-மகாகவி பாரதி
சூதில் பாஞ்சாலியை பணயம் வைத்து தருமன் இழந்ததும், கௌரவர்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றனர். சூதில் அதுவரை வென்றதெல்லாம் ஒன்றுமேயில்லை; காமத்திரவியமாம் பாஞ்சாலியை வென்றதே மிகப் பெரும் வெற்றி என்று கூறி, காரணமான மாமனைப் பாராட்டுகின்றனர். இதிலிருந்து, அவர்களின் தீய உள்ளக் கிடக்கை வெளிப்படுகிறது...

இரண்டாம் பாகம்
2.2. துகிலுரிதற் சருக்கம்
2.2.2. திரௌபதி சூதில் வசமானதுபற்றிக் கௌரவர் கொண்ட மகிழ்ச்சி
திக்குக் குலுங்கிடவே – எழுந்தாடுமாம்
தீயவர் கூட்டமெல்லாம்.
தக்குத்தக் கென்றேஅவர் – குதித்தாடுவார்
தம்மிரு தோள்கொட்டுவார்.
ஒக்குந் தருமனுக்கே – இஃதென்பர் ‘ஓ!
ஓ!’ வென் றிரைந்திடுவார்;
கக் கக்கென் றேநகைப்பார் – ‘துரியோதனா,
கட்டிக்கொள் எம்மை’என்பார். 43
மாமனைத் ‘தூக்கா’ யென்பார்; – அந்த மாமன்மேல்
மாலை பலவீசுவார்.
‘சேமத் திரவியங்கள் – பலநாடுகள்
சேர்ந்ததி லொன்றுமில்லை;
காமத் திரவியமாம் – இந்தப்பெண்ணையும்
கைவச மாகச்செய்தான்;
மாமனொர் தெய்வ’மென்பார்; ‘துரியோதனன்
வாழ்க’வென் றார்த்திடுவார். 44
$$$