-மகாகவி பாரதி

4. மழை
திக்குக்கள் எட்டும் சிதறி- தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து- வெள்ளம்
பாயுது பாயுது பாயுது- தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்- அண்டம்
சாயுது சாயுது சாயுது- பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று- தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட. 1
வெட்டி யடிக்குது மின்னல்- கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்;- கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா- என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய- மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா! 2
அண்டம் குலுங்குது, தம்பி!- தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்;- திசை
வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்;- என்ன
தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்! 3
$$$