எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் விடுதலை வேண்டும் என்ற உலகளாவிய நோக்கம் கொண்டதாக இருந்தது. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற புலவனின் வழிவந்தவர் அல்லவா? அவரது உலகம் தழுவிய பார்வைக்கு, பிற நாடுகள் மீது அவர் பாடிய இந்த நான்கு கவிதைகளும் உதாரணம். அந்த நாடுகள்: 1 இத்தாலி, 2 பெல்ஜியம், 3. ரஷ்யா, 4. பிஜி தீவுகள். சுதந்திர இத்தாலியை நிறுவப் போராடிய மாவீரர் மாஜினியின் சபதம், ஜெர்மனியிடம் வீழ்ந்தாலும் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய பெல்ஜியத்துக்கு வாழ்த்து, கொடுங்கோலன் ஜாரின் அரசை வீழ்த்திய ரஷ்யப் புரட்சியால் பெருமிதம், பிஜித் தீவுகளில் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாக அவதிப்படும் ஹிந்து ஸ்திரீகளுக்காகக் கண்ணீர் என்று - இக்கவிதைகளில் மகாகவி பாரதியின் அதியுயர் மானுடம் வெளிப்படுகிறது.