மன்னித்துவிடு ப்ரிய சகோதரியே!

-பி.ஆர்.மகாதேவன்

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால், தவறான அறுவைச் சிகிச்சையால் காலை இழந்து, நவ. 15-இல் உயிரையும் இழந்த, சென்னையைச் சார்ந்த  இளம் கால்பந்து விளையாட்டு வீராங்கனை ப்ரியாவுக்கு (17) நமது கண்ணீர் அஞ்சலி.

அந்தத் துக்கச் செய்தியைக் கேட்டதும்

தலைமைச் செயலகத்து தட்டச்சு எந்திரம்

தானாகக் கண்ணீர் அஞ்சலியை 

தடதடவென அச்சிட்டு வெளியிட்டது.

.

துண்டுச் சீட்டு முதல்வரின் எழுதுகோல்

துளியும் தாமதிக்காமல் 

நிவாரண லட்சங்களைக் 

கடகடவெனக் கையெழுத்திட்டுக் கொடுத்தது.

.

மருத்துவ, சுகாதாரத் துறை அமைச்சர்

உயிரிழப்புக்குக் காரணமான மருத்துவர்களை

உடனே பணியிடை நீக்கம் செய்தார்-

யார் என்பதைத் தெரிந்துகொண்டு.

.

எதிர்க்கட்சி பொம்மைக்கு

பேட்டரி போடப்பட்டதும்

இழப்பீட்டை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று 

தலையை ஆட்டி ஆட்டிச் சொன்னது.

.

இன்னொரு கட்சித் தலைவர்

உச்சபட்ச இழப்பீடோடு

குடும்பத்தினர் அனைவருக்கும்

அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று 

அன்பாக

தேவாலய மணி போல ஆர்ப்பரித்தார்.

.

அரசியல் மந்தையில் இருந்த

அத்தனை வளர்ப்பு மிருகங்களும்

ஒருமித்த குரலில் உரக்க அழுதன.

.

அல்பாயுசில்

அகாலத்தில்

அலட்சியத்தினால் உயிர் துறந்த 

அன்புச் சகோதரியின்

நல்லடக்கம்

ஆரவாரத்துடன் நடந்து முடிவதற்குள்

அத்துணை நல்லெண்ண வசனங்களும்

அண்டவெளியில் நிரம்பின.

.

சற்றுத் தள்ளி இருந்த சுடுகாட்டில்

திறந்தவெளியில் 

அநாதையாகக் காத்துக் கிடந்தன

பூர்வகுடிப் பிணங்கள்.

அவற்றின் மேல் முடிவற்றுப் பெய்து கொண்டிருந்தன

புறக்கணிப்பின் தொடர் மழைகள்.

.

சற்றே அதிகம் பெய்த கார்கால மழையில்

சாலையில் தோண்டப்பட்டு

மூடாமல் விடப்பட்ட பள்ளத்தில்

ஒரு பூர்வகுடி 

நேற்றுதான் விழுந்து செத்திருந்தார்.

.

ஒதுங்கிச் சென்ற நடைபாதையில் பாய்ந்த 

தூரத்து மின் கசிவினால்

துடிதுடித்துச் செத்திருந்தார் 

இன்னொரு பூர்வகுடி.

.

முப்பத்தைந்து துண்டுகளாக

வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார்

இன்னொரு இளம் வயது

பூர்வகுடிப் பெண்.

.

வீடு கட்ட வெட்டிய

சின்னஞ்சிறு பள்ளத்தில் விழுந்து,

அதைவிடச் சின்னஞ்சிறியதாக இருந்த 

குட்டிச் சிறுவன் துடிதுடித்துச் செத்திருந்தான்.

.

தினம் தினம் சாகின்றன-

அலட்சியத்தால் ஆயிரம் பூர்வகுடி உயிர்கள்-

அத்தனை அரசு மருத்துவமனைகளிலும்.

.

அகாலத்தில் சாகும் 

அல்பாயுசு பூர்வகுடிகளின் ஆன்மாக்கள்

தனக்கென ஒரு சொட்டு கண்ணீராவது உகுக்கப்படுமா என்று

விட்டுச்சென்ற அரசியல் உலகைச் 

சுற்றிச்சுற்றி வருகின்றன.

.

கல்லறைத் தோட்டங்களில் கேமராக்கள் புடைசூழ 

மண் அள்ளிப் போட்டு மூடப்படுவது

ஓடுகாலிகளின் பிணங்கள் மட்டுமல்ல;

ஒட்டுமொத்தப் பூர்வகுடிகளின்

உயிருள்ள 

உணர்வுள்ள 

உடல்களும்தான்.

.

மன்னித்துவிடு ப்ரிய சகோதரியே,

நீ பரிதாபத்துக்குரியவள்.

உனக்கு நேர்ந்தது

வேறு யாருக்கும் நேரக் கூடாது.

ஆனால்-

ஒரு சொட்டு கண்ணீருக்காக, 

ஒரு ஆறுதல் வார்த்தைக்காக,

ஒரு மென் ஸ்பரிசத்துக்காக,

ஏங்கித் தவிக்கும்

பூர்வகுடி ஆன்மாக்களின் வலியை

நீயாவது புரிந்துகொள்.

.

பாவத்தின் சம்பளம் மரணமாக இருக்கலாம்.

பூர்வகுடி விசுவாசத்தின் சம்பளம் 

இத்தனை புறக்கணிப்பாக,

இவ்வளவு கைவிடப்படலாக,

இத்தனை வலியாக இருக்கக் கூடாது.

.

வரவே போகாத 

இறுதித் தீர்ப்பு நாளுக்காகக் காத்திருந்து

உன் ஆத்மா கிடந்து அழுக வேண்டாம்.

.

ப்ளீஸ் டோண்ட் ரெஸ்ட் இன் பீஸ்!

.

மறுபிறப்பு எடுத்து உடனே திரும்பி வா!

திருத்தப்பட வேண்டியவை

ஏராளம் இருக்கின்றன.

உன் இளம் கால்களால்

எட்டி உதைக்கப்பட வேண்டியவை

இங்கு 

இன்னும் ஏராளம் இருக்கின்றன.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s