-மகாகவி பாரதி
மன்னரவையில் தங்கள் மனையாளை அவமதித்த துரியனின் தொடையைப் பிளந்துயிர் மாய்பேன் என்று பீமன் சபதம் செய்தவுடன், இளையவனான பார்த்தன் எழுந்து சபதம் செய்கிறான். தங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழலின் மீதும், "கார்த்தடங் கண்ணிஎந்தேவி - அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை” என்கிறான்; “பாஞ்சாலியின் துகிலுரியச் சொன்ன பாதகக் கர்ணனைப் போரினில் மாய்ப்பேன்... போர்க்களத்தில் போர்த்தொழில் விந்தைகளை பூதலமே அறிக” என்கிறான்...

இரண்டாம் பாகம்
2.3. சபதச் சருக்கம்
2.3.12. அர்ஜுனன் சபதம்
பார்த்த னெழுந்துரை செய்வான்: – ‘இந்தப்
பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்.
தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு – எங்கள்
சீரிய நண்பன் கண்ணன்கழலாணை;
கார்த்தடங் கண்ணிஎந்தேவி – அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை;
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய், – ஹே!
பூதலமே! அந்தப் போதினில்’ என்றான். 102
$$$