காலம் பிறக்கட்டும்! (கவிதை)

-இசைக்கவி ரமணன்

.

உலகம் முழுவதும் ஒவ்வொரு வர்க்கும்

உலை கொதிக்கட்டும்!

ஒவ்வொரு வீட்டிலும் நலமெனும் இசையே

ஓங்கி ஒலிக்கட்டும்!

கலகம் அனைத்தும் கனவாய் மறைந்து

கருணை பெருகட்டும்!

கடவுள் நமக்குக் காணும் நிசமாய்க்

கண்முன் தெரியட்டும்! 1

.

உதிரும் ஒவ்வொரு வியர்வைத் துளியும்

உரமாய்ப் பயிர்விளைத்து

உணவைக் கொடுத்துநம் உயிரைக் காக்கும்

உழவன் வாழட்டும்!

கதிர்கள் தலையை அசைக்கக் காற்றில்

கவிதை பரவட்டும்!

கனவுகள் கண்முன் நனவாய்க் காணும்

காலம் பிறக்கட்டும்! 2

.

ஒவ்வொரு நாளையும் திருநா ளாக்கும்

உணர்வே நம் பொங்கல்!

உழைப்பும் விளைவும் ஒன்று கலக்கும்

உன்னதம் நம் பொங்கல்!

செவ்விய தமிழரின் சேலையும் வேட்டியும்

சிறந்திடும் நம் பொங்கல்!

சீறும் காளையைச் செம்மைக் காளைகள்

வெல்வதே நம் பொங்கல்!  3

.

அகன்ற பானைகள் அடுப்பில் அமர்ந்த

அழகைப் பாடுவதா?

அத்தனை பெண்களும் அழகுற நொடிக்கும்

அற்புதம் பாடுவதா?

புகல முயன்ற வாய்க்குள் பொங்கல்

புகுவதைப் பாடுவதா?

புதியன எழுந்து பழையன மறையும்

புகழைப் பாடுவதா? 4

.

வந்தது பொங்கல் வந்தது வாழ்வெனும்

வாசலில் கோலங்கள்!

வானம் கொடுத்த தானம் எனும்படி

வளரும் வளமைகள்!

பந்தல் போட்டுப் பந்தி விரித்துப்

பலவித மேளங்கள்!

பல்குக உறவுகள்! பரவுக தொடர்புகள்!

பாரே வாழியவே! 5

.

$$$

One thought on “காலம் பிறக்கட்டும்! (கவிதை)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s