-மகாகவி பாரதி

பக்திப் பாடல்கள்
68. ஆரிய தரிசனம்
ஓர் கனவு
கனவென்ன கனவே – என்றன்
கண் துயி லாது நனவினிலே யுற்ற (கன)
கானகங் கண்டேன் – அடர்
கானகங் கண்டேன் – உச்சி
வானகத்தே வட்ட மதியொளி கண்டேன். (கன)
பொற்றிருக் குன்றம் – அங்கொர்
பொற்றிருக் குன்றம் – அதைச்
சுற்றி யிருக்கும் சுனைகளும் பொய்கையும். (கன)
புத்த தரிசனம்
குன்றத்தின் மீதே – அந்தக்
குன்றத்தின் மீதே – தனி
நின்றதோர் ஆல நெடுமரங் கண்டேன். (கன)
பொன்மரத் தின்கீழ் – அந்தப்
பொன்மரத் தின்கீழ் – வெறுஞ்
சின்மய மானதோர் தேவன் இருந்தனன். (கன)
புத்த பகவன் – எங்கள்
புத்த பகவன் – அவன்
சுத்தமெய்ஞ் ஞானச் சுடர்முகங் கண்டேன். (கன)
காந்தியைப் பார்த்தேன் – அவன்
காந்தியைப் பார்த்தேன் – உப
சாந்தியில் மூழ்கத் ததும்பிக் குளித்தனன். (கன)
ஈதுநல் விந்தை! – என்னே!
ஈதுநல் விந்தை! – புத்தன்
சோதி மறைந்திருள் துன்னிடக் கண்டனன். (கன)
பாய்ந்ததங் கொளியே; – பின்னும்
பாய்ந்ததங் கொளியே; – அருள்
தேய்ந்த தென்மேனி சிலிர்த்திடக் கண்டேன். (கன)
கிருஷ்ணார்ஜுன தரிசனம்
குன்றத்தின் மீதே – அந்தக்
குன்றத்தின் மீதே – தனி
நின்ற பொற்றேரும் பரிகளும் கண்டேன். (கன)
தேரின்முன் பாகன் – மணித்
தேரின்முன் பாகன் – அவன்
சீரினைக் கண்டு திகைத்துநின் றேனிந்தக் (கன)
ஓமென்ற மொழியும் – அவன்
ஓமென்ற மொழியும் – நீலக்
காமன்றன் உருவுமவ் வீமன்றன் திறலும் (கன)
அருள் பொங்கும் விழியும் – தெய்வ
அருள் பொங்கும் விழியும் – காணில்
இருள் பொங்கு நெஞ்சினர் வெருள் பொங்குந் திகிரியும் (கன)
கண்ணனைக் கண்டேன் – எங்கள்
கண்ணனைக் கண்டேன் – மணி
வண்ணனை ஞான மலையினைக் கண்டேன். (கன)
சேனைகள் தோன்றும் – வெள்ளச்
சேனைகள் தோன்றும் – பரி
யானையுந் தேரும் அளவில தோன்றும். (கன)
கண்ணன்நற் றேரில் – நீலக்
கண்ணன்நற் றேரில் – மிக
எண்ணயர்ந் தானொர் இளைஞனைக் கண்டேன். (கன)
விசையன்கொ லிவனே! – விறல்
விசையன்கொ லிவனே! – நனி
இசையும் நன்கிசையுமிங் கிவனுக் கிந்நாமம். (விசை)
வீரிய வடிவம்! – என்ன
வீரிய வடிவம்! – இந்த
ஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென் விந்தை! (விசை)
பெற்றதன் பேறே – செவி
பெற்றதன் பேறே – அந்தக்
கொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன். (பெற்ற)
“வெற்றியை வேண்டேன்; – ஜய
வெற்றியை வேண்டேன்! – உயிர்
அற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன். (பெற்ற)
சுற்றங் கொல்வேனோ? – என்றன்
சுற்றங் கொல்வேனோ? – கிளை
அற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ?” (பெற்ற)
மிஞ்சிய அருளால் – மித
மிஞ்சிய அருளால் – அந்த
வெஞ்சிலை வீரன் பலசொல் விரித்தான். (கன)
இம்மொழி கேட்டான் – கண்ணன்
இம்மொழி கேட்டான் – ஐயன்
செம்மலர் வதனத்திற் சிறுநகை பூத்தான். (கன)
வில்லினை யெடடா! கையிற்
வில்லினை யெடடா – அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா! (வில்லினை)
வாடி நில்லாதே; – மனம்
வாடி நில்லாதே; – வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. (வில்லினை)
ஒன்றுள துண்மை – என்றும்
ஒன்றுள துண்மை – அதைக்
கொன்றி டொணாது குறைத்த லொண்ணாது (வில்லினை)
துன்பமு மில்லை – கொடுந்
துன்பமு மில்லை – அதில்
இன்பமு மில்லை பிறப்பிறப் பில்லை. (வில்லினை)
படைகளுந் தீண்டா – அதைப்
படைகளுந் தீண்டா – அனல்
சுடவு மொண்ணாது புனல்நனை யாது. (வில்லினை)
செய்தலுன் கடனே – அறஞ்
செய்தலுன் கடனே – அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே (வில்லினை)
$$$