-கவியரசு கண்ணதாசன்

இல்லறம் என்பது இரட்டைத் தண்டவாளம் போன்றது. இதில் ஆண்- பெண் இருவரிடையே தனிப்பட்ட அகந்தை ஏற்படுவது குடும்ப நலனுக்கு உகந்ததல்ல. இதனை அழகாக வெளிப்படுத்திய படம் சூரியகாந்தி. குடும்பநலனுக்காக பெண்கள் தங்களை அர்ப்பணித்து பணிபுரிவதை ஏற்கத் தயங்கும் ஆண்கள் இப்போதும் உண்டு, அவர்களுக்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இப்படத்தில், கவிஞர் கண்ணதாசனே ஒரு கதாபாத்திரமாக வந்து இப்பாடலைப் பாடுகிறார். அற்புதமான சிந்தனையுடன் கூடிய இப்பாடல் காலத்தை வென்று வாழும் திரைக் கவிதை.
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே…
கருடன் சொன்னது… அதில் அர்த்தம் உள்ளது!
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்!
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும்கூட மிதிக்கும்!
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது…
அதில் அர்த்தம் உள்ளது!
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே..
கருடன் சொன்னது… அதில் அர்த்தம் உள்ளது!
வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்!
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?
உனைப் போலே அளவோடு உறவாட வேண்டும்…
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது… அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே…
கருடன் சொன்னது.., அதில் அர்த்தம் உள்ளது!
நீயும் நானும் சேர்ந்திருந்தோம்… நிலவு வானம் போலே!
நான் நிலவு போலத் தேய்ந்து வந்தேன்… நீ வளர்ந்ததாலே!
என் உள்ளம் எனைப் பார்த்து கேலி செய்யும்போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது?
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது!
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே..
கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது!
படம்: சூரியகாந்தி (1973) இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடகர்: டி.எம்.சௌந்தர்ராஜன்
$$$