பாரதியின் தனிப்பாடல் – 21

-மகாகவி பாரதி

தமிழன்னையின் சிறப்பணிகளான பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் கரையானுக்கு இரையாகாமல் காத்து, ஏடுகளைச் சரிபார்த்து செம்மையாக்கிப் பதிப்பித்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர். அவரது அளப்பரிய ஆற்றலால் தான் நமது தாய்மொழி செம்மொழி என்னும் பெருமையை நம்மால் தக்கவைக்க இயன்றது. அவர் மீது மகாகவி பாரதி பாடிய அற்புதமான வாழ்த்துப்பா இது. 

21. மகாமகோபாத்தியாயர்

செம்பரிதி ஒளிபெற்றான்; பைந்நறவு
சுவைபெற்றுத் திகழ்ந்தது; ஆங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று
எவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா
தப்புலவன் குறைவில் கீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல்
பேருவகை படைக் கின்றீரே? 1

அன்னியர்கள் தமிழ்ச்செல்வி யறியாதார்
இன்றெம்மை ஆள்வோ ரேனும்,
பன்னியசீர் மகாமகோ பாத்தியா
யப்பதவி பரிவின் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ்செய் வாரேல்,
முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன்பெருமை மொழிய லாமோ? 2

‘நிதிய றியோம், இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறி யோம்’ என்றுமனம் வருந்தற்க;
குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே. 3

$$$

One thought on “பாரதியின் தனிப்பாடல் – 21

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s