-மகாகவி பாரதி
பாண்டவரை சூதுக்கு அழைக்கலாம் என்ற மகனின் சொற்கேட்டு திகைத்த திருதராஷ்டிரன், ‘இது சந்திரகுலத்தில் உதித்த உனக்கு உகந்ததல்ல’ என்கிறார். சதி செய்து வெல்லுதல் வீரமல்ல என்றும் அறிவுரை கூறுகிறார்- செவிடன் காதில் ஊதும் சங்கு போல.

முதல் பாகம்
1.1. அழைப்புச் சருக்கம்
1.1.12. திரிதராட்டிரன் பதில்
வேறு
திரிதராட்டிரன் செவியில்-இந்தத்
தீமொழி புகுதலுந் திகைத்து விட்டான்;
‘பெரிதாத் துயர் கொணர்ந்தாய்;-கொடும்
பேயெனப் பிள்ளைகள் பெற்று விட்டேன்;
அரிதாக் குதல்போலே-அமர்
ஆங்கவ ரொடுபொரல் அவலம் என்றேன்;
நரிதாக் குதல்போலாம்-இந்த
நாணமில் செயலினை நாடுவனோ? 92
”ஆரியர் செய்வாரோ?-இந்த
ஆண்மை யிலாச்செயல் எண்ணுவரோ?
பாரினில் பிறருடைமை-வெஃகும்
பதரினைப் போலொரு பதருண்டோ!
பேரியற் செல்வங்களும்-இசைப்
பெருமையும் எய்திட விரும்புதியேல்,
காரியம் இதுவாமோ?-என்றன்
காளை யன்றோ?இது கருதலடா! 93
‘வீரனுக் கேயிசைவார்-திரு
மேதினி எனுமிரு மனைவியர்தாம்,
ஆரமர் தமரல்லார்-மிசை
ஆற்றிநல் வெற்றியில் ஓங்குதியேல்,
பாரத நாட்டினிலே-அந்தப்
பாண்டவ ரெனப்புகழ் படைத்திடுவாய்;
சோரர்தம் மகனோ நீ?-உயர்
சோமன்ற னொருகுலத் தோன்றலன்றோ? 94
‘தம்மொரு கருமத்திலே-நித்தம்
தளர்வறு முயற்சி மற்றோர்பொருளை
இம்மியுங் கருதாமை-சார்ந்
திருப்பவர் தமைநன்கு காத்திடுதல்,
இம்மையில் இவற்றினையே-செல்வத்
திலக்கணம் என்றனர் மூதறிஞர்
அம்ம, இங்கிதனை யெலாம்-நீ
அறிந்திலை யோ!பிழை யாற்றல் நன்றோ? 95
‘நின்னுடைத் தோளனையார்-இள
நிருபரைச் சிதைத்திட நினைப்பாயோ?
என்னுடை யுயிரன் றோ?-எனை
எண்ணிஇக் கொள்கையை நீக்குதியால்!
பொன்னுடை மார்பகத் தார்-இளம்
பொற்கொடி மாதரைக் களிப்பதினும்
இன்னும்பல் இன்பத்தினும்-உளம்
இசையவிட் டேஇதை மறந்திடடா!’ 96
$$$