என்னே கொடுமை!

-மகாகவி பாரதி

சுதேசமித்திரன் இதழில் 1906-இல் வெளியான கவிதை இது. இக்கவிதை எழுதியதற்கான குறிப்பையும் முதலிலேயே குறிப்பிடுகிறார் மகாகவி பாரதி.

(பூர்வ காலத்தில் அர்ஜூனாதிகள் செய்ததாகப் புராணங்களிலே கூறப்படும் அம்புத் தொழில் முறைகளைப் பின்பற்றி இரண்டு ரஜபுத்திரர்கள் செய்த அற்புதமான துப்பாக்கி வித்தைகளை நோக்கும்போது உள்ளத்திலெழுந்த சில எண்ணங்கள்)

.

மல்லார் திண்டோட் பாஞ்சாலன்

   மகள் பொற்கரத்தின் மாலுற்ற

வில்லால் விஜயன் அன்றிழைத்த

   விந்தைத் தொழிலை மறந்திலிரால்

பொல்லா விதியால் நீவிரவன்

   போர்முன்னிழைத்த பெருந்தொழில்கள்

எல்லா மறந்தீ ரெம்மவர்காள்

   என்னே கொடுமை யீங்கிதுவே! 1

.

வீமன் திறலு மவற்கிளைய

   விஜயன் திறலும் விளங்கிநின்ற

சேமமணிப்பூந் தடநாட்டில்

   சிறிய புழுக்கள் தோன்றி வெறுங்

காம நுகர்தல் இரந்துண்டல்

   கடையாம் வாழ்க்கை வாழ்ந்து பினர்

ஈமம் புகுத லிவைபுரிவார்

   என்னே கொடுமை யீங்கிதுவே!   2

.

சுதேசமித்திரன் (4-4-1906)
ஆதாரம்: பாரதி தமிழ்- பக்கம் 16

$$$

Leave a comment