-சேக்கிழான்

சுதந்திரம் என்பது போராடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியது. கலகம், விமர்சனம், எதிர்ப்பு ஆகியவை போராளிகளின் குணங்கள். போராளிகள் இருப்பதால் தான் ஜனநாயகம் எதேச்சதிகாரமாக மாறாமல் காக்கப்படுகிறது.
நமது நாட்டின் சுதந்திரத்துக்கும் மக்களாட்சி மாண்புக்கும் 1975 ஜூன் 25-இல் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அந்த நெருக்கடியிலிருந்து தேசம் மீண்டது எப்படி? நமது உரிமைகளை சத்தமின்றி மீட்டவர்கள் யார்? அதில் அவர்கள் அடைந்த கஷ்டங்கள் என்ன? என்று விளக்குகிறது இப்புத்தகம்.
தனது அரசியல் எதிரிகள் பலம் பெற்று வருவதைத் தடுக்கவும், நீதிமன்றங்களின் கண்டனங்களிலிருந்து தப்பவும் நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி கையாண்ட குறுக்குவழியே நெருக்கடி நிலை அறிவிப்பு. இதன் காரணமாக நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகங்கள் முடக்கப்பட்டன. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட தேசிய இயக்கங்கள் தடைசெய்யப்பட்டன. ஆட்சியாளர்களைப் புகழ்வது மட்டுமே வெளியில் நடமாடும் வழி என்றானது.
ஆனால், அதே இந்திரா காந்தி 1977, மார்ச் 21-இல் நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்ள நேர்ந்தது. அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் அவர் அடைந்த படுதோல்வியும் ஜனதா கட்சியின் மகத்தான வெற்றியும் சரித்திரம்.
இந்த இடைப்பட்ட காலத்தில் மக்களை அதிகார வர்க்கத்திற்கு எதிராகத் திரட்டி தலைமறைவுப் போராட்டம் நடத்திய நாயகர்கள் தான் நமது சுதந்திரத்தைக் காத்த தளகர்த்தர்கள்.
அரசே அராஜகத்தில் ஈடுபடும்போது பெரும்பாலோர் ஊமையாகி விடுகின்றனர். ஆனால், விதிவிலக்குகளாக அமைந்த இந்தத் தளகர்த்தர்கள் ஆட்சிக்கு எதிராக சத்தியாகிரகம் நடத்தியதுடன், தேசிய அளவிலும் உலக அளவிலும் நெருக்கடி நிலைக்கு எதிரான கருத்தை உருவாக்குவதில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களில் ஒருவரான, இந்து முன்னணியின் நிறுவனர், அமரர் இராம.கோபாலன், மிகுந்த பொறுப்புணர்வுடனும், அனுபவ அறிவுடனும் தொகுத்து வழங்கியுள்ள நூல் இது.
சரித்திர அனுபவங்கள் ஜனநாயகத்தைக் காப்பதற்கான படிப்பினைகளை அளிக்கின்றன. அந்த வகையில் இந்நூல் இளைய தலைமுறையினர் அனைவராலும் படிக்கப்பட வேண்டிய அற்புதமான கருவூலமாக உள்ளது.
$$$
நூல் விவரம்:
நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்
தொகுப்பாசிரியர்: இராம.கோபாலன்
296 பக்கங்கள், விலை: ரூ. 200,
வெளியீடு:
விஜயபாரதம் பதிப்பகம்
12, எம்.வி.நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை- 600 031,
தொலைபேசி எண்: 044-2836 0874.