-மகாகவி பாரதி

பக்திப் பாடல்கள்
76. கிளிப்பாட்டு
திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து
வருக வருவதென்றே – கிளியே – மகிழ்வுற் றிருப்போமடி!
வெற்றி செயலுக் குண்டு விதியின் நியமமென்று,
கற்றுத் தெளிந்த பின்னும் – கிளியே – கவலைப் படலாகுமோ?
துன்ப நினைவுகளும் சோர்வும் பயமு மெல்லாம்
அன்பில் அழியுமடீ! – கிளியே – அன்புக் கழிவில்லை காண்!
ஞாயிற்றை யெண்ணி யென்றும் நடுமை நிலை பயின்று,
ஆயிர மாண் டுலகில் – கிளியே – அழிவின்றி வாழ்வோமடீ!
தூய பெருங்கனலைச் சுப்பிர மண்ணி யனை
நேயத்துடன் பணிந்தால் – கிளியே – நெருங்கித் துயர் வருமோ?
$$$