–மகாகவி பாரதி
தொழிலாளர் நலனில் மகாகவி பாரதிக்கு இருந்த அக்கறையை வெளிக்காட்டும் கட்டுரை இது... ‘சம்பள ஏற்றத்துக்கும் வேலை நேரத்தைக் குறைப்பதற்கும் வேண்டிய யத்தனங்கள் செய்யும் தொழிற்சங்கங்கள், ஆங்காங்கே பள்ளிக்கூடங்கள் ஆயிரக்கணக்காக ஏற்படுத்தி அவற்றில் தம்முடைய மக்களுக்கு நிறைந்த கல்வி யூட்டுவதற்குரிய முயற்சிகள் செய்ய வேண்டும்’ என்கிறார் இந்ந்தக் கட்டுரையில்...

கைத்தொழிலாலே செல்வம் விளைகிறது. அறிவுத் தொழிலால் அது சேகரிக்கப்படுகிறது. கைத்தொழில் செல்வத்தை ஏற்படுத்துகிறது. அறிவுத்தொழில் கைத்தொழிலை நடத்துகிறது. ‘புத்தியில்லாத மூடர்கள் சக்ரவர்த்திகளாகவும்,ராஜாக்களாகவும், பெரிய நிலஸ்வான்களாகவும், முதலாளிகளாகவும் இருந்து பெருஞ்செல்வங்களைக் கையாளுதல் காண்கிறோமே! எனவே, அறிவுத் திறமையாலும், அறிவு முயற்சியாலும் பெருஞ்செல்வம் திரட்டப்படுகிறதென்று சொல்லுதல் எங்ஙனம் பொருந்தும்?’ என்று கேட்பீர்களாயின், அதற்கு உத்தரம் சொல்லுகிறேன்.
பல இடங்களில் இப்போது மூடர்களிடம் செல்வமிருப்பது காண்கிறோமாயினும், இவர்களுக்கு இந்தச் செல்வம் ஏற்படுத்திக் கொடுக்க இவர்களுடைய முன்னோர்களில் அநேகர் அல்லது ஒருவனாயினும் மிகுந்த புத்திசாலியும், அந்த புத்தியைக் கொண்டு சோம்பலின்றி விடாமுயற்சியுடன் உழைப்பவனாகவும் இருந்திருக்க வேண்டும். புத்தி மாத்திரம் இருந்தால் போதாது. அதைக்கொண்டு சோம்பலில்லாமல் விடாமுயற்சியுடன் உழைக்கவும் வேண்டும். அப்போதுதான் செல்வம்சேர இடமுண்டாகும். ‘வெறுமே மிருகபலத்தால் ராஜாக்கள் ஸைந்யங்களின் மிகுதி காரணமாகப் பிற நாடுகளைக் கொள்ளையிட்டு அளவிறந்த பூமியும் செல்வங்களும் சேர்த்ததாகச் சரித்திரங்களில் படித்திருக்கிறோமே. அப்படியிருக்கையில், புத்திநுட்பத்தால் செல்வம் சேர்வதாகச் சொல்லுதல் தகுமோ?’ என்று கேட்பீர்களானால், அதற்கு விடை கூறுகிறேன்.
யுத்தம் மிருகத்தொழிலாக இருந்தபோதிலும், நல்லோர்களால் எவ்வகையாலும் வெறுக்கத்தக்க இழிதொழிலாக இருந்தாலும், அதற்கு மிருகபலம்மாத்திரம் இருந்தால் போதும் என்று நினைப்பது தவறு. யுத்தசாஸ்திரம் என்பது ஒரு பெரிய சாஸ்திரம், அதில் மிருகபலம் கருவி; அறிவு கர்த்தா. ஸாதாரணக் கொள்ளைக் கூட்டங்களிலேகூடத் தலைவனாக இருப்பவன் சிறந்த புத்தி நுட்பமுடையவனாக இருத்தல் இன்றியமையாதது. எத்தனையோ விதமான அறிவுப்பயிற்சிகள் ஆதிகால முதலாகவே யுத்தத்துக்கு அவசியமாக ஏற்பட்டிருக்கின்றன. அதிலும், தற்கால யுத்தங்களோ பல பல துறைகளில் மிகச் சிறந்த அறிவுத் தேர்ச்சி கொண்ட பண்டிதர்களாலே நடத்தப்படுகின்றன.
வியாபாரம், கைத்தொழில் முதலிய ஸமாதான நெறிகளில் செல்வம் சேர்ப்பதற்கு மிக உயர்ந்த புத்தி நுட்பம் எக்காலத்திலும் இன்றியமையாததாக நிகழ்ந்து வந்திருக்கிறது. இக்காலத்தில் இவை புத்தித் திறமையில்லாமல் போனால் ஒருக்ஷணங்கூடத் தரித்து நிற்க மாட்டா.
இந்தச் செய்தியை உணர்ந்தே ஆதிகால முதல் அறிவுப் பயிற்சியுடைய வகுப்பினர் கைத்தொழிலாளிகளுக்குக் கல்வி ஏற்படாதபடியாக வேலை செய்து கொண்டுவந்திருக்கிறார்கள். ‘எழுத்துத் தெரிந்த சூத்திரனை மிகவும் தொலைவில் விலக்கிவிட வேண்டும்’ என்ற விநோதவிதியொன்று மனுஸ்ம்ருதியிலே காணப்படுகிறது.
நம்முடைய தேசத்தில் மட்டுமே யன்று, உலக முழுமையிலும் எல்லா நாடுகளிலும் கைத்தொழிலாளருக்குக் கல்விப் பயிற்சி உண்டாகாத வண்ணமாகவே ஜனக்கட்டுகள் நடைபெற்று வந்திருக்கின்றன.
ஆனால், இந்த சூழ்ச்சியை மீறி, எல்லா நாடுகளிலும், முக்கியமாக, நமது பாரத தேசத்தில்,கைத்தொழில் புரியம் கூட்டங்களைச் சேர்ந்தோரில் பற்பலர் கல்வித் தேர்ச்சியடைந்து வந்திருக்கிறார்கள். ஆனால், இங்ஙனம் கல்விப் பயிற்சி வாய்ந்தோர் பெரும்பாலும் தம்முடைய பரம்பரைத் தொழில்களில் இறங்காமல், சுத்த இலக்கியப் பயிற்சியிலேயே வாழ்நாள் கழிப்பாராயினர்.
எனினும், சென்ற ஓரிரண்டு நூற்றாண்டுக்குள்ளே ஐரோப்பாவில் எல்லா வகுப்பினருக்கும் கல்வி பயிற்றும் முறைமை தொடங்கி வந்திருக்கிறது. இந்த ஸர்வ ஜனக்கல்வி யென்னும் கொள்கை ஐரோப்பாவிலிருந்து உலகத்தின் பிற பகுதிகளிலும் தாவிவிட்டது.
இக்கொள்கையை நமது நாட்டில் நிறைவேற்றிவிட வேண்டுமென்று பல புண்ணியவான்கள் பெருமுயற்சி செய்து வருகிறார்கள்.
இங்ஙனம் எல்லா வகுப்புக்களையும் சேர்ந்த எல்லா மனிதரிடையேயும் கல்வியும் அதன் விளைவுகளாகிய பலவகைப்பட்ட அறிவுப்பயிற்சிகளும் பரவிவிடுமானால், அதினின்றும், கைத்தொழிலாளிகள் கல்விப் பயனைக் காவியங்கள் இயற்றுவதிலும் படிப்பதிலும் மாத்திரமே செலவிடும் வழக்கம் மாறிப்போய், அவரவர் தத்தமக்கு உரிய தொழில்களிலும் கல்வியறிவை பயன்படுத்தத் தொடங்குவார்கள். இதினின்றும் இதுவரை உலகத்தில் கைத்தொழிலாளர் பரம ஏழைகளாக இருந்துவரும் நிலைமை நீங்கி மேன்மேலும் கைத்தொழிலாளருக்குள்ளே செல்வம் வளர்ச்சி பெற்று வர ஹேதுவுண்டாகும்.
இப்போது நமது நாட்டில் ஆங்காங்கே பல தொழிற்சங்கங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டு வருகின்றன. இச்சங்கத்தார்கள் சம்பள ஏற்றத்துக்கும் வேலை நேரத்தைக் குறைப்பதற்கும் வேண்டிய யத்தனங்கள் பல செய்துகொண்டு வருகிறார்கள். இந்தப் பிரயத்தனங்களெல்லாம் முற்றிலும் நியாயமே. இதில் ஐயமில்லை.
ஆனால், இச்சங்கத்தார்கள் மேற்கூறிய வழிகளிலே முயற்சி செய்வதுடன் தமது கார்யங்களை நிறுத்திவிடாமல், ஆங்காங்கே பள்ளிக்கூடங்கள் ஆயிரக்கணக்காக ஏற்படுத்தி அவற்றில் தம்முடைய மக்களுக்கு நிறைந்த கல்வி யூட்டுவதற்குரிய முயற்சிகள் செய்ய வேண்டும். மேலும், பகற்பள்ளிக்கூடங்கள் மாத்திரமே யன்றி இராப்பள்ளிக்கூடங்களும் ஏற்படுத்தி அவற்றில் தொழிலாளிகள் – எல்லாப் பிராயத்தினரும் – சென்று படிப்பதற்குரிய காரியங்களை நடத்த வேண்டும்.
அறிவே வலிமை. கல்வியே செல்வத்தின் தாய். ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் மாமியும் மருமகளும் போல்வர் என்றும், கல்வியுள்ள இடத்தில் செல்வமும், செல்வமுள்ள இடத்தில் கல்வியும் ஏற்படுதல் மிகவும் அரிது என்றும் நமது நாட்டில் பரம மூடத்தனமான கொள்கை யொன்று பரவி நிற்கிறது.
வெறுமே வர்ணனைகளும், கற்பனைகளும் சமைத்து,யாருக்கும் எளிதில் புலப்படாத வலிய நடையில் காவியங்கள் எழுதுவதிலே படித்த படிப்பை யெல்லாம் செலவிடுவோருக்கு அதிகச்செல்வம் சேர மார்க்கமில்லை யென்பது ப்ரத்யக்ஷம்.இந்த அனுபவத்தை ஆதாரமாகக்கொண்டே மேற்படி கொள்கை ஆதிகாலத்தில் உற்பத்தியாயிற்று.
ஆனால், அது இக்காலத்துக்குப் பொருந்தாது. காவியங்களைக்கூட எளிய நடையில் எழுதினால் அச்சுத் தொழிலும் பொதுஜனக் கல்வியும் பரவிவரும் இக்காலத்தில் ஆசிரியர்களுக்கு ஏராளமான லாபம் கிடைக்கும். இது நிற்க.
காவியங்கள் எழுதுவதற்கு மாத்திரம் படிக்காமல், பலவகை வியாபாரங்களுக்கும், தொழில்களுக்கும் வேண்டிய படிப்புகள் படித்து, அவற்றை ஊக்கத்துடன் கையாளுவோருக்கு,மேன்மேலும் செல்வம் பெருகும்.
ஆதலால், தொழிலாளிகளே, கல்விப் பயிற்சி செய்யுங்கள். உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும் கல்வியறிவு மிகுவதற்குள்ள வழி செய்யுங்கள்.
- சுதேசமித்திரன் (28.05.1920)
$$$