-பேரா.ப.கனகசபாபதி
கல்வியாளரும் பாஜக பிரமுகருமான பேராசிரியர் ப.கனகசபாபதி அவர்கள் 2018ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை இது. இன்றும் பொருத்தமாக இருப்பதால், தேர்தல் காலத்தை முன்னிட்டு இக்கட்டுரை மீள்பதிவாகிறது.

தமிழகத்தின் பெரிய பல்கலைக் கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்துள்ள மதிப்பெண் மறு கூட்டல் மற்றும் தேர்வுகள் பற்றி கடந்த சில வாரங்களாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வந்து கொண்டுள்ளன. அங்கு பல வருடங்களாகவே தேர்வு முறையில் பெரிய குளறுபடிகள் நடந்து வருவதாகவும், அதற்காகப்பல கோடி ரூபாய்அளவுக்கு பணப்பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன. தொடர்ந்து சில பேராசிரியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனால் பல்கலைக்கழகத்தின் நம்பகத் தன்மை பற்றி கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
தமிழகப் பல்கலைக் கழகங்கள் குறித்து கடந்தசில வருடங்களாகவே தொடர்ந்து கவலையளிக்கும் செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன. 2016ஆம் ஆண்டு இறுதியில்அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஊழல் நடவடிக்கைகளுக்காக குற்றம் நிரூபிக்கப்பட்டு ஐந்து வருட சிறைத்தண்டனை பெற்றார். 2018 ஆம் வருடம் பிப்ரவரி தொடக்கத்தில் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், ஒரு துணைப் பேராசிரியரிடம் பணம் வாங்குகின்ற போது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் பிடிபடுகிறார். அதன்மூலம் துணைவேந்தர் ஒருவர் பொறுப்பு வகிக்கும் போதே பல்கலைக்கழகம் ஒதுக்கியுள்ள தனது அதிகாரபூர்வமான வீட்டில் கையும் களவுமாகப் பிடிபடுகின்ற அவலம் நடந்தேறியது.
அதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்னொரு முன்னாள் துணைவேந்தர் மற்றும் சட்டப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆகியோர் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் பேர்களில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகளைப் பதிவு செய்கிறது. மேலும் அவர்களுக்குத் தொடர்புடைய வெவ்வேறு இடங்களில் சோதனைகள் நடந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய சொத்துக்களுக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகச் செய்திகள் வந்தன.
2012 ஆம் வருடத்திலேயே தமிழ்நாடுவேளாண் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தரின் அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டு பின்னர் ஊழல்வழக்கு போடப்பட்டது. தொடர்ந்து பின்வந்த காலங்களில் அந்த வகையான வழக்குகள் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன. திருவள்ளுவர், பெரியார், பாரதிதாசன், மதுரை காமராசர், அழகப்பா, டாக்டர் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் ஊழல்களும், விதி மீறல்களும் நடந்துள்ளதாகவும், அதற்காகத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் வந்து கொண்டிருந்தன.
எனவே தவறுகள் ஏதோ விதிவிலக்காக ஒரு சில பல்கலைக் கழகங்களில் மட்டும் நடப்பதாகத் தெரியவில்லை. மாறாக அவை மாநிலத்தின் பல பல்கலைக்கழகங்களிலும் விரிந்து பரவியுள்ள கொடிய புற்றுநோயாகப் பரிணமித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் இவை ஏதோ புதியதல்ல என்பதும் தெளிவாகிறது. இவைபற்றி கடந்த பல வருடங்களாகவே சில நேர்மையான கல்வியாளர்கள் எச்சரிக்கை செய்து வந்துள்ளனர். ஆனால் அப்போதெல்லாம் அவை பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதன் விளைவுகளைத் தான் நாம் இப்போது கண்டு கொண்டிருக்கிறோம்.
இந்த அவலங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம், அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் தலையீடுகள் மூலமாக நிகழும் துணைவேந்தர் நியமனங்களில்ஆரம்பிக்கிறது. குறிப்பாக கடந்த சுமார் பதினைந்து வருடங்களாகத் துணைவேந்தர் நியமனங்கள் நேர்மையானதாக இல்லை என்பதும், அந்தப் பதவிகளுக்கு வந்தவர்கள் வேறு வழிகளில் வந்தார்கள் என்பதும், கல்வித் துறையில் பரவலாகப் பேசப்படுகின்ற விஷயமாகும். அதனால் பதவியேற்ற உடனே தங்களின் முதலீடுகளை பல மடங்காகத் திரும்ப எடுப்பதற்காக அவர்கள் எல்லா விதமான தவறான நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார்கள்.
எனவே கடந்த பல ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களின் எல்லா மட்டங்களிலும் விதிமுறை மீறல்கள், ஊழல்கள், பணப் பரிமாற்றங்கள் மற்றும் முறை தவறிய நியமனங்கள் என்பதெல்லாம் நடைமுறையாகி விட்டன. அதற்காகப் பல புதிய உத்திகள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக, அவசியமே இல்லாமல் பல்கலைக்கழகங்களில்புதிய துறைகளை உருவாக்குவது, காரணமே இல்லாமல் ஒரு துறையை இரண்டாகப் பிரிப்பது போன்றவற்றைச் சொல்லலாம். எனவே, மாணவர்கள் போதுமான அளவில் இல்லாமல், ஆனால் ஆசிரியர்கள் மட்டும் தேவைக்கு அதிகமாக உள்ள துறைகள் பல்கலைக்கழகங்களில் இருப்பதாகத் தெரிகிறது.
அவற்றுக்கான நோக்கமே புதியதாக பேராசியர் உள்ளிட்ட பணி நியமனங்களைத் தவறுதலாக அதிக அளவில் மேற்கொண்டு தங்களின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வது என்பது மட்டும் தான். அதற்கான விதிமுறைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை. அவை முறைப்படி நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகளின் ஒப்புதல் கூட இல்லாமல் மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் சட்டம் வரையறை செய்துள்ள இடஒதுக்கீடுகள் கூட முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.
ஆசிரியர்கள் நியமனங்களுக்குப்பதவிக்குத் தகுந்தமாதிரி தனித்தனியாக விலை வைத்து ஏலம் விடப்படுவதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. அதனால் தகுதி வாய்ந்தவர்கள் வாய்ப்புகளை இழந்ததையும், அதில் பலர் வெறுப்படைந்து சொந்த மாநிலத்தை விட்டு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் சென்று பணியாற்றி வருவதாகவும் செய்திகள் வருகின்றன.
தேவைக்கு அதிகமாக நியமனங்கள் செய்வதனால் பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கொடுக்க முடியாமல் கூட சிரமங்கள் ஏற்படும். ஆனால் அவற்றைப் பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தமது பதவிக் காலத்தை முடித்துச் சென்று விட்டால் சமாளித்துக் கொள்ளலாம் என்னும் தைரியம் மேலோங்கி உள்ளது. அதிகாரத்தில் உள்ள தமது மற்ற கூட்டாளிகள் எப்படியும் உண்மை வெளிவராமல் தடுப்பார்கள் என்கிற நம்பிக்கையும் வலுவாக உள்ளது.
மேலும் தவறான வழியில் வந்தவர்களே பல பல்கலைக்கழகங்களில் பதிவாளர்களாகவும், பேராசிரியர்களாகவும், துறைத் தலைவர்களாகவும், நியமிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதனால் பல்கலைக்கழக நிர்வாகமும், படிப்பும், ஆராய்ச்சியும் கெட்டுவருகின்றன. ஊழல் புரிபவர்கள், பதிவாளராகவும், துறைத் தலைவர்களாகவும்பொறுப்பில்இருக்கும் போது, எப்படி நிர்வாகம் நேர்மையானதாக நடக்க முடியும்?
மேலும் பல்கலைக் கழகங்களில் வெவ்வேறு நிர்வாகப் பொறுப்புகள் உள்ளன. அவற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பதிலும் பலவிதமான தவறுகள் நடக்கின்றன. துணைவேந்தர்கள் தமக்கு ஒத்துப்போவோரையே பொறுப்புகளில் நியமிக்க உதவிகளைச் செய்கிறார்கள். இல்லையெனில் அந்த வகை நியமனங்களை மேற்கொள்வதே இல்லை. ஏனெனில் அந்தநியமனங்கள் மூலம் சில நேர்மையானவர்கள் வந்து விடக் கூடும். அதனால் அவர்கள் விரும்புகிற மாதிரி தவறுகள் செய்ய முடியாது.
எனவே நியமனங்களை முறைப்படிமேற்கொள்ளாமல், பல்கலைக்கழகத்தில் உள்ள தமது நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருக்கும் பேராசிரியர்களை வைத்தே நிர்வாகத்தை நடத்துகிறார்கள். ஆட்சிமன்றக் குழுக்களுக்களுக்குக் கூட அப்படிப்பட்ட நபர்களையே பரிந்துரைத்துத் தேர்ந்தெடுக்கின்றனர். அதன்மூலம் எல்லாவிதமான தவறுதல்களும் நடக்கின்றன. தங்களுக்குச் சாதகமில்லாத சமயங்களில் முக்கியமான பொறுப்புகளுக்கு நியமனங்களை மேற்கொள்வதேஇல்லை.
அதற்கு பதிலாக ‘தற்காலிகப் பொறுப்பு’ என்ற பெயரில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். விதிமுறைகளுக்கு மாறாக அவர்களில் ‘திறமைசாலிகள்’ தொடர்ந்து பல துணைவேந்தர்கள் வந்த போதும் அதே பதவிகளில் நீடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையாகப் பணியாற்ற வேண்டிய சம்பந்தப்பட்ட துறைகளில் அவர்கள் வேலை செய்வதில்லை. அதனால் மாணவர்களின் படிப்பும் ஆராய்ச்சிகளும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மேலும் தவறான முறையில் பணிக்கு வரும் துணைவேந்தர் தனது சொந்த லாபங்களுக்காக கட்டிடங்கள் கட்டுவது, வாகனங்கள் வாங்குவது உள்ளிட்ட வேலைகளில் மட்டுமே அதீத கவனம் செலுத்துகிறார். ஆளாளுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதியதாக வாகனங்களை அதிகவிலை கொடுத்து வாங்குவது வாடிக்கையாக நடைபெறுகிறது. இதற்காக பல்கலைக்கழகங்களில் உள்ள குழுக்களை எல்லாம் துணைவேந்தர்கள் தம் வயப்படுத்தி விடுகின்றனர். அதற்காக பணி அனுபவம் மற்றும் நேர்மையாக உள்ளவர்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள்.
பதவியேற்ற உடனேயே தமது பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் உறுப்புக் கல்லூரிகளில் குறிப்பிட்ட தொகையைக் கொண்டுவந்து கொடுக்குமாறு ஒரு முன்னாள் துணைவேந்தர் சொல்லியதாக தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளரும் பழைய காலத்திய நேர்மையான துணைவேந்தருமான ஒருவர் கவலையுடன் குறிப்பிட்டிருந்தது சில மாதங்களுக்கு முன் செய்தியாக வெளிவந்தது. பின்னர் தமது பதவிக்காலத்தில் தொடர்ந்து பல சமயங்களில் வெவ்வேறு காரணங்களுக்காகக் குறிப்பிட்ட தொகைகளை துணைவேந்தர் வசூல் செய்வது என்பது வாடிக்கையாகி விட்டதாக கல்வி நிறுவனங்கள் குறை கூறுகின்றன.
ஓர் ஊழல் துணைவேந்தர் பதவிக்கு வந்த பின்னர், அவர் மட்டும் ஊழல் செய்வதில்லை. தனக்குத் துணையாகப் பலரை உடந்தையாக்குகிறார். அதனால் நிர்வாகம் சீரழிந்து, கல்வி வளர்ச்சி தடைப்பட்டு, பல்கலைக்கழகமே பாதிப்புக்குள்ளாகிறது.
அதிர்ஷ்டவசமாக தமிழகப் பல்கலைக்கழகங்களில் இப்போதும் நேர்மையான பேராசிரியர்கள், அர்ப்பணிப்பு உள்ளவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் முடிந்த வரை நன்கு பாடங்களைப் போதித்து, ஆய்வுகளை மேற்கொண்டு மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர். அதனால்தான் இவ்வளவு குளறுபடிகளுக்கும் இடையிலும் தமிழகப் பல்கலைக்கழகங்கள் முடிந்த வரை செயல்பட்டு வருகின்றன.
அதே சமயம், தவறு செய்பவர்கள் அதிகாரத்தில் பெருமளவில் இருப்பதால், நல்லவர்களின் ஊக்கமும் செயல்பாடுகளும் தடைபட்டு வருகின்றன. நல்ல தலைமை இல்லாத போது மாணவர்கள் நம்பிக்கை இழந்து விடுகிறார்கள். பல்கலைகழகத்துக்குள் காலையில் எதிர்பார்ப்புகளுடன் நுழையும் மாணவன், தவறு செய்பவர்கள் பலரும் தன் கண் முன்னால் பொறுப்புக்கு வருவதையும், தொடர்ந்து அவர்கள் தவறு செய்வதையும் பார்க்கிறான். அதனால் அவன் பாதிப்புக்குள்ளாகிறான். ஆய்வு மாணவர்களில் பல பேர், ஆய்வுகளை முடித்துப் பட்டம் பெறுவதற்குள் பலவிதமான நெருக்கடிகளுக்கு ஆளாவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
அதனால் தமிழகப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் பெரும் வருத்தத்தை அளிக்கின்றன. எனவே அவற்றின் எதிர்காலம் குறித்து நாமெல்லாம் கவலைப்பட வேண்டியுள்ளது. ‘கல்வி சிறந்த தமிழ் நாடு’ என்று பாரதி பாடிய தமிழகத்தில் உயர்கல்வித்துறை ஏராளமான சிக்கல்களில் தவித்துக் கொண்டுள்ளது. குழந்தைகளைப் படிக்க வைக்க எல்லாத் தியாகங்களையும் செய்யத் தயாராக உள்ள பெற்றோர் நம் மாநிலத்தில் உள்ளனர். நல்ல முறையில் படித்துசாதனைகள் செய்யத் துடிக்கும் மாணவர்களும் இங்கு உள்ளனர். இந்தச் சூழ்நிலையை நன்கு பயன்படுத்தி நமது கல்வித்துறையை மேலெடுத்துச் செல்வது நமது கடமை.
துரதிஷ்டவசமாக, இப்போது நமது பல்கலைக்கழகங்களின் பெயர்களில் மட்டுமே மகத்தான நமது தமிழ் மண்ணின் அடையாளங்களாக விளங்கும் திருவள்ளுவர், பாரதியார், காமராசர் உள்ளிட்ட ஆளுமைகள் உள்ளனர். அவர்களின் போதனைகள் எவை பற்றியும் பல்கலைக்கழகங்கள் துளியும் கண்டுகொள்வதில்லை.
இந்தத் தவறுகள்அனைத்திலும் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது. பல்கலைக்கழகங்களின் சீரழிவே அவர்களிடம் இருந்துதான்ஆரம்பிக்கிறது. பேராசையும் குறுகிய நோக்கமும் கொண்ட பேராசிரியர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதன்மூலம் நமது தேசத்தில் புனிதமாகப் போற்றப்படும் ஆசிரியப் பணிக்கு அவர்கள் களங்கம் விளைவித்து வருகின்றனர்.
இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும். தமிழகத்தின் உயர்கல்வித் துறையில் நேர்மையும் திறமையும் அடிப்படையான தகுதிகளாக்கப்பட வேண்டும். அதன்மூலம் தமிழகம் இந்திய அளவில் முதல்நிலையை எட்ட வேண்டும்.
அதிர்ஷ்டவசமாக தற்போதைய ஆளுநர் புதிய வேந்தராகப் பொறுப்பேற்ற பின்னர் (2018) துணைவேந்தர் நியமனங்கள் நேர்மையான முறையில் இருந்து வருவதாகத் தெரிகிறது. இது பல வருடங்களுக்கு அப்புறம் தமிழக உயர்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள ஒரு நல்ல வரவேற்கத்தக்க மாற்றம். இந்த நிலை தொடர வேண்டும். புதிய துணைவேந்தர்கள் நிர்வாகத்தைச் சரிசெய்ய எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுப கலைக்கழகங்களுக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும்.
$$$