-மகாகவி பாரதி
மகாகவி பாரதியின் மூத்த மகள் தங்கம்மாள் ருதுவான நாளன்று பாடிய பாடல் இது என யதுகிரி அம்மாள் குறிப்பிடுகிறார்.

இந்தத் தெய்வம் நமக்கநுகூலம்;
இனிமனக் கவலைக் கிடமில்லை!
.
மந்திரங்களைச் சோதனை செய்தால்
வையகத்தினை ஆள்வது தெய்வம்;
இந்தத் தெய்வம் கதியென்றிருப்பீர்!
ஆக்க முண்டென் றனைத்து முரைக்கும்!
(இந்த) 1
மரத்தின் வேரில் அதற்குணவுண்டு;
வயிற்றினிலே கருவுக் குணவுண்டு;
தரத்திலொத்த தருமங்களுண்டு;
சக்தியொன்றிலோ முக்தியுண்டு!
(இந்த) 2
உலகமே உடலாய் அதற்குள்ளே
உயிரதாகி விளங்கிடுந் தெய்வம்!
இலகும் வானொளி போலறிவாகி
எங்கணும் பரந்திடும் தெய்வம்!
(இந்த) 3
செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை;
சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை;
உய்கை கொண்டதன் நாமத்தைக் கூறின்
உணர்வு கொண்டவர் தேவர்களாவர்!
(இந்த) 4
நோயில்லை வறுமையில்லை;
நோன்பிழைப்பதிலே துன்பமில்லை;
தாயும் தந்தையும் தோழனுமாகித்
தகுதியும் பயனும் தரும்தெய்வம்!
(இந்த ) 5
அச்சமில்லை மயங்குவதில்லை;
அன்பும் இன்பமும் மேன்மையும் உண்டு;
மிச்சமில்லை பழந்துயர்க் குப்பை;
வெற்றியுண்டு விரைவினில் உண்டு!
(இந்த) 6
இந்தத் தெய்வம் நமக்கநுகூலம்;
இனி மனக்கவலைக் கிடமில்லை!
.
- ஆதாரம்: பாரதி நினைவுகள் – பக்கம் 137-138
$$$