-மகாகவி பாரதி

பக்திப் பாடல்கள்
25. சக்தி திருப்புகழ்
சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தி சக்தி என்றோது,
சக்திசக்தி சக்தீ என்பார் – சாகார் என்றே நின்றோது. 1
சக்திசக்தி என்றே வாழ்தல் – சால்பாம் நம்மைச் சார்ந்தீரே!
சக்திசக்தி என்றீ ராகில் – சாகா உண்மை சேர்ந்தீரே! 2
சக்திசக்தி என்றால் சக்தி – தானே சேரும் கண்டீரே!
சக்திசக்தி என்றால் வெற்றி – தானே நேரும் கண்டீரே! 3
சக்திசக்தி என்றே செய்தால் – தானே செய்கை நேராகும்,
சக்திசக்தி என்றால் அஃது -தானே முத்தி வேராகும். 4
சக்திசக்தி சக்தீ சக்தீ என்றே ஆடோமோ?
சக்திசக்தி சக்தீ யென்றே – தாளங்கொட்டிப் பாடோமோ? 5
சக்திசக்தி என்றால் துன்பம் – தானே தீரும் கண்டீரே!
சக்திசக்தி என்றால் இன்பம் – தானே சேரும் கண்டீரே! 6
சக்திசக்தி என்றால் செல்வம் – தானே ஊறும் கண்டீரோ?
சக்திசக்தி என்றால் கல்வி – தானே தேறும் கண்டீரோ? 7
சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ!
சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ! 8
சக்திசக்தி வாழீ என்றால் சம்பத் தெல்லாம் நேராகும்,
சக்திசக்தி என்றால் சக்தி தாசன் என்றே பேராகும். 9
$$$
26. சிவசக்தி புகழ்
ராகம் – தன்யாசி; தாளம் – சதுஸ்ர ஏகம்
ஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு – கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;
சக்திசக்தி சக்தியென்று சொல்லி – அவள்
சந்நிதியி லேதொழுது நில்லு. 1
ஓம், சக்திமிசை பாடல்பல பாடு – ஓம்
சக்திசக்தி என்று தாளம் போடு;
சக்திதருஞ் செய்கைநிலந் தனிலே – சிவ
சக்திவெறி கொண்டுகளித் தாடு. 2
ஓம், சக்திதனையே சரணங் கொள்ளு – என்றும்
சாவினுக்கோ ரச்சமில்லை தள்ளு;
சக்திபுக ழாமமுதை அள்ளு – மதி
தன்னிலினிப் பாகுமந்தக் கள்ளு. 3
ஓம் சக்திசெய்யும் புதுமைகள் பேசு – நல்ல
சக்தியற்ற பேடிகளை ஏசு;
சக்திதிருக் கோயிலுள்ள மாக்கி – அவள்
தந்திடுநற் குங்குமத்தைப் பூசு. 4
ஓம் சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை – இதைச்
சார்ந்து நிற்ப தேநமக்கொ ருய்கை,
சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை – அதில்
தன்னமுத மாரிநித்தம் பெய்கை. 5
ஓம் சக்திசக்தி சக்தியென்று நாட்டு – சிவ
சக்தியருள் பூமிதனில் காட்டு;
சக்திபெற்ற நல்லநிலை நிற்பார் – புவிச்
சாதிகளெல் லாமதனைக் கேட்டு. 6
ஓம் சக்திசக்தி சக்தியென்று முழங்கு – அவள்
தந்திரமெல் லாமுலகில் வழங்கு;
சக்தியருள் கூடிவிடு மாயின் உயிர்
சந்ததமும் வாழுநல்ல கிழங்கு. 7
ஓம் சக்திசெய்யுந் தொழில்களை எண்ணு – நித்தம்
சக்தியுள்ள தொழில்பல பண்ணு;
சக்திகளை யேஇழந்துவிட்டால் – இங்கு
சாவினையும் நோவினையும் உண்ணு. 8
ஓம் சக்தியரு ளாலுலகில் ஏறு – ஒரு
சங்கடம்வந் தாலிரண்டு கூறு;
சக்திசில சோதனைகள் செய்தால் – அவள்
தண்ணருளென் றேமனது தேறு. 9
ஓம் சக்திதுணை என்றுநம்பி வாழ்த்து – சிவ
சக்திதனையே அகத்தில் ஆழ்த்து;
சக்தியும் சிறப்பும்மிகப் பெறுவாய் – சிவ
சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து! 10
$$$