-மகாகவி பாரதி

நமது சித்திரத்திலே வலை விரித்திருக்கின்ற தல்லவா? அது கிறிஸ்து மார்க்க வலை. அதைப் பற்றிக்கொண்டு ஒரு வேடன் காணப்படுகிறான். அதுதான் சென்னை லார்ட் பிஷப். இவர் ஹிந்துக்களாகிய பஷிகள் மேற்படி வலையிலே வந்து விழ வேண்டுமென்று எவ்வளவோ பிரயத்தனம் செய்து வலையிலே அனேக தின்பண்டங்க ளெல்லாம் வைத்திருக்கிறார். அவ்வாறிருந்தும், ஹிந்து பஷிகள் மேலே வந்து சுற்றுகின்றனவே யல்லாமல் சரியானபடி வலைக்குள் விழமாட்டோ மென்கின்றன.
அதன் பேரில் இவர் காடு வழியாகப் போய்க் கொண்டிருந்த வேறொரு வேடனை நோக்கி “அண்ணே! உனக்குப் பஷி மந்திரங்கள் ஜாஸ்தியாகத் தெரியும். உன்னுடைய உதவி யிருந்தால் எனக்கு எத்தனையோ பட்சிகள் சேரும். இப்போது பட்சிகள் வந்து விழுவது மிகவும் ஆபூர்வமாக இருக்கிறது. கொஞ்சம் உதவி பண்ணக்கூடாதா?” என்று கேட்கிறார்.
மற்றொரு வேடன் யாரென்றால் சென்னை கவர்னரவர்கள். இந்த வேடன் சொல்லுகிறார்: “தம்பி, உனது வலையிலே பஷிகள் விழுந்தால் எனக்கும் திருப்திதான். ஆனால், நான் உனக்கு மந்திரங்களைச் சொல்லிவிடும் பட்சத்தில் என்னை எனது பெரியார்கள் கோபித்துக் கொள்வார்களே? என்ன செய்வேன்?” என்கிறார்.
அதாவது கவர்னர் கிறிஸ்தவப் பாதிரிகளிடம் மிகவும் அன்பிருந்த போதிலும் பகிரங்கமாக உதவி செய்வது ஸர்க்கார் முறைமைக்கு விரோத மென்பதை அறிந்திருக்கிறா ரென்பது கருத்து.
இந்த வினோத சித்திரம் நாம் சென்ற வாரம் பிரசுரம் புரிந்த ‘சென்னை கவர்னரும் சென்னை பிஷப்பும் செய்த கிறிஸ்து மார்க்கத்து உபதேசம்’ என்ற குறிப்பைத் தழுவியது.
எஸ்.பி.ஜி. காலேஜில் நடந்த வருஷாந்த சபையிலே சென்னை கவர்னரும் பிஷப்பும் சொல்லிய வசனங்களை அந்தக் குறிப்லே விஸ்தாரமாக எழுதி யிருக்கிறோம். எனினும், ஞாபகார்த்தமாக மேற்படி வசனங்களை இங்கு மறுபடியும் குறிப்பிடுகின்றோம்.
கவனர் தாம் செய்த பிசங்கத்தினிடையே, “தாம் கிறிஸ்து மார்க்கதைச் சேர்த்தவ ராதலால், தமது தேசத்திலிருந்து ஆண்களும், பெண்களுமாகிய பல பாதிரிக் கூட்டத்தார், எவ்வித உலக நலத்திலும் இச்சை யற்றவர்களாய், பரோபகார சிந்தை கொண்டு இந்நாட்டுக்கு வந்து கிறிஸ்து மார்க்க போதனை செய்வது பற்றி அவர்கள் மீது தமக்கு மிகுந்த அன்பு விளைகிறதென்றும், நிர்க்கதியாக வாழும் மனுஷ ஜாதிக்கு இவ் வுலகத்தில் உண்மையான நன்மை கிடைப்பதற்குக் கிறிஷ்து மார்க்கம் ஒன்றே தகுதியான வழி” யென்றும் சொன்னார்.
அப்பால் லார்டு பிஷப், “மதராஸ் கவர்ன்மெண்டாரே ஆரம்பத்தில் முதலாம் சுதேசியைக் கிறிஸ்து மார்க்கத்திலே சேர்த்தார்கள். 1624-ம் வருஷத்தில் மசூலிப்பட்டணத்திலே கிறிஸ்து மார்க்க சம்பந்தமான பாதிரித் தொழிலுக்குக் கவர்ன்மெண்டாரே அஸ்திவாரம் போட்டார்கள். அந்த மாதிரி நற்காலம் இப்பொழுது திரும்புமானால் இந்தப் பள்ளிச்கூடத்திலிருந்தே ஏராளமான பிள்ளைகளைக் கிறிஸ்து மார்க்கத்தில் சேர்ந்து விடலாம்” என்றார்.
கிறிஸ்து மார்க்கத்திற்கு விரோதமாக எழுத வேண்டுமென்ற நோக்கம் நமக்குச் சிறிதேனும் கிடையாதென்பதையும், கவர்னரும் லார்ட் பிஷப்பும் மேற்கண்டவாறு பேசியது தப்பென்பதே நமது அபிப்பிராய மென்பதையும் இங்கு மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறோம்.
-இந்தியா (06.04.1907)
$$$