-மகாகவி பாரதி
அவையில் பாஞ்சாலியின் கதறல் கேட்டு பீமன் பொங்கி எழுகிறான். தனது அன்னண் தருமனைப் பார்த்து, “மாதர் குல விளக்கை, பாஞ்சாலன் மகளை, திருஷ்டத்துய்மன் சகோதரியை, போரில் வென்று கைத்தலம் பற்றிவந்த காரிகையை சூதில் பணயம் வைத்தது ஏன்?” என்று சினத்துடன் வினவுகிறான். இறுதியாக, “இது பொறுப்பதில்லை - தம்பி! எரிதழல் கொண்டுவா. கதிரை வைத்திழந்தான் - அண்ணன் கையை எரித்திடுவோம்” என்று கர்ஜிக்கிறான் என்கிறார் மகாகவி பாரதி.

இரண்டாம் பாகம்
2.3. சபதச் சருக்கம்
2.3.6. வீமன் சொல்வது
வேறு
‘சூதர் மனைகளிலே – அண்ணே!
தொண்டு மகளிருண்டு.
சூதிற் பணய மென்றே – அங்கோர்
தொண்டச்சி போவதில்லை. 69
‘ஏது கருதிவைத்தாய்? – அண்ணே,
யாரைப் பணயம்வைத்தாய்?
மாதர் குலவிளக்கை – அன்பே
வாய்ந்த வடிவழகை. 70
‘பூமி யரசரெல்லாங் – கண்டே
போற்ற விளங்குகிறான்,
சாமி, புகழினுக்கே – வெம்போர்ச்
சண்டனப் பாஞ்சாலன். 71
‘அவன் சுடர்மகளை, – அண்ணே,
ஆடி யிழந்துவிட்டாய்.
தவறு செய்துவிட்டாய்; – அண்ணே,
தருமங் கொன்றுவிட்டாய். 72
‘சோரத்திற் கொண்டதில்லை; – அண்ணே!
சூதிற் படைத்ததில்லை.
வீரத்தினாற் படைத்தோம்; – வெம்போர்
வெற்றியினாற் படைத்தோம்; 73
‘சக்கரவர்த்தி யென்றே – மேலாந்
தன்மை படைத் திருந்தோம்;
பொக்கென ஓர்கணத்தே – எல்லாம்
போகத் தொலைத்துவிட்டாய். 74
‘நாட்டையெல்லாந் தொலைத்தாய்; – அண்ணே,
நாங்கள் பொறுத்திருந்தோம்.
மீட்டும் எமையடிமை – செய்தாய்,
மேலும் பொறுத்திருந்தோம். 75
‘துருபதன் மகளைத் – திட்டத்
துய்ந னுடற்பிறப்பை, –
இருபகடை யென்றாய், – ஐயோ!
இவர்க் கடிமையென்றாய்! 76
‘இதுபொறுப்ப தில்லை, – தம்பி!
எரிதழல் கொண்டுவா.
கதிரை வைத்திழந்தான் – அண்ணன்
கையை எரித்திடுவோம்.’ 77
$$$