பாரதியின் ஞானப்பாடல் – 11

-மகாகவி பாரதி

ஈசனும் தானும் ஒன்று என்ற அத்வைதப் பேரனுபவத்தை வெளிப்படுத்தும் அற்புதமான கவிதை இது. சிவோஹம்- நானே சிவம் என்பதை உணர்ந்தவர் ஈசனை அறிகிறார். ஈசன் வேறு எங்கும் இல்லை. ஒவ்வொரு உயிரிலும் உறைந்திருக்கிறார்.

ஞானப் பாடல்கள்

11. பரசிவ வெள்ளம்

உள்ளும் புறமுமாய் உள்ள தெலாந் தானாகும்
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே.       1

காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே.       2

எல்லை பிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுள தென்றறிஞர் என்றுமய லெய்துவதாய்       3

வெட்டவெளி யாயறிவாய் வேறுபல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்.       4

தூல வணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்திற்
சாலவுமே நுண்ணியதாய்த் தன்மையெலாந் தானாகி,       5

தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒரு பொருளாய்த்
தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே.       6

எங்குமுளான் யாவும் வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே.       7

வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமிதே.       8

காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொரு ளாய்
மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே.       9

எல்லாந் தானாகி யிருந்திடினும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே.       10

மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;
பற்றிதனைக் கொண்டார் பயனனைத்துங் கண்டாரே.       11

இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்;
எப்பொருளுந் தாம்பெற்றிங் கின்பநிலை யெய்துவரே.       12

வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே.       13

ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவர்காண்;
என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே.       14

வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா!       15

யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்றுநின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா!       16

எண்ணமிட்ட லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதை யுள்ளே ததும்பப் புரியுமடா!       17

எங்கு நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா!       18

யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா!       19

காவித் துணிவேண்டா,காற்றைச் சடைவேண்டா
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே.       20

சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங்க ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா!       21

தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா!
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தைசெய்தாற் போதுமடா!       22

சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின்றசிவம்,
வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா!       23

நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளுஞ்சிரத்தை யொன்றே போதுமடா! 24

$$$

Leave a comment