-மகாகவி பாரதி

”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று தொல்காப்பியம் கூறும். அந்தச் சொல் மந்திரமாக வேண்டும் என்பார் மகாகவி பாரதி. “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” - என்பதும் தொல்காப்பிய நூற்பா. “நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும்” - என்பார் திருவள்ளுவர். அதனையொட்டி, சொல் ஒன்று வேண்டும்,தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்” என்ற அறிமுகக் குறிப்புடன் இக்கவிதையை எழுதி இருக்கிறார் பாரதி. உள்ளத்தில் தூய்மையும் உறுதியும் பெருகும்போது வெளிப்படும் சொற்களும் மறைமொழியாகின்றன என்பதே இக்கவிதையின் உட்கிடக்கை....
11. சொல்
(சொல் ஒன்று வேண்டும்,தேவ சக்திகளை
நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்).
தேவர் வருகவென்று சொல்வதோ?- ஒரு
செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்,
ஆவ லறிந்துவரு வீர்கொலோ?- உம்மை
யன்றி யொருபுகலும் இல்லையே. 1
‘ஓம்’என் றுரைத்துவிடிற் போதுமோ?- அதில்
உண்மைப் பொருளறிய லாகுமோ?
தீமை யனைத்துமிறந்தேகுமோ?-என்றன்
சித்தம் தெளிவுநிலை கூடுமோ? 2
“உண்மை ஒளிர்க’என்று பாடவோ?-அதில்
உங்கள் அருள்பொருந்தக் கூடுமோ?
வண்மை யுடையதொரு சொல்லினால்-உங்கள்
வாழ்வு பெறவிரும்பி நிற்கிறோம். 3
“தீயை அகத்தினிடை மூட்டுவோம்”- என்று
செப்பும் மொழிவலிய தாகுமோ?
ஈயைக் கருடநிலை யேற்றுவீர்- எம்மை
என்றுந் துயரமின்றி வாழ்த்துவீர். 4
வான மழைபொழிதல் போலவே- நித்தம்
வந்து பொழியுமின்பங் கூட்டுவீர்;
கானை அழித்து மனை கட்டுவீர்- துன்பக்
கட்டுச் சிதறிவிழ வெட்டுவீர். 5
விரியும் அறிவுநிலை காட்டுவீர்- அங்கு
வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்:
தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர்- நல்ல
தீரப் பெருந்தொழிலில் பூட்டுவீர். 6
மின்ன லனையதிறல் ஓங்குமே- உயிர்
வெள்ளம் கரையடங்கிப் பாயுமே;
தின்னும் பொருளமுதம் ஆகுமே- இங்குச்
செய்கை யதனில் வெற்றி யேறுமே. 7
தெய்வக் கனல்விளைந்து காக்குமே- நம்மைச்
சேரும் இருளழியத் தாக்குமே;
கைவைத் ததுபசும்பொன் ஆகுமே- பின்பு
காலன் பயமொழிந்து போகுமே. 8
“வலிமை, வலிமை”என்று பாடுவோம்- என்றும்
வாழுஞ் சுடர்க்குலத்தை நாடுவோம்;
கலியைப் பிளந்திடக் கை யோங்கினோம்- நெஞ்சில்
கவலை யிருளனைத்தும் நீங்கினோம். 9
“அமிழ்தம், அமிழ்தம்” என்று கூறுவோம்- நித்தம்
அனலைப் பணிந்துமலர் தூவுவோம்;
தமிழில் பழமறையைப் பாடுவோம்- என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம். 10
$$$