மார்கழிப் பனித்துளி (6-7)

-இசைக்கவி ரமணன்

‘வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் தனது முகநூலில் எழுதும் ‘மார்கழிப் பனித்துளி’ இசைக் கவிதைகளை  இங்கே மீள்பதிவு செய்கிறோம். இங்கே உள்ளவை இரு கவிதைகள்....

6

திருவிழி பாராதா?

.

முதலில் இன்பம், இடையில் ஏக்கம்,

முடிவில் துன்பம்; அதன்பின்னும்

முடியாத் துயரம்! முடியும் வரையில்

முடியா மைதான் தொடரும்!  1

.

இதுவா வாழ்க்கை? இதற்கா உலகம்?

இதற்கா தேகம் மனமெல்லாம்?

மெதுவாய்த் தேறி மறுகரை நாடும்

மேன்மையில் ஆசை வாராதோ! 2

.

கயிலைக் கனலே! கடற்காற் றுலவித்

தலைகோ தும்குளக் கரைவீற்ற

மயிலைச் சிவனே! மாறாத் தவனே!

மாற்றம் ஒன்று தாராயோ!  3

..

களங்க நிலவைக் கற்றைச் சடையில்

காட்டி அதற்கோர் கதிதந்தாய்!

ககனம் அதிர்ந்த கங்கைச் செருக்கைத்

தலையில் வைத்தோர் தரம்தந்தாய்!  4

.

காலடி வாழும் கள்ள முயலகன்

கண்ணைச் சிமிட்டிச் சிரிக்கின்றான்!

உளங் கவர்ந்தவா! உமையின் நாயகா!

உன்மக வுக்கோர் கதியிலையோ!  5

.

ஒருமுறை உன்றன் திருவிழி என்னை

ஓரரைப் பார்வை பாராதோ?

உடனே என்னை உயர்த்தி மகிழ்வாய்,

உருவே! அருவே! குருதேவா! 6

.

$$$

7

சுடலைச் சிந்தனை வெண்பா -10

.

நெய்யூற்றிப் பார்த்தேன் நெருப்பணைய வில்லையே!

பொய்யூற்றை நானிறைத்துப் போட்டாலும் தீரவில்லை

பொய்யான மெய்யிதனில் மெய்யான மெய்யெதுவோ

உய்யுமோ என்றன் உயிர்?  1

.

ஆரா தனைகள் அருமலர்ப் பூசைகள்

நாரா யணாவென்னும் நாமங்கள் யாவுமென்னைச்

சேராத ஓர்சொள்ளைச் சென்மம் எடுத்தேனே!

நேராய் அணைப்பாயா நீ?  2

.

மனக்குரங்கு போட்டடிக்கும் மத்தளச் சத்தம்

கனவு நினைவைக் கடக்கிறதே! தூக்கச்

சுனையிலே சாந்தி, குமிழ்த்தால் பிராந்தி

வினையிலே நானோர் விதம்.  3

.

வண்ணங்கள் தீட்டி வனப்புமிகச் செய்தாலும்

எண்ணமெல் லாம்வெறும் எண்ணமன்றோ! ஏந்திடும்

கிண்ணம் கவிழ்த்தாலும் மிஞ்சிடும் ஈரமன்றோ

வண்ணம் களையுமோ வான்?  4

.

சிவனே எனமனம் சிந்தனை நீங்கி

பவம்தாண்டி அக்கரை பார்ப்பேனோ? செய்யும்

தவறே எனது தவமெனக் கொண்டு

சிவமேநீ காத்தல் சிறப்பு.  5

.

மறந்தேன், அதனால் பிறந்தேன், அதனால்

இறந்தேன், இதுதானோ என்கதை? கண்கள்

திறந்தேன், ககனம் தவழ்ந்தேன், எனவாய்

திறந்துசொல்லும் நாளென்றோ செப்பு!  6

.

இருக்கின்றாய் தானே? இதற்கும் மெலிதாய்ச்

சிரிக்கின்றாய் உன்னழகுச் சிற்சபையில்; ஏதோ

இருக்கின்றேன், உன்பேர் இசைக்கின்றேன், ஊரில்

சிரிக்கின்றேன், உள்ளே சிதை.  7

.

அந்தச் சிதையே அழகுச் சுடலையாய்

வந்துநட மாடேன் தவறிலையே! ரொம்பத்தான்

நொந்துவிட்டேன், எப்படியோ வந்துவிட்டால் போதுமையா

சந்தைக்கும் உண்டே சபை.  8

.

அன்னையைக் கேட்டேன், அவளுன்னைக் கைகாட்டி

என்கதியும் சிற்சமயம் இப்படித்தான் என்கின்றாள்;

என்சொல்ல? யார்நீ? எவரறிந்தார்? வந்தென்முன்

நின்றால்நான் சொல்வேன் நிசம்!  9

.

எனக்குன்னை விட்டால் எவருமில்லை; ஆய்ந்தால்

உனக்குமென்னை விட்டால் ஒருவரு மில்லை;

கணக்கு சரியாச்சு கட்டிக்கொள்! என்னை

அணைத்தால் உனக்கும் நலம்!   10

.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s