-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்

பயணீயம்
பயணிகளின்
கனிவான கவனத்திற்கு…
தயாராக இருக்கவும்.
தலையில் பறவையிடும் எச்சமாய்,
கிளையில் வந்தமரும் பறவையாய்,
கூட்டத்தில் வெடிக்கும் வன்முறையாய்,
வழியில் எதிர்ப்படும் கந்துக்காரனாய்,
உங்களுக்கான தடத்தில்
உங்களுக்கான வண்டி
எப்போதும் வரலாம்.
.
அடித்துப் பிடிக்கிற அவசரமில்லை.
இலைத்தடத்தில்
இலை தின்றபடியே ஊரும்
நத்தை போல ஏறுங்கள்.
உங்கள் பயணம் முன்பதிவானது தானே?
.
கையசைத்து, கையசைத்து
வழியனுப்புவோரை அழையாதீர்.
அவர்களுக்கான வண்டிக்கு
அவர்கள் காத்திருக்கிறார்கள்.
.
சுகமான பயணத்துக்கு
சுமைகளற்று வாருங்கள்.
அடையாள அட்டை தேவையில்லை.
அவ்வாறு ஏதுமிருப்பின்
இடையில் நீங்கள்
இறக்கிவிடப்படலாம்.
.
இருக்கையைத் தேடி அலையாதீர்;
இருக்கையாகவே இருந்து விடுங்கள்.
.
ஏறும் முன் நீங்கள் பயணி.
ஏறிய பின் நீங்களே பயணம்.
.
பயணிகளின்
கனிவான கவனத்திற்கு
மன்னிக்கவும்…
இறுதிப் பயணிகளின்
கனிவான கவனத்திற்கு.
$$$