-சேக்கிழான்
‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தில் 2019இல் வெளியான இக்கட்டுரை, இங்கு காலத்தின் தேவை கருதி மீள்பதிவாகிறது...

திருவள்ளுவருக்கு பாஜகவினர் காவிச்சாயம் பூசிவிட்டதாக திமுக, திக, இடதுசாரிகள், தமிழினவாத அமைப்புகள் கூக்குரல் எழுப்பி வருகின்றன. திருநீறு பூசி திருவள்ளுவரை இழிவுபடுத்திவிட்டதாக (திருநீறு இவர்களுக்கு இழிவாம்) கம்மூனிஸ்ட் கயவாளிகள் புலம்பி வருகிறார்கள். இந்தக் கிறுக்கர்களுக்கு திருவள்ளுவர் ஹிந்து (இல்லறத்) துறவிதான் என்பதை பொட்டில் அடித்தது போல சொல்லவேண்டி இருக்கிறது.
முதலில் அவருக்கு காவி ஆடை அணிவித்தது சரியா என்ற கேள்விக்கு வருவோம். முதன்முதலில் நூறாண்டுகளுக்கு முன்னர் வள்ளுவப் பெருந்தகையை படமாக வரைந்தபோது அவருக்கு இந்து சாமியார் உருவமே வரையப்பட்டது. அவர் திருநீறும் தரித்திருந்தார். ருத்திராட்ச மாலையும் அணிந்திருந்தார். ஆனால், கவிஞர் பாரதிதாசனின் ஏற்பாட்டில் 1959இல் கே.ஆர்.வேணுகோபால் சர்மா வள்ளுவரின் உருவப்படத்தை வரைந்தபோது அப்போதைய (காங்கிரஸ்) ஆட்சியாளர்களின் சிறுமதியால் அவர் எந்த மத அடையாளமும் இல்லாதவராக, வெள்ளையாடை அணிந்தவராக மாற்றப்பட்டார். பிறகு ஆட்சிக்கு வந்த திமுகவினர் அந்தப் படத்தை அரசுப்பூர்வமான படமாக அறிவித்தனர். இவ்வாறு மாற்ற இந்தக் கீழ்மதியாளர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இப்போது காவி ஆடை அணிந்திருப்பது போல உள்ள படமும் புதியதல்ல. பாஜகவினர் அதைப் பயன்படுத்தியதால் தற்போது சர்ச்சைக்குள்ளாக்கி உள்ளனர், அவ்வளவே.
ஒரு பேச்சுக்காக இதை விவாதமாக்குவோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவர் எந்த ஆடையை அணிந்திருந்தார் என்பதை யார் நிர்ணயிப்பது? வள்ளுவர் அனைவராலும் விரும்பப்படுபவர் என்பதால் அவரவர் விருப்பப்படி அவரது ஓவியத்தைத் தீட்டலாமா? அந்நாளில் மட்டுமல்ல, இந்நாளிலும் தமிழகத்தின் துறவிகள் அனைவரும் அணிவது காவியாடை தானே?
திருவள்ளுவர் ஒரு சமணர் என்பதால் அவர் வெள்ளையாடை அணிந்திருக்கலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், வள்ளுவரின் குறள்கள் அவர் ஒரு சனாதனியாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பதை நிறுவுகின்றன. சனாதனிகளே இப்போது ஹிந்து என்று அழைக்கப்படுகிறார்கள். தவிர, சமணர் ஆயினும் அவர்களும் சனாதன தர்மத்தின் அங்கமே. ஆகவே கடவுள் மறுப்பாளர்களுக்கு இந்த விஷயத்தில் எந்த வேலையும் இல்லை.
திருக்குறளை ‘தங்கத்தட்டில் வைத்த மலம்’ என்று கேவலமாக விமர்சித்த ஈ.வெ.ரா.வின் அடிப்பொடிகளுக்கு பாஜகவினரை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை. திருவள்ளுவரை கடவுள் ஸ்தானத்தில் வணங்கும் ஹிந்துக்களுக்கு இல்லாத உரிமை, அரசியல் லாவணி பாடும் திமுகவினருக்கும் இல்லை.



இன்றும் சென்னை, மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு தனிக் கோயில் உள்ளது. தமிழகத்தின் மேலும் பல கோயில்களில் திருவள்ளுவர் வணங்கப்படுகிறார். மயிலைக் கோயில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டதாகும். இங்கு ஆண்டுதோறும் வைகாசி அனுஷம் நட்சத்திரத்தன்று வள்ளுவ நாயனாருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இங்கு அவரை தெய்வமாக வழிபடுவோர் ஹிந்துக்கள் தானே? வள்ளுவரை வழிபடுவோருக்கு, அவருக்கு என்ன ஆடை அணிவிக்க வேண்டும் என்று நாத்திகவாதிகள் பாடம் நடத்தலாமா?
மயிலை கபாலீஸ்வரர் கோயில் 63 நாயன்மார் உற்சவத்தின்போது, திருவள்ளுவ நாயனாரை 64 நாயன்மாராக ஊர்வலம் அழைத்து வரும் நிகழ்வு எத்தனையோ ஆண்டுகளாக நடந்து வருகிறது. அப்போது அவர் காவியாடை தரித்து, திருநீற்று மங்கலத்துடன் தானே காட்சி தருகிறார்?
ஹிந்து தெய்வங்கள் குறித்து திருவள்ளுவர் பல குறள்களில் கூறி இருக்கிறார். வாமன அவதாரம் குறித்து 610வது குறளிலும், யமன் குறித்து 269, 326, 765, 1083, 1085 குறள்களிலும், பிரம்மா குறித்து 1062 வது குறளிலும், திருமகள் குறித்து 179, 519, 617, 920 ஆகிய குறள்களிலும், கண்ணன் குறித்து 1103வது குறளிலும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறாரே வள்ளுவர்! அவர் ஹிந்து அல்லவா? கடவுள் வாழ்த்து, தவம், துறவு, புலால் உண்ணாமை, ஊழ் என பல அதிகாரங்களில் அவர் வலியுறுத்துவது ஆன்மிக இயல்பல்லவா? வானம் பொய்த்தால் சிறப்பான பூசனை செல்லாது (குறள்- 16) என்று அவர் சொல்வது யாருக்காக?
தென்புலத்தார், தெய்வம், விருந்தொக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
-என்ற குறள் (43) வழி, திருவள்ளுவர் கூறுவது பாரதப் பண்பாட்டின் அடிநாதம் அல்லவா? பொருள் ஈட்டுவதும் அறத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற வள்ளுவரின் வரிகளை நினைத்தாலே, கழக அரசியல்வாதிகளின் கயமை முகம் தோலுரிந்து விடுமே!
ஹிந்துக்களின் நம்பிக்கையான மறுபிறப்பு, எழுபிறவி, விதிப்பயன், இறைவன் அடி சேர்தல் ஆகியவை மிகத் தெளிவாக வள்ளுவரால் குறிப்பிடப்படும் நிலையில் அவருக்கு ஏன் மதச்சார்பின்மை சாயத்தைப் பூசுகிறீர்கள்? தொன்றுதொட்ட பாரத சமய சாரமே வள்ளுவத்திலும் எதிரொலிக்கிறது. உண்மையில் தவறிழைத்தவர்கள் திராவிட விஷங்கள் தானே ஒழிய, அதைத் திருத்த முயல்வோர் அல்ல.
அவர் மதச்சார்பற்றவர் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். திருவள்ளுவரை வெள்ளையாடை சாத்திக்கூட தங்கள் அனைத்துக் கோயில்களிலும் வைக்க ஹிந்துக்கள் தயார். ஹிந்துக்கள் பலரது வீடுகளில் இப்போதே வள்ளுவர் அருள்பாலித்துக் கொண்டுதான் இருக்கிறார். இதேபோல இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் வைக்கத் தயாரா?
திருக்குறளை புனித நூலாக ஹிந்துக்கள் போற்றுகிறார்கள். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் அவ்வாறு திருக்குறளை புனித நூல் என்று ஒப்புக் கொள்கிறார்களா?
வள்ளுவர் என்பதே ஹிந்து மதத்தின் உட்பிரிவுதான். எதிர்காலத்தை கணித்துச் சொல்லும் அறிவாளர்களாக இந்த ஜாதியினர் விளங்கி வருகின்றனர். இதனை யாரேனும் மறுக்க முடியுமா?
இத்தனைக்கும் பிறகும், திருவள்ளுவருக்கு காவியாடை அணிவிக்காதே, திருநீறு பூசாதே என்பவர்களைப் பார்த்து ஹிந்துக்கள் கேட்க வேண்டிய கேள்வி, இதைச் சொல்ல நீங்கள் யார் என்பதே.
திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உதித்த ஞானி; பாரதப் பண்பாட்டின் அடிநாதமான ஒழுக்கலாறுகளை உபதேசித்த சனாதனி; உலகுக்கு ஞானம் அளித்த துறவி. சனாதனத்தின் இப்போதைய பெயர் ஹிந்து என்பதால், வள்ளுவர் ஓர் ஹிந்துவே. அவரைப் போற்றவும், எந்த வடிவிலும் வணங்கவும் ஹிந்துப் பெருமக்களுக்கு உரிமையும் உண்டு, கடமையும் உண்டு. இதை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை.
$$$

திருவள்ளுவரும் திருநீறும்
-ஜடாயு
வெகுஜன அளவில் பிரபலமாக உள்ள திருவள்ளுவர் படத்தை எடுத்து ஃபோட்டோஷாப் செய்து விபூதி பூசிய அந்தத் தம்பியின் ஆர்வம் பாராட்டுக்குரியது. ஆனால் அவர் குழைத்து விபூதி இடும் பழக்கமில்லாதவர் அல்லது அத்தகைய தோற்றத்தினரைக் கூர்ந்து பார்த்திருக்காதவர் என்று தோன்றுகிறது. நெற்றியிலும் வலதுபுஜத்திலும் மட்டும் பட்டையை ஒட்டவைத்து விட்டுவிட்டார். இது எங்கும் காணாத ஒரு புதுவிதமான “திருவள்ளுவர் விபூதி ஸ்டைல்” என்று தோன்றுகிறது
இதனை முறைப்படியும் திருத்தமாகவும் செய்திருக்கலாம். அதற்கு வள்ளுவரின் மேனி வெளித்தெரியும் வலது தோள், வலது மணிக்கட்டு, இடது மணிக்கட்டு, மார்பின் வலப்பகுதி ஆகியவற்றிலும் விபூதியைப் பூசவேண்டும்.
செய்ததோ செய்தார், ஸ்டிக்கர் பட்டை மாதிரி செயற்கையாதத் தெரியாமல், இயல்பான திருநீற்றுப் பூச்சு வருமாறு செய்திருக்கலாம். என்ன செய்வது? நல்ல முனைப்பு மட்டும் இருந்து, நுண்ணுணர்வு, அழகுணர்வு, கலையுணர்வு, ரசனை உணர்வு எதுவும் இல்லாவிட்டால் இப்படிப்பட காமெடி கலந்த விநோதங்கள் தான் காணக்கிடைக்கும். ஆனால், இதை வைத்துக்கொண்டே தமிழ்த் தொலைக்காட்சி தடியன்களும் சமூக ஊடகங்களில் உள்ள திமுக அடிமைகளும் அடிபட்ட நாய்போல அலறுகிறார்கள் என்பதைப் பார்க்கவும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது.
மேலே உள்ள படத்தில், திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பின் அட்டையில் எஸ்.ராஜம் வரைந்துள்ள திருவள்ளுவர் நல்ல அம்சமாக இருக்கிறார். நெற்றியில் மட்டுமே உத்தூளனமாக விபூதி தரித்திருக்கிறார், உடலில் அல்ல. இதுவும் சம்பிரதாயப் படி முறையானதே. 1880களின் புத்தகப் படங்களில் உள்ள திருநீறும் முறையாகவே உள்ளது.
–ஜடாயு, தனது ஃபேஸ்புக் பக்கத்தில்
- நன்றி: தமிழ் ஹிந்து இணையதளம்
$$$