கண்ணன் பாட்டு- 7

-மகாகவி பாரதி

7. கண்ணன் – எனது சற்குரு

புன்னாகவராளி – திஸ்ர ஜாதி – ஏகதாளம்
ரசங்கள்: அற்புதம், பக்தி

சாத்திரங் கள்பல தேடினேன் – அங்கு
      சங்கையில் லாதன சங்கையாம் – பழங்
கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் – பொய்மைக்
      கூடையில் உண்மை கிடைக்குமோ? – நெஞ்சில்
மாத்திரம் எந்த வகையிலும் – சக
      மாயம் உணர்ந்திடல் வேண்டுமே – என்னும்
ஆத்திரம்நின்ற திதனிடை – நித்தம்
      ஆயிரந் தொல்லைகள் சூழ்ந்தன.       1

நாடு முழுதிலுஞ் சுற்றிநான் – பல
      நாட்கள் அலைந்திடும் போதினில், – நிறைந்
தோடும் யமுனைக் கரையிலே – தடி
      ஊன்றிச் சென்றாரோர் கிழவனார்; – ஒளி
கூடு முகமும், தெளிவுதான் – குடி
      கொண்ட விழியும், சடைகளும், – வெள்ளைத்
தாடியும் கண்டு வணங்கியே – பல
      சங்கதி பேசி வருகையில்,       2

என்னுளத் தாசை யறிந்தவர் – மிக
      இன்புற் றுரைத்திட லாயினர் -”தம்பி,
நின்னுளத் திற்குத் தகுந்தவன், – சுடர்
      நித்திய மோனத் திருப்பவன், – உயர்
மன்னர் குலத்தில் பிறந்தவன், – வட
      மாமது ரைப்பதி யாள்கின்றான்; – கண்ணன்
தன்னைச் சரணென்று போவையேல் – அவன்
      சத்தியங் கூறுவன்” என்றனர்.       3

மாமது ரைப்பதி சென்றுநான் – அங்கு
      வாழ்கின்ற கண்ணனைப் போற்றியே, – என்தன்
நாமமும் ஊரும் கருத்துமே – சொல்லி
      நன்மை தருகென வேண்டினன்; – அவன்
காமனைப் போன்ற வடிவமும் – இளங்
      காளையர் நட்பும் பழக்கமும் – கெட்ட
பூமியைக் காக்குந் தொழிலிலே – எந்தப்
      போதுஞ் செலுத்திடுஞ் சிந்தையும்,       4

ஆடலும் பாடலும் கண்டுநான் – முன்னர்
      ஆற்றங் கரையினில் கண்டதோர் – முனி
வேடந் தரித்த கிழவரைத் – கொல்ல
      வேண்டுமென் றுள்ளத்தில் எண்ணினேன் – ‘சிறு
நாடு புரந்திடு மன்னவன் – கண்ணன்
      நாளுங் கவலையில் மூழ்கினோன்; – தவப்
பாடுபட் டோர்க்கும் விளங்கிடா – உண்மை
      பார்த்திவன் எங்ஙனம் கூறுவான்?’       5

என்று கருதி யிருந்திட்டேன்; – பின்னர்
      என்னைத் தனியிடங் கொண்டுபோய், – ”நினை
நன்று மருவுக! மைந்தனே! – பர
      ஞான முரைத்திடக் கேட்பைநீ; – நெஞ்சில்
ஒன்றுங் கவலையில் லாமலே – சிந்தை
      ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே தன்னை
வென்று மறந்திடும் போழ்தினில் – அங்கு
      விண்ணை யளக்கும் அறிவுதான்!       6

சந்திரன் சோதி யுடையதாம்; – அது
      சத்திய நித்திய வஸ்துவாம்; – அதைச்
சிந்திக்கும் போதினில் வந்துதான் – நினைச்
      சேர்ந்து தழுவி அருள்செயும்; -அதன்
மந்திரத் தாலிவ் வுலகெலாம் – வந்த
      மாயக் களிப்பொருங் கூத்துக்காண் -‘இதைச்
சந்ததம் பொய்யென் றுரைத்திடும் – மடச்
      சாத்திரம் பொய் யென்று தள்ளடா!       7

”ஆதித் தனிப்பொரு ளாகுமோர்; – கடல்
      ஆருங் குமிழி உயிர்களாம்; – அந்தச்
சோதி யறிவென்னும் ஞாயிறு – தன்னைச்
      சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; – இங்கு
மீதிப் பொருள்கள் எவையுமே – அதன்
      மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்;- வண்ண
நீதி யறிந்தின்பம் எய்தியே – ஒரு
      நேர்மைத் தொழிலில் இயங்குவார்;       8

”சித்தத்தி லேசிவம் நாடுவார், – இங்கு
      சேர்ந்து களித்துல காளுவார்; – நல்ல
மத்த மதவெங் களிறுபோல் நடை
      வாய்ந்திறு மாந்து திரிகுவார்; – ‘இங்கு
நித்தம் நிகழ்வ தனைத்துமே – எந்தை
      நீண்ட திருவரு ளால்வரும் – இன்பம்
சுத்த சுகந்தனி யாநந்தம்’ – எனச்
      சூழ்ந்து கவலைகள் தள்ளியே,       9

‘சோதி அறிவில் விளங்கவும் – உயர்
      சூழ்ச்சி மதியில் விளங்கவும் – அற
நீதி முறைவழு வாமலே – எந்த
      நேரமும் பூமித் தொழில்செய்து – கலை
ஓதிப் பொருளியல் கண்டுதாம் – பிறர்
      உற்றிடுந் தொல்லைகள் மாற்றியே – இன்பம்
மோதி விழிக்கும் விழியினார் – பெண்மை
      மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில்,       10

”ஆடுதல், பாடுதல், சித்திரம் -கவி
      யாதி யினைய கலைகளில் – உள்ளம்
ஈடுபட் டென்றும் நடப்பவர் – பிறர்
      ஈன நிலைகண்டு துள்ளுவார் – அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் – சில
      நாளினில் எய்தப் பெறுகுவார் – அவர்
காடு புதரில் வளரினும் – தெய்வக்
      காவனம் என்றதைப் போற்றலாம்.       11

”ஞானியர் தம்மியல் கூறினேன் – அந்த
      ஞானம் விரைவினில் எய்துவாய்” – எனத்
தேனி லினிய குரலிலே – கண்ணன்
      செப்பவும் உண்மை நிலைகண்டேன் – பண்டை
ஈன மனிதக் கனவெலாம் – எங்ஙன்
      ஏகி மறைந்தது கண்டிலேன்! – அறி
வான தனிச்சுடர் நான்கண்டேன்! – அதன்
      ஆட லுலகென நான் கண்டேன்!       12

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s