பாஞ்சாலி சபதம் – 1.2.10

-மகாகவி பாரதி

விதிவழியில் சூதாட்டம் தொடங்கிவிட்டது. உடனே மகாகவி பாரதியில் கவிதை சந்தம் மாறுகிறது. சூதாட்டத்துக்கே உரித்த துள்ளலான நடையில் தருமனின் வீழ்ச்சியைப் பதிவு செய்கிறார் கவி. சகுனி சார்பாக பணயம் வைக்கும் துரியனிடம் “ஒருவனாடப் பணயம்-வேறே ஒருவன் வைப்ப துண்டோ?” என்று தருமன் கேட்டாலும், மருகன் என்பதால் தனக்கு உரிமையுண்டு என்கிறான் துரியன். அடுத்து மணிமாலை தொடங்கி, ஆடை- ஆபரணங்கள், தேர்கள், யானைகள், குதிரைகள்,  சேவகர்கள், பணிப்பெண்கள், தொண்டர்கள் எனப் பலவற்றை பணயம் வைத்து இழக்கிறான் தருமன். கடைசியில் பணயம் வைக்க ஏதுமில்லாத நிலையில், 'நா டிழக்க வில்லை, -தருமா!நாட்டை வைத்தி'டென்றான்’ சகுனி. 

முதல் பாகம்

1.2. சூதாட்டச் சருக்கம்

1.2.10. சூதாடல்

வேறு

மாயச் சூதினுக்கே-ஐயன்,மன மிணங்கி விட்டான்;
தாய முருட்ட லானார்;-அங்கே சகுனி ஆர்ப்ப ரித்தான்!
நேய முற்ற விதுரன்-போலே நெறியு ளோர்க ளெல்லாம்
வாயை மூடிவிட்டார்;-தங்கள் மதி மயங்கி விட்டார்.      183

அந்த வேளை யதனில்-ஐவர்க் கதிபன் இஃதுரைப்பான்;
‘பந்தயங்கள் சொல்வாய்-சகுனி பரபரத் திடாதே;
விந்தை யான செல்வம்-கொண்ட வேந்த ரோடு நீ தான்
வந்தெ திர்த்து விட்டாய்;-எதிரே வைக்க நிதிய முண்டோ?’       184

தருமன் வார்த்தை கேட்டே,-துரியோ தன னெழுந்து சொல்வான்;
‘அருமையான செல்வம்-என்பால் அளவி லாத துண்டு;
ஒரு மடங்கு வைத்தால்-எதிரே ஒன்ப தாக வைப்பேன்;
பெருமை சொல்ல வேண்டா,-ஐயா! பின் னடக்கு’ கென்றான்.       185

‘ஒருவனாடப் பணயம்-வேறே ஒருவன் வைப்ப துண்டோ?
தரும மாகு மோடா!-சொல்வாய் தம்பி இந்த வார்த்தை?’
‘வரும மில்லை ஐயா;-இங்கு மாம னாடப்பணயம்
மருமகன் வைக் கொணாதோ?-இதிலே வந்த குற்ற மேதோ?’       186

‘பொழுதுபோக்கு தற்கே-சூதுப் போர் தொடங்கு கின்றோம்;
அழுத லேனிதற்கே?’-என்றே அங்கர் கோன் நகைத்தான்.
‘பழு திருப்ப தெல்லாம்-இங்கே பார்த்திவர்க் குரைத்தேன்;
முழுது மிங்கிதற்கே-பின்னர் முடிவு காண்பீர்’என்றான்.       187

ஒளி சிறந்த மணியின்-மாலை ஒன்றை அங்கு வைத்தான்;
களி மிகுந்த பகைவன் -எதிரே கன தனங்கள் சொன்னான்;
விழி இமைக்கு முன்னே-மாமன் வென்று தீர்த்து விட்டான்;
பழி இலாத தருமன்-பின்னும் பந்தயங்கள் சொல்வான்.       188

‘ஆயிரங் குடம் பொன் வைத்தே ஆடுவோ’மிதென்றான்;
மாயம் வல்ல மாமன் -அதனை வசம தாக்கி விட்டான்;
‘பாயுமா வொரொட்டில்-செல்லும் பாரமான பொற்றேர்;
தாய முருட்ட லானார்;-அங்கே சகுனி வென்று விட்டான்.       189

‘இளையரான மாதர்,-செம்பொன் எழிலிணைந்த வடிவும்
வளை அணிந்த தோளும்-மாலை மணி குலுங்கு மார்பும்
விளையு மின்ப நூல்கள்-தம்மில் மிக்க தேர்ச்சி யோடு
களை இலங்கு முகமும்-சாயற் கவினும் நன்கு கொண்டோர்,       190

ஆயிரக் கணக்கா-ஐவர்க் கடிமை செய்து வாழ்வோர்;’
தாய முருட்டலானார்;அந்தச் சகுனி வென்று விட்டான்
ஆயிரங்க ளாவார்-செம்பொன், அணிகள் பூண்டிருப்பார்
தூயிழைப் பொனாடை- சுற்றுந் தொண்டர் தம்மை வைத்தான்;       191

சோரனங் கவற்றை-வார்த்தை சொல்லுமுன்னர் வென்றான்.
தீர மிக்க தருமன்-உள்ளத் திடனழிந் திடாதே,
‘நீரை யுண்ட மேகம்-போல நிற்கு மாயிரங்கள்
வாரணங்கள் கண்டாய்-போரில் மறலி யத்து மோதும்’       192

என்று வைத்த பணயந்-தன்னை இழிஞன் வென்று விட்டான்.
வென்றி மிக்க படைகள்-பின்னர் வேந்தன் வைத்திழந்தான்.
நன்றிழைத்த தேர்கள்-போரின் நடையுணர்ந்த பாகர்
என் றிவற்றை யெல்லாம்-தருமன் ஈடு வைத் திழந்தான்.       193

எண்ணிலாத கண்டீர்-புவியில் இணை யிலாத வாகும்
வண்ணமுள்ள பரிகள் தம்மை வைத் திழந்து விட்டான்;
நண்ணு பொற் கடாரந்-தம்மில் நாலு கோடி வைத்தான்;
கண்ணி ழப்பவன் போல-அவையோர் கண மழிந்து விட்டான்.       194

மாடிழந்து விட்டான்,-தருமன் மந்தை மந்தையாக;
ஆடிழந்து விட்டான்-தருமன் ஆளிழந்து விட்டான்;
பீடிழந்த சகுனி-அங்கு பின்னுஞ் சொல்லு கின்றான்;
‘நா டிழக்க வில்லை,-தருமா!நாட்டை வைத்தி’டென்றான்.       195

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s