பாரதி- அறுபத்தாறு (37- 39)

-மகாகவி பாரதி

முந்தைய பாடலில் மாங்கொட்டைச் சாமியின் புகழ் பாடிய மகாகவி பாரதி, இப்பாடலில், தனது குருவாக வரித்துக் கொண்ட கோவிந்த சுவாமியின் புகழைப் பாடுகிறார். அறிவே தெய்வம் என்ற பாரதிக்கு அன்பே தெய்வம் என்ற தரிசனம் தந்த ஞானி இவர்....

பாரதி – அறுபத்தாறு (37-39)

கோவிந்த சுவாமி புகழ்


மாங்கொட்டைச் சாமி புகழ் சிறிது சொன்னோம்;
      வண்மை திகழ் கோவிந்த ஞானி, பார்மேல்
யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான்;
      எம்பெருமான் பெருமையையிங் கிசைக்கக் கேளீர்!
தீங்கற்ற குணமுடையான் புதுவை யூரார்
      செய்தபெருந் தவத்தாலே உதித்த தேவன்
பாங்குற்ற மாங்கொட்டைச் சாமி போலே
      பயிலுமதி வர்ணாசிர மத்தே நிற்போன்.       37

அன்பினால் முத்தியென்றான் புத்தன் அந்நாள்,
      அதனையிந்நாட் கோவிந்த சாமி செய்தான்;
துன்பமுறும் உயிர்க்கெல்லாம் தாயைப் போலே
      சுரக்குமரு ளுடையபிரான் துணிந்த யோகி;
அன்பினுக்குக் கடலையுந்தான் விழுங்க வல்லான்;
      அன்பினையே தெய்வமென்பான் அன்பே யாவான்;
மன்பதைகள் யாவுமிங்கே தெய்வம் என்ற
      மதியுடையான், கவலையெனும் மயக்கம் தீர்ந்தான்;       38

பொன்னடியால் என்மனையைப் புனித மாக்கப்
      போந்தானிம் முனியொருநாள்; இறந்த எந்தை
தன்னுருவங் காட்டினான்; பின்னர் என்னைத்
      தரணிமிசைப் பெற்றவளின் வடிவ முற்றான்;
அன்னவன்மா யோகியென்றும் பரம ஞானத்
      தனுபூதி யுடையனென்றும் அறிந்து கொண்டேன்;
மன்னவனைக் குருவெனநான் சரண டைந்தேன்;
      மரணபயம் நீங்கினேன்; வலிமை பெற்றேன்.       39

$$$

Leave a comment