-மகாகவி பாரதி

பக்திப் பாடல்கள்
17. மஹா சக்தி வெண்பா
தன்னை மறந்து சகல உலகினையும்
மன்ன நிதங்காக்கும் மஹாசக்தி – அன்னை
அவளே துணையென்று அனவரதம் நெஞ்சம்
துவளா திருத்தல் சுகம். 1
நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சிஉயிர் வாழ்தல் அறியாமை; – தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு. 2
வையகத்துக் கில்லை, மனமே! நினைக்குநலஞ்
செய்யக் கருதியிவை செப்புவேன் – பொய்யில்லை
எல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லால் அழியும் துயர். 3
எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்
விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் பண்ணியதோர்
சக்தியே நம்மை சமைத்ததுகாண், நூறாண்டு
பக்தியுடன் வாழும் படிக்கு. 4
$$$