெய்வத்துக்குக் குழப்பம்;
எந்த அவதாரத்தை வரச் சொல்ல என்று பக்தனுக்குக் குழப்பம்!
.
பால்வீதியில் ஒரு நட்சத்திரம்
மெள்ளக் கண் மூடப் போகிறதா?
.
பாவங்கள் மலியும் பூமியில்
ஒரு பண்பாடு என்றென்றைக்குமாக மறையப்போகிறதா?
.
அடர் கானகத்தில்
ஓர் உயிரினம் நிரந்தர அழிவுக்குள் போகப் போகிறதா?
.

எல்லையற்றுப் பெருகும் இருளின் முன்
இறுதிச் சொட்டையும் உறிஞ்சியபடி எரியும்
ஒற்றை அகலின் சிறு சுடரும்,
எந்தப் பக்கம் நின்றெரிய என்று தெரியாமல்
அல்லாடிக் கொண்டிருக்கிறது இடமும் வலமுமாக.
.
இருந்தும்,
ஒளி என்பது குறைந்த இருளே என்றாலும்,
இரு பக்க இருளையும் அகற்றிக்கொண்டு
முடிந்த வரை
முழுவதுமாக எரியத் துடிக்கிறது
முன் மாடச் சிறு சுடர்.
$$$
.
One thought on “சுடரொளி தொடரும்! (கவிதை)”