-மகாகவி பாரதி

பக்திப் பாடல்கள்
11. சிவசக்தி
இயற்கை யென்றுரைப்பார் – சிலர்
இணங்கும்ஐம் பூதங்கள் என்றிசைப்பார்,
செயற்கையின் சக்தியென்பார் – உயிர்த்
தீயென்பர் அறிவென்பர், ஈசனென்பர்;
வியப்புறு தாய்நினக்கே – இங்கு
வேள்விசெய் திடுமெங்கள் ஓம் என்னும்
நயப்படு மதுவுண்டே? – சிவ
நாட்டியங் காட்டிநல் லருள் புரிவாய்.
அன்புறு சோதியென்பார் – சிலர்
ஆரிருட் காளியென் றுனைப்புகழ்வார்;
இன்பமென் றுரைத்திடுவார் – சிலர்
எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்;
புன்பலி கொண்டுவந்தோம் – அருள்
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
மின்படு சிவசக்தி – எங்கள்
வீரைநின் திருவடி சரண்புகுந்தோம்.
உண்மையில் அமுதாவாய் – புண்கள்
ஒழித்திடு வாய்களி உதவிடுவாய்;
வண்மைகொள் உயிர்ச்சுடராய் – இங்கு
வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்;
ஒண்மையும் ஊக்கமுந்தான் – என்றும்
ஊறிடுந் திருவருட் சுனையாவாய்
அண்மையில் என்றும் நின்றே – எம்மை
ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய்.
தெளிவுறும் அறிவினை நாம் – கொண்டு
சேர்த்தனம், நினக்கது சோமரசம்
ஒளியுறும் உயிர்ச்செடியில் – இதை
ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்;
களியுறக் குடித்திடுவாய் – நின்றன்
களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்;
குளிர்சுவைப் பாட்டிசைத்தே – சுரர்
குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்.
அச்சமும் துயரும் என்றே – இரண்டு
அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்;
துச்சமிங் கிவர்படைகள் – பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்;
இச்சையுற் றிவரடைந்தார் -எங்கள்
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
பிச்சையிங் கெமக்களித்தாய் – ஒரு
பெருநகர் உடலெனும் பெயரினதாம்.
கோடிமண் டபந்திகழும் – திறற்
கோட்டையிங் கிதையவர் பொழுதனைந்தும்
நாடிநின் றிடர்புரிவார் – உயிர்
நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்;
சாடுபல் குண்டுகளால் – ஒளி
சார்மதிக் கூட்டங்கள் தகர்த்திடுவார்
பாடிநின் றுனைப்புகழ்வோம் – எங்கள்
பகைவரை அழித்தெமைக் காத்திடுவாய்.
நின்னருள் வேண்டுகின்றோம் – எங்கள்
நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே;
பொன்னவிர் கோயில்களும் – எங்கள்
பொற்புடை மாதரும் மதலையரும்,
அன்னநல் லணிவயல்கள் – எங்கள்
ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,
இன்னவை காத்திடவே – அன்னை
இணைமலர்த் திருவடி துணைபுகுந்தோம்.
எம்முயி ராசைகளும் – எங்கள்
இசைகளும் செயல்களும் துணிவுகளும்
செம்மையுற் றிடஅருள்வாய் – நின்றன்
சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்.
மும்மையின் உடைமைகளும் – திரு
முன்னரிட் டஞ்சலி செய்து நிற்போம்;
அம்மைநற் சிவசக்தி – எமை
அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்.
$$$
12. காணி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும்; – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும்; – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும்; அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும்; – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்; – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும்; – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்
காவலுற வேணும்; – என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.
$$$
13 நல்லதோர் வீணை
நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீச்சுடினும் – சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன், இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
$$$
14. மஹாசக்திக்கு விண்ணப்பம்
மோகத்தைக் கொன்றுவிடு – அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு – அல்லா லதில்
சிந்தனை மாய்த்துவிடு;
யோகத் திருத்திவிடு – அல்லா லென்றன்
ஊனைச் சிதைத்துவிடு;
ஏகத் திருந்துலகம் – இங்குள்ள
யாவையும் செய்பவளே!
பந்தத்தை நீக்கிவிடு – அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு;
சிந்தை தெளிவாக்கு – அல்லா லிதைச்
செத்த உடலாக்கு.
இந்தப் பதர்களையே – நெல்லா மென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே – உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே!
உள்ளம் குளிராதோ? பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ? – அம்மா! பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே – இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே – அனைத்திலும்
மேவி யிருப்பவளே!
$$$