-மகாகவி பாரதி

பக்திப் பாடல்கள்
24. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்
ராகம் – பூபாளம்; தாளம் – சதுஸ்ர ஏகம்
கையைச்,
சக்தி தனக்கே கருவி யாக்கு – அது
சாதனைகள் யாவினையுங் கூடும் – கையைச்
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தியுற்றுக் கல்லினையுஞ் சாடும். 1
கண்ணைச்,
சக்தி தனக்கே கருவி யாக்கு – அது
சக்தி வழியதனைக் காணும் – கண்ணைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு – அது
சத்தியமும் நல்லருளும் பூணும். 2
செவி,
சக்தி தனக்கே கருவியாக்கு – சிவ
சக்தி சொலும் மொழியது கேட்கும் – செவி
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்திதிருப் பாடலினை வேட்கும். 3
வாய்,
சக்தி தனக்கே கருவியாக்கு – சிவ
சக்தி புகழினையது முழங்கும் – வாய்
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தி நெறி யாவினையும் வழங்கும். 4
சிவ,
சக்திதனை நாசி நித்தம் முகரும் – அதச்
சக்தி தனக்கே கருவியாக்கு – சிவ
சக்தி திருச் சுவையினை நுகரும் – சிவ
சக்தி தாக்கே எமது நாக்கு. 5
மெய்யைச்,
சக்தி தனக்கே கருவியாக்கு – சிவ
சக்தி தருந் திறனதி லேறும் – மெய்யைச்
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சாதலற்ற வழியினைத் தேறும். 6
கண்டம்,
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சந்ததமும் நல்லமுதைப் பாடும் – கண்டம்
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தியுடன் என்றும் உறவாடும். 7
தோள்,
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
தாரணியும் மேலுலகுந் தாங்கும் – தோள்
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தி பெற்று மேருவென ஓங்கும். 8
நெஞ்சம்,
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தியுற நித்தம் விரிவாகும் – நெஞ்சம்
சக்தி தனக்கே கருவியாக்கு – அதைத்
தாக்க வரும் வாளொதுங்கிப் போகும். 9
சிவ,
சக்தி தனக்கே எமது வயிறு – அது
சாம்பரையும் நல்லவுண வாக்கும் – சிவ
சக்தி தனக்கே எமது வயிறு – அது
சக்தி பெற உடலினைக் காக்கும். 10
இடை,
சக்தி தனக்கே கருவியாக்கு – நல்ல
சக்தியுள்ள சந்ததிகள் தோன்றும் – இடை
சக்தி தனக்கே கருவியாக்கு – நின்றன்
சாதிமுற்றும் நல்லறத்தில் ஊன்றும். 11
கால்,
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சாடியெழு கடலையுந் தாவும் – கால்
சக்தி தனக்கே கருவி யாக்கு – அது
சஞ்சலமில் லாமலெங்கும் மேவும். 12
மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சஞ்சலங்கள் தீர்ந்தொருமை கூடும் – மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு – அதில்
சாத்துவீகத் தன்மையினைச் சூடும். 13
மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தியற்ற சிந்தனைகள் தீரும் – மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு – அதில்
சாரும் நல்ல உறுதியும் சீரும். 14
மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தி சக்தி சக்தியென்று பேசும் – மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு – அதில்
சார்ந்திருக்கும் நல்லுறவும் தேசும். 15
மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தி நுட்பம் யாவினையும் நாடும் – மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தி சக்தி யென்று குதித் தாடும். 16
மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தியினை எத்திசையும் சேர்க்கும் – மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
தான் விரும்பில் மாமலையைப் பேர்க்கும். 17
மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சந்ததமும் சக்திதனைச் சூழும் – மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு – அதில்
சாவுபெறும் தீவினையும் ஊழும். 18
மனம்,
சக்தி தனக்கே உரிமையாக்கு – எதைத்
தான் விரும்பி னாலும்வந்து சாரும் – மனம்
சக்தி தனக்கே உரிமையாக்கு – உடல்
தன்னிலுயர் சக்திவந்து சேரும். 19
மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு – இந்தத்
தாரணியில் நூறுவய தாகும் – மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு – உன்னைச்
சாரவந்த நோயழிந்து போகும். 20
மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு – தோள்
சக்தி பெற்றுநல்ல தொழில்செய்யும் – மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு – எங்கும்
சக்தியருள் மாரிவந்து பெய்யும். 21
மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு – சிவ
சக்தி நடையாவும் நன்கு பழகும் – மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு – முகம்
சார்ந்திருக்கும் நல்லருளும் அழகும். 22
மனம்,
சக்தி தனக்கே கருவியாக்கு – உயர்
சாத்திரங்கள் யாவும் நன்குதெரியும் – மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு – நல்ல
சத்திய விளக்கு நித்தம் எரியும். 23
சித்தம்,
சக்தி தனக்கே உரிமையாக்கு – நல்ல
தாளவகை சந்தவகை காட்டும் – சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு – அதில்
சாரும் நல்ல வார்த்தைகளும் பாட்டும். 24
சித்தம்,
சக்தி தனக்கே உரிமை யாக்கு – அறு
சக்தியை யெல்லோர்க்கு முணர் வுறுத்தும் – சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு- அது
சக்திபுகழ் திக்கனைத்தும் நிறுத்தும். 25
மனம்,
சக்தி தனக்கே உரிமையாக்கு – அது
சக்தி சக்தி என்று குழலூதும் – சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு – அதில்
சார்வதில்லை அச்சமுடன் சூதும். 26
சித்தம்,
சக்தி தனக்கே உரிமையாக்கு – அது
சக்தி யென்று வீணைதனில் பேசும் – சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு – அது
சக்திபரி மளமிங்கு வீசும். 27
சித்தம்,
சக்தி தனக்கே உரிமையாக்கு – அது
சக்தி யென்று தாளமிட்டு முழக்கும் – சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு – அது
சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும். 28
சித்தம்,
சக்தி தனக்கே உரிமையாக்கு – அது
சக்திவந்து கோட்டை கட்டி வாழும் – சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு – அது
சக்தியருட் சித்திரத்தில் ஆழும். 29
மதி,
சக்தி தனக்கே உடைமையாக்கு – அது
சங்கடங்கள் யாவினையும் உடைக்கும் – மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு – அங்கு
சத்தியமும் நல்லறமும் கிடைக்கும். 30
மதி,
சக்தி தனக்கே உடைமையாக்கு – அது
சாரவருந் தீமைகளை விலக்கும் – மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு – அது
சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும். 31
மதி,
சக்தி தனக்கே உடைமையாக்கு – அது
சக்தி செய்யும் விந்தைகளைத் தேடும் – மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு – அது
சக்தியுறை விடங்களை நாடும். 32
மதி,
சக்தி தனக்கே உடைமையாக்கு – அது
தர்க்கமெனுங் காட்டிலச்சம் நீக்கும் – மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு – அதில்
தள்ளிவிடும் பொய்ந்நெறியும் தீங்கும். 33
மதி,
சக்தி தனக்கே உடைமையாக்கு – அதில்
சஞ்சலத்தின் தீயவிருள் விலகும் – மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு – அதில்
சக்தியொளி நித்தமுநின் றிலகும். 34
மதி,
சக்தி தனக்கே உடைமையாக்கு – அதில்
சார்வதில்லை ஐயமெனும் பாம்பு – மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு – அதில்
தான் முளைக்கும் முக்திவிதைக் காம்பு. 35
மதி,
சக்தி தனக்கே உடைமையாக்கு – அது
தாரணியில் அன்புநிலை நாட்டும் – மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு – அது
சர்வசிவ சக்தியினைக் காட்டும். 36
மதி,
சக்தி தனக்கே அடிமையாக்கு – அது
சக்திதிரு வருளினைச் சேர்க்கும் – மதி
சக்தி தனக்கே அடிமையாக்கு – அது
தாமதப் பொய்த் தீமைகளைப் பேர்க்கும். 37
மதி,
சக்தி தனக்கே அடிமையாக்கு – அது
சத்தியத்தின் வெல்கொடியை நாட்டும் – மதி
சக்தி தனக்கே அடிமையாக்கு – அது
தாக்கவரும் பொய்ப்புலியை ஓட்டும். 38
மதி,
சக்தி தனக்கே அடிமையாக்கு – அது
சத்தியநல் லிரவியைக் காட்டும் – மதி
சக்தி தனக்கே அடிமையாக்கு – அதில்
சாரவரும் புயல்களை வாட்டும். 39
மதி,
சக்தி தனக்கே அடிமையாக்கு – அது
சக்திவிர தத்தை யென்றும் பூணும் – மதி
சக்தி விரதத்தை யென்றுங் காத்தால் – சிவ
சக்திதரும் இன்பமும்நல் லூணும். 40
மதி,
சக்தி தனக்கே அடிமையாக்கு – தெளி
தந்தமுதம் பொய்கையென ஒளிரும் – மதி
சக்தி தனக்கே அடிமையாக்கு – அது
சந்ததமும் இன்பமுற மிளிரும். 41
அகம்,
சக்தி தனக்கே உடைமையாக்கு – அது
தன்னையொரு சக்தியென்று தேரும் – அகம்
சக்தி தனக்கே உடைமையாக்கு – அது
தாமதமும் ஆணவமும் தீரும். 42
அகம்,
சக்தி தனக்கே உடைமையாக்கு – அது
தன்னையவள் கோயிலென்று காணும் – அகம்
சக்தி தனக்கே உடைமையாக்கு – அது
தன்னை யெண்ணித் துன்பமுற நாணும். 43
அகம்,
சக்தி தனக்கே உடைமையாக்கு – அது
சக்தியெனும் கடலிலோர் திவலை – அகம்
சக்தி தனக்கே உடைமையாக்கு – சிவ
சக்தி யுண்டு நமக்கில்லை கவலை. 44
அகம்,
சக்தி தனக்கே உடைமையாக்கு – அதில்
சக்திசிவ நாதநித்தம் ஒலிக்கும் – அகம்
சக்தி தனக்கே உடைமையாக்கு – அது
சக்தி திரு மேனியொளி ஜ்வலிக்கும். 45
சிவ,
சக்தி என்றும் வாழி என்று பாடு – சிவ
சக்திசக்தி யென்று குதித் தாடு – சிவ
சக்தி என்றும் வாழி என்று பாடு – சிவ
சக்திசக்தி என்றுவிளை யாடு. 46
$$$